Post by anusham163 on Mar 20, 2013 16:48:21 GMT 5.5
விநாயகர் அகவல்.
அனைத்து மஹாபெரியவாளின் பக்தர்களுக்கு என் நமஸ்காரங்கள். மஹாபெரியவளின் மனத்தில் ஒரு தனி இடத்தைப் பிடித்துக் கொண்டிருந்தவர் பிள்ளையார் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. தெய்வத்தின் குரல் ஒவ்வொரு பாகமும் தொடங்குவது பிள்ளையரைப் பற்றிய விஷயங்களிலும் கதைகளிலும் தான். பிள்ளையாரைப்பற்றின மிக முக்கிய சுலோகங்களில் ஒன்று விநாயகர் அகவல்; அவ்வையார் இயற்றியது. அனேகமாக எல்லோருடைய தினப்படி பூஜை சுலோகங்களில் இது முக்கியமாக இடம் பெற்றிருக்கும்.
இருபதாம் நூற்றாண்டின் பல புகழ்பெற்ற தமிழ்ப் பண்டிதர்களில், எழுத்தாளர்களில் மேன்மைமிகு திரு மீ.ப.சோமு அவர்கள் ஒருவர். அன்னார் எழுதிய ஒரு நூல் ( ஆராய்ச்சி நூல் என்றே சொல்லக்கூடிய) விநயகர் அகவலைப் பற்றியது.
புத்தகத்தின் பெயர்-----சித்தர் இலக்கியம்---விநாயகர் அகவல்.
வெளியிட்டவர்கள்-------அண்ணாமலைப் பல்கலைக்கழகம்.
மற்ற தமிழ் புத்தகங்களைப்போல் இது அச்சில் வெளிவந்து விற்பனைக்கு வந்ததாக எனக்குத் தெரியாது. எந்தப் புத்தகக் கடைகளிலும் இதை நான் கண்டதில்லை. என் நெருங்கிய நண்பர் மூலம், 2001—ஆம் ஆண்டு எனக்கு, இப் பொக்கிஷத்தின் ஒரு நகல் கிடைத்தது. உண்மையாகவே இது ஒரு பொக்கிஷந்தான். 76 பக்கங்கள் கொண்ட இப்புத்தகத்தின் சில பகுதிகளை உங்களுடன் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்று இத்தொடரை பதிவு செய்யத் தொடங்குகிறேன். முழுப் புத்தகத்தையும் பதிவு செய்வது சற்று கஷ்டமான செயல்.
திரு மீ.ப.சோமு அவர்களின் விளக்கங்களைப் படிக்கும்தோறும் எத்தகைய ஒரு பொக்கிஷம் (TREASURE HOUSE OF INFORMATION) இது என்பது உங்களுக்கே புரியும்.
ஜய ஜய சங்கர! ஹர ஹர சங்கர!
சித்தர்களின் ஞான இரகசியங்களை ஆராய்ந்து கற்கும் மாணவன் அவனுடைய பயிற்சியின் முன்னேற்றத்திற்கு ஒரு பாராயண நூலைக் கையாள விரும்புவது இயல்பேயாகும். அப்படிப்பட்ட மாணவனுக்கு, அவ்வையின் அகவல் கைகொடுத்து உதவுகிறது.
சித்தர்கள் தமிழகத்திலே நமக்கு வழங்கியுள்ள ஞானச்செல்வங்கள் விரிந்து பரந்து கிடப்பவற்றை ஒன்று திரட்டி அவ்வையார் குறட்பாவாகச் செய்து தந்தார். அந்த ஞானத்தின் அனுபவத்தை மெய்யுருகித் துய்க்கும் வண்ணம் அவரே அகவலும் செய்து தந்தார். அந்த அகவலிலும் குறளின் ஞான மணம் அத்தனையும் அப்படியே கமழ்கிறது.
அப்படியானால் மிக எளிய முறையிலே வழிபாட்டில் ஓதப்படுகிற அகவலுக்குள்ளும் மாபெரும் ஞான இரகசியங்கள் பொதிந்துள்ளனவா என்று கேட்கலாம்; ஆம், பொதிந்து, செறிந்து, புதையலாகவே கிடக்கின்றன……………………………………………………இரