Post by anusham163 on Mar 22, 2013 18:05:13 GMT 5.5
விதி என்றும், வினை என்றும், ஊழ் என்றும் பல சொற்களிலே பிறவியின் சட்டத்தையும், அமைப்பையும் அழைக்கிறோம். இந்த விதியை மாற்றவே முடியாது என்றும், பிறக்கும் பொழுதே நாம் கொண்டுவருகிற வாழ்க்கையின் அமைப்பு முறை அது என்றும், இந்து சமயத்தின் எல்லா பிரிவினர்களும் சொல்கிறோம். அவ்வாறே சாக்கியரும், சமணரும் கூறுகிறார்கள். சமண காப்பியமாகிய சிலப்பதிகாரம் ‘ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும்’ என்றே பாடுகிறது. சாக்கிய காப்பியமாகிய மணிமேகலையும் இங்ஙனமே வற்புறுத்துகிறது.------------------------------இந்த முறையிலேயே இராமாயணக் காப்பியமும் மற்றைப் பழம்பெரும் காப்பியங்களும் ஊழ்வினையை வற்புறுத்துகின்றன.
நமது நாட்டில் மட்டுமல்லாமல் எகிப்து, பாரசீகம் போன்ற நாடுகளிலும் ஊழ்வினையின் விளைவைப் பற்பல காப்பியங்களாக உலகப் பெரும் கவிஞர்கள் வடித்துத் தந்திருக்கிறார்கள். பாரசீகக் கவிஞன் உமர்கய்யாம் மிக அழகாகப் பாடுகிறான்,
The moving finger writes, and, having writ
Moves on; nor all thy piety nor wit
Shall lure it back to cancel half a line,
Nor all thy tears wash out a word of it.
‘அயன் நம்முடைய தலையிலே உலக்கையினால் எழுதி விட்டான், அன்று எழுதிய எழுத்தை அழித்து எழுத முடியாது’ என்று ஓங்கி அடித்து விட்டான் உமர்கய்யாம்.
ஆனால், நமது தமிழ்நாட்டு ஞானிகள் அப்படிச் சொல்லவில்லை. அருணகிரியார் பாடுகிறார்,
அவன் கால் பட்டழிந்ததிங்கு என் தலைமேல் அயன் கையெழுத்தே!
முருகப்பெருமானுடைய திருவடியிலே என் தலையைக் கொண்டு வைத்தேன். என்ன ஆயிற்று? ‘அவன் கால்பட்டு அழிந்தது அயன் எழுதிய என் தலையெழுத்து’ என்று ஒரே உறுதிப்பாட்டோடு பாடுகிறார் அருணகிரியார். ------------------
ஆகவே, அன்று எழுதிய எழுத்தை அழிப்பதற்குரிய உபாயம் ஒன்று இருக்கிறது, அதுவே திருவடிப்பேறு என்றாகிறது அல்லவா?
இந்தத் திருவடிப்பேறு நமக்கு எப்படிக் கிடைக்கும்? எல்லாருடைய தலையிலும் எல்லா எழுத்தும் அழிந்துவிடுமா? அந்தத் தலையை அந்தத் திருவடியில் எப்படி வைப்பது? அதன் அணுகுமுறை என்ன?
இந்தக் கேள்விகளுக்கு விடை சொல்வது போல் அமைந்துள்ள நூல்களே அவ்வையின் குறளும், அவ்வையின் அகவலுமாம். ஏனென்றால், இந்த விதியை வெல்லும் வழிதான் சித்தர்களுடைய ஞானம். இதற்குரிய பயிற்சி நூல்களே இவை இரண்டுமாம். இந்தச் சாதனையை இவை எப்படிச் செய்கின்றன?
ஏற்கெனவே வரையறை செய்துவிட்ட வாழ்க்கையின் விதி அமைப்பை, ஞானம், பக்தி ஆகிய இரண்டு விதத்திலும் மாற்றலாம் என்று சித்தர் இலக்கியங்கள் கூறுகின்றன. இந்த முறைகளை ஆராய்வதற்கு உறுதுணையாக விதியைப்பற்றிய கொள்கையைப் பார்த்தது போலவே, காலம் என்ற தத்துவத்தையும் விஞ்ஞானக் கண்கொண்டு பார்க்கவேண்டியது அவசியமாகும்.
