Post by anusham163 on Jul 5, 2013 12:43:57 GMT 5.5
நெஞ்சிற் குடிகொண்ட நீல மேனியும்.
ஞானப்பாதையிலே செல்லும் ஒரு மாணவனுக்கு அகக்கண்ணின் முன்னே தோன்றி நிலைத்து நிற்கிற நீல ஒளியை இங்கே ‘நெஞ்சிற்குடி கொண்ட நீல மேனி’யாகக் கூறுகிறார் அவ்வையார். ‘குடிகொள்வது’ என்பது அதனுடைய நிலைத்த தன்மையை, இந்த நீல ஒளியின் மயமாக மாணவனுடைய பயிற்சி இயங்க இயங்க, ஞான தேகமாகிய நீலமேனி பரிணமிக்கிறது.
சித்தர்களுடைய ஞானக்கல்வியிலே இந்த மனித உடம்பிலுள்ள இரண்டு உறுப்புக்கள் சிறப்பாகப் பேசப்பெறுகின்றன. அவை, மூளையின் முன்புறமுள்ள பிட்யூட்டரி சுரப்பியும், பின்புறமுள்ள பினியல் சுரப்பியும் ஆகும்..
சித்தர்களுடைய மொழியிலே, முன்புறத்தைத் தத்புருட முகம் என்றும், பின்புறத்தை சத்தியோஜாத முகம் என்றும் அழைப்பது மரபாகும்..
தத்புருடம் என்பது ஞான உலகின் செயலை உணர்த்தும் சக்தி. பின்புறமுள்ள சத்தியோஜாதம் என்பது பேரறிவும், திருவருளும் இணைந்து உருவான ஞான உயிர். முகத்தின் முன் தோன்றுகின்ற நீல ஒளி குண்டலினியின் நுட்பநிலை. இந்த நீல ஒளியே அருட்சத்தியின் வெளியீடாம்.
பின்மூளையில் பினியல் சுரப்பியின் இயக்கமும், முன்மூளையில் பிட்யூட்டரி சுரப்பியின் ஆற்றலும் இனைந்த நிலையிலேயே நீலெ ஒளி உதிக்கிறது. இந்த ஒளியை உதிக்கச்செய்யும் பயிற்சிதான் சித்தர்களின் இலக்கியத்திலே உள்ள ஆழமான மிகப்பெரிய ஆன்மீகக் கல்வ் இயாகும். இதையே சீலாங்க வேதம் என்றும், கூத்தனுடைய நடனத்தின் உட்பொருள் என்றும் ஞானிகள் அழைக்கிறார்கள். இந்த அரிய பெரிய பயிற்சியைக் கற்பிப்பதற்காகவே தான் மாற்றுடல் எடுத்து வந்ததாகத் திருமூலர் பாடுகிறார்.
மாலாங்க னேயிங்கு யான் வந்த காரணம்
நீலாங்க மேனியின் நேரிழை யாளோடு
மூலாங்க மாக மொழிந்த திருக்கூத்தின்
சீலாங்க வேதத்தைச் செப்பவந் தேனே.
திருமூலருடைய இந்தத் திருமந்திரத்தோடு அவ்வையின் அகவலில் உள்ள ஒளியின் நுட்பத்தை ஒப்பிட்டுப் பார்த்தோமானால், உமையே நீல ஒளியாகிய சக்தி என்பது புலப்படும். ஞானிகள் என்போர் இந்த ஒளியைத் தொடர்ந்து சென்று பேரறிவுக் காட்சிகளைக் கண்டு துய்த்தவர் என்பதும் தெளிவாகும்.
சித்தர் ஞானத்தின் கொடுமுடியாகிய அறிவு இதுவேயாகும், நீல ஒளியின் காட்சி! இதைத்தான் பிறிதோர் இடத்திலே திருமூலர் பாடுகிறார்.
ஆங்கது சேரும் அறிவுடை யோர்க்குத்
தூங்கொளி நீலம் தொடர்தலும் ஆமே!
உட்கிடை என்னவென்றால், நீல ஒளி என்பது பராசக்தி; அகண்டஒளி என்பது சிவம். இவ்விரண்டினுடைய இணைப்பினால் ஏற்படுகின்ற மகவே ஞானவடிவமாகிய விநாயகன். எனவே அவனுடைய மேனி நீலமேனியாம். இந்த நீலமேனியைக் காண்பவர்க்கு மரணமில்லாப் பெருவழ்வு கிட்டுகிறது. என்பதைத் திருமந்திர நூலில் பல இடங்களில் நாம் காணுகிறோம்.
‘நெஞ்சிற் குடிகொண்ட நீலமேனி’ என்பதனால் இத்தொடர் மனஉடலின் ஆன்ம சக்தியை உருவகிக்கிறது என்பதைப் புரிந்துகொள்ளவேண்டும்.
இன்னும் வரும்………………