Post by anusham163 on Apr 10, 2013 12:47:23 GMT 5.5
ஐந்து கரங்களில் மிகவும் முக்கியமானது தும்பிக்கை என்பது வெளிப்படையாகும். யானையின் உருவத்திலேயே உயர்தனிச் சிறப்பு அதன் தும்பிக்கையே ஆகும். வேறு எந்த விலங்குக்கும் அல்லது மனிதப் பிறவிக்கும் இல்லாத ஓர் இயல்பு தும்பிக்கைக்கு உள்ளது. அது என்னவென்றால், கையே மூக்காக அமைந்த பண்பாகும். அதனோடு கூட இந்தத் துதிக்கையானது நிலம் வரை தொடுகின்ற அளவு நீளமுடையதாகவும், வெளி மண்டலத்தில் சென்று நீட்டும் அளவுக்கு உயரக் கூடியதாகவும் அமைந்திருக்கிறது. அதனோடு எப்பொழுதும் காற்று இழைந்துகொண்டு இருப்பதாகவும் இது அமைந்திருக்கிறது. இக்காரணம் பற்றியே யோகிகள் தங்களுடைய காற்றுப் பயிற்சியை உள்ளடக்கி, வானமும் பூமியும் தொடுகின்ற சரஞானத்திற்கு தும்பிக்கையை உருவகமாக எடுத்துப் பேசுகிறார்கள். ஆகையினால் விநாயகருடைய திருவுருவத்தில் யோகிகளுக்குத் தும்பிக்கை மிக மிக முக்கியமான ஞான உறுப்பாக அமைந்து விளங்குகிறது. பல சரநூல்கள் இவ்வுண்மையை வலியுறுத்துகின்றன.
விநாயகருடைய கொம்புகளிலே ஒடிந்த கொம்பு அபரஞானமாகிய விந்துவையும், மற்ற ஒற்றைக்கொம்பு நிலையான பரம்பொருளை உணர்வதற்கு உரிய சாதனமாகிய பரஞானத்தையும் உருவகப்படுத்துகின்றன. சில பெரியோர்கள் இந்த இரண்டு கொம்புகளையும் பதிஞானம், பாசஞானம் என்றும் கூறுகிறார்கள். பாசஞானம் வலது கொம்பாகிய ஒடிந்த கொம்பு.
விநாயகருடைய அகன்ற செவிகள் இரண்டும் பிறவியின் வினை வெம்மையை அணுகவிடாமல் காக்கின்ற அருட்காற்றை வீசுகிற விசிறிகளாம். இந்த அகன்ற செவிகள் எல்லவற்றையும் அறியும் பேரறிவை உணர்த்தி, வினை வெம்மையைத் தணிக்கின்ற ஞானப்பெரும் சாதனங்கள் என்று சித்தர் இலக்கியம் பேசுகின்றது.
விநாயகருடைய மூன்று கண்கள், சூரியன், சந்திரன், அக்கினி ஆகிய மூன்றுமாம்.
யானையின் உருவம் பெரிதாக இருப்பினும் அதன் கண்கள் மிகச் சிறியனவாயாக அமைந்திருப்பதின் நுட்பம் சிந்தித்தற்கு உரியது. பெரிய உறுப்புகள் பருப்பொருள்களையும், சிறிய உறுப்புக்கள் நுண்பொருளையும் குறிப்பது சித்தர் ஞானத்தின் அடிப்படையான உருவக உத்தியாகும். இந்த முறையிலே சிறிய கண்கள் நுட்பமான ஞான ஆற்றலை உணர்த்துகின்றன என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும்.
விநாயகருடைய உருவத்திலே, உந்தியிலும், மார்பிலும், கழுத்திலும், நெற்றியிலும், உச்சியிலும் பாம்பு படம் விரித்து நிற்பது, குண்டலினி அந்தந்த நிலைகளிலே இயங்குகிற உண்மையை நுட்பமாக உணர்த்துகிறது.
இனி, விநாயகர் எலிவகையில் ஒன்றான மூஞ்சூறு என்னும் நொய்ம்மையான பிறவியின் மேல் அமர்ந்திருப்பதன் நுட்பம் மிகவும் சிறப்பானதாகும். இவ்வளவு பெரிய உருவம் இவ்வளவு சிறிய உருவத்தின் மேல் எப்படி அமர்வது, எப்படி நகர்வது என்பவற்றைச் சிந்திக்க வேண்டும். சித்தர்கள் விநாயகரை ஞான ஆற்றலின் உருவமாக வழிபடுவதின் மரபுக்கு இதுவே ஆதாரமாகும். ஞான ஆற்றல் என்பது பருப்பொருளைப்போன்று எடையுள்ள பொருள் அன்று. எண்ணங்களும் கருத்துக்களும், சிறிய கம்பியிலே இவர்ந்து செல்கின்ற மின்சார ஆற்றலைப் போன்றவையாகும். இன்னும் நுட்பமாகச் சொல்வதென்றால், மின்சாரத்தைப் போன்று சிறிய கம்பி கூட அதற்குத் தேவையில்லை. ஒலி, ஒளி ஆகிய இரண்டு ஆற்றல்களுக்குமே கம்பி இருந்தும் இல்லாமலுங்கூட இயங்குகின்ற தன்மை இருப்பதைக் காண்கிறோம்.
வானொலி என்ற ஒலிப்பெட்டி, பிடித்து வாங்கிக் கொள்கிற ஒலி அலைகள் கம்பியில் இருந்து புறப்பட்டு, பின்னர் கம்பியில்லாத வான்துகளிலே பரவுகின்றன. தொலைக்காட்சி என்னும் ஒளி ஆற்றலும் இவ்வாறே நொய்ம்மையான முறையில் இவர்வதை இன்று காண்கிறோம். கனம் அல்லது எடை என்பதே இல்லாத மிகவும் நொய்ம்மையான ஒலி ஆற்றல், ஒளி ஆற்றல் ஆகிய இரண்டையும் விட மேலும் நொய்ம்மையானது எண்ணத்தின் ஆற்றல்.
அதையும் விட நொய்ம்மையும் நுட்பமும் வாய்ந்தது ஆன்ம ஆற்றல். இந்த ஆற்றலின் வடிவமான விநாயகர் மூஞ்சூற்றையே தமது வாகனமாகக் கொண்டு காட்சி தருகிறார்.
தொடரும்…….