Post by uma2806 on Jun 30, 2014 13:03:45 GMT 5.5
ஆகாயத்தில் ஆரத்தி காட்டி
அஞ்சலை துப்புறவு தொழில் செய்பவள். அவளை வறுமை கடுமையாக வாட்டியது. அவளுக்கு இரண்டு செல்வங்கள். 1984ம் வருடம், நடமாடும் தெய்வமாம் காஞ்சி மஹான் பாரதமெங்கும் தமது புனித யாத்திரையை மேற்கொண்ட போது இந்தப் பெண் வசிக்கும் கிராமத்திற்கும் விஜயம் செய்தருளினார்.
மஹானைப் பற்றி தெரிந்து கொள்ளும் சூழ்நிலையில் அவள் இருக்கவில்லை. ”நம்ம ஊருக்கு ஒரு சாமியார் வந்து தங்கி இருக்காரே, அவரைப் பார்த்துவிட்டு வரலாம்” என்று நடமாடும் தெய்வம் முகாமிட்டு இருந்த இடத்திற்கு வந்தாள்.
தன்னுடன், தன் இரு பாலகர்களையும் அழைத்துச் சென்றிருந்தாள்.
பக்தை என்று குறிப்பட முடியாத அந்த நிலையில் ஏதோ பார்வையாளராய் வந்தவள், மஹானைப் பார்த்து வணங்கிவிட்டு தன் பிள்ளைகளோடு நகர எத்தனித்தாள். “பேர் என்ன கேளு” மஹான் உத்தரவு. “அஞ்சலைங்க” என்று சொன்ன அவள், தான் செய்யும் தொழிலையும் சொல்லி, தனக்கு இரு பிள்ளைகள் என்று ஒப்புவித்து விட்டு நகரும் நிலையில்தான் அப்போதும் அவள் மனநிலை இருந்தது.
“அவளைக் கூப்பிடு” சென்றவளை தெய்வம் அழைத்தது. அவள் வந்தாள் – பயம் ஒரு பக்கம்.
“உன் பேரு அஞ்சலைன்னு சொன்னியே……. நீ எதுக்கும் பயப்படமாட்டாயோ?” என்று அன்பும் குறும்பும் கலந்து காருண்ய மூர்த்தியின் வினா எழுந்தது.
அஞ்சலை மஹானின் தீட்சண்ய பார்வையால் ஆட் கொள்ளப்பட்டு அப்போது பரம பக்தையின் நிலைக்குத் தள்ளப்பட்டாள்.
விளையாட்டாக மஹான் இன்னொரு கேள்வியைக் கேட்க பக்தைக்கு வறுமையின் வேதனையிலும் சிரிப்புதான் வந்தது.
அந்தக் கேள்வி..
“உன் இரண்டாவது மகன் டில்லியிலா வேலை பார்க்கறதா சொன்னே?”
அந்த இரண்டாவது பையன், அஞ்சலையின் பக்கத்தில் புடைவைத் தலைப்பை விடாமல் பிடித்தபடி கிழிந்த நிக்கரும், அழுக்கான சட்டையும் மூக்கில் ஒழுகலுமாக பாலகனாகக் காட்சி தந்து கொண்டிருந்தான்.
இந்தக் கேள்வியைக் கேட்டு அஞ்சலை பதில் சொல்ல முடியாமல் நின்றாள்.
மஹான் அவளுக்குப் பூரண அனுக்கிரகம் பொழிந்து அனுப்பினார்.
அப்போதே மஹானை மனதில் இருத்திக் கொண்ட அந்த பக்தை, தன் இரண்டாவது பிள்ளையைப் பற்றிக் கேட்பதன் உட்பொருள் என்னவாக இருக்கும் என்கிற சிந்தனை துளியும் இல்லாமல் ‘மஹா பெரியவா பக்தி’ என்னும் அருள் மட்டுமே அவளுக்குப் பெரிதாகத் தெரிந்தது.
தினமும் குளித்து முடித்துவிட்டு கற்பூரத்தை வெளியே சூரியனுக்குக் காட்டுவாள். மனம் நிறைய மஹான் இடம் பெற்றிருந்தார். அவர் படம் கூட அவள் வீட்டில் இல்லை. தனக்கு அந்த அருகதை இல்லை என்று தன்னை சமாதானம் செய்து கொண்ட அவள், எந்த பக்தருக்கும் தோன்றாத எண்ணமாய் எங்கும் வியாபித்திருக்கும் மஹானை, ஆகாயத்தில் ஆரத்தி காட்டி ஆராதிக்கும் மனப் பக்குவத்தில் இருந்தாள்.
வாழ்க்கையில் படிப்படியாக வந்த சிரமங்களை பயமில்லாமல் எதிர்கொண்ட அஞ்சலை, சுமார் 25 வருடங்களுக்குப் பிறகு 2008-ஆம் ஆண்டு திரும்பவும் அந்த ஊருக்கு ரதயாத்திரையாக மஹானின் உற்சவ மூர்த்தி வந்தடைந்தபோது பேரானந்தம் அடைந்தாள்.
“பெரியவர் நம்மை விட்டுப் போகவே இல்லை; அப்படி நினைக்கிறவங்க அந்த தெய்வத்தைப் புரியாதவங்க. இந்த ரதத்திலே மெய்யாலுமே அவரு வந்திருக்காருன்னு நான் நிச்சயமா சொல்வேன்” என்று ரதயாத்திரையோடு சென்றவர்களிடம் தனது பக்தியை அஞ்சலை சொன்னாள்.
அவளுக்குப் பக்கத்தில் இருபத்தியேழு வயது நிரம்பிய அவளது இளைய மகன் – கிராமத்திற்கு வந்திருக்கிறான் – மஹான் ஆசி வழங்கிய பாலகன் இவன் தான். மஹான் சொன்னபடி அவன் தலைநகர் தில்லியில் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தில் அதிகாரியாக இருக்கிறான். இப்போது அவனது மகனுக்கு முடி இறக்க கிராமத்திற்கு வந்திருக்கிறான். இதை அவள் விபரமாகச் சொன்னபோது அன்றே அவன் டெல்லியில் வேலை பார்ப்பதாகச் சொன்ன மஹானின் அருளாசியை நினைத்து ஊர்வலத்தில் சென்ற பக்தர்கள் பரவசமடைந்தனர்.
மஹானே நேரில் வந்துவிட்டார் என்று ரதத்தை நோக்கிக் கை கூப்பிய அஞ்சலையைக் கண்டு பக்தர்கள் மெய்சிலிர்த்தார்கள். இன்று இந்த அஞ்சலையைப் போன்ற பக்தர்கள் உலகமெங்கும் இருக்கிறார்கள் என்பதை நம்மால் மறுக்க முடியாது.
ஜய ஜய சங்கர! ஹர ஹர சங்கர!!