காலம் என்ற கணக்கின் தத்துவத்தை நுணுகி ஆராய்ந்துள்ள இன்றைய மேனாட்டு அறிவியற்தத்துவ ஞானிகள், காலத்தை மூன்று கொள்கைகளிலே பேசியிருக்கிறார்கள்.-----------
மனித வாழ்வின் நிகழ்ச்சிகள் ‘CAUSE and EFFECT’ என்ற ‘காரணமும் விளைவும்’ என்ற சட்டப்படி, காலம் செல்கிறது என்பது முதலாவது கோட்பாடு. அதாவது, ‘விரை ஒன்று போட, சுரை ஒன்று முளைக்காது’ என்றும், ‘வினை விதைத்தவன் வினை அறுப்பான், தினை விதைத்தவன் தினை அறுப்பான்’ என்றும், நாம் சொல்கிற ஊழ்வினையும் அதன் பயனும் இந்தக் கோட்பாட்டின்பாற்பட்டவை. இறந்த காலத்தின் வினை நிகழ்காலத்தையும் வருங்காலத்தையும் பிணைக்கின்ற விளைவாக முளைக்கிறது என்பதுவே காலம் பற்றிய இந்த முதலாவது கொள்கையின் விளக்கம். இந்து சமயம், சமணம், சாக்கியம் முதலிய மதநூல்களான காப்பியங்கள் வற்புறுத்துவதும் இதுவேயாகும்.
காலம் பற்றிய இரண்டாவது கோட்பாடு ‘The Dimensional Theory’ என்கின்ற காலப்பாதை என்னும் சித்தாந்தமாகும். இதுவே நான்காவது பரிமாணம் என்று அழைக்கப்படுகின்ற ‘Fourth Dimension’ என்னும் காலப்பாதை என்பது. அதாவது, நீளம், அகலம், ஆழம் அல்லது உயரம் என்னும் மூன்று அளவைகளோடு, காலம் என்பது நான்காவது அளவையாகும். இதுவே காலப்பாதை என்பது.
கருத்து என்னவென்றால், காலம் என்ற பாதையில் நாம் நடந்து செல்கிறோம். நம்முடைய வாழ்வின் நிகழ்ச்சிகள் அவ்வப்போது புதிதாக உண்டாவதில்லை; ஏற்கெனவே காலப்பாதையிலே அங்கங்கே இந்த நிகழ்ச்சிகள் ஒத்திகை செய்யப்பட்டு நம் வரவுக்காகக் காத்து நிற்கின்றன. அவை நடப்பதில்லை; நாம் நடந்து சென்று அவற்றை சந்திக்கிறோம்! இதுவே காலத்தைப்பற்றிய இரண்டாவது கோட்பாடு. திருமூலர் இதனையே
‘போகின்ற காலங்கள் போவதில்லையாம்’
என்கிறார்.
இனி காலத்தைப்பற்றிய மூன்றாவது கோட்பாடு; இதற்கு ‘The Circular Theory’ என்று பெயர். அதாவது காலம் என்பது ஒரு சக்கரம்; ஆழி அல்லது சுழல்வட்டம். அது நில்லாது, சோராது, ஓயாது, சுழன்று கொண்டே இருக்கிறது! நிகழ்ச்சிகள் எல்லாம் அந்தச் சுழற்சியிலே மாறி மாறி வட்டமிட்டு வருகின்றன. பிள்ளைப்பெருமாள் ஐயங்கார் தமது அஷ்டப்பிரபந்தத்தில் ‘காலத் திகிரி’ என்றே அழைக்கிறார்.
‘காலத் திகிரி தலைநாளில் இட்ட கோலங்களே’
என்றே பாடுகிறார். திருமூலரும் காலச்சக்கரம் என்றே அழைக்கிறார்.
இன்றைய அறிவியல் ஞானிகள் இந்தக் காலவட்டக் கோட்பாட்டிலே என்ன சொல்கிறார்களென்றால், ஒரே நிகழ்ச்சியானது பல்லாயிரம் ஆண்டு இடைவெளிக்குப் பிறகு மீண்டும் திரும்ப முன்போலவே அப்படியே நடக்கிறது. பிறகு இதே இடைவெளிக்குப்பின் மறுபடியும் நடக்கிறது. மீண்டும் மீண்டும் நடைபெருகிறது.
‘History repeats itself’ வரலாறு மீண்டும் மீண்டும் திரும்புகிறது. அதாவது, இன்று நாம் இருவர் இந்த இடத்தில் இப்போது சந்திக்கிறோம் என்றால், இதேபோன்று நாம் இருவரும் இதற்கு முன்பு இதே இடத்தில் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் சந்தித்தோம்; மறுபடியும் நாம் இருவரும் இதே போன்று பல்லாயிரம் ஆண்டுகளுக்குப் பின்னர் இதே இடத்தில் இவ்வாறே சந்திப்போம். இது ஒரு தொடர் நாடகம். இடைவெளிவிட்டு மீண்டும் மீண்டும் நடைபெறுகிற ஒரு சங்கிலித்தொடர் நிகழ்ச்சி இது. இதுவே காலவட்டம் என்ற சுழற் தத்துவம்!
தொடரும்…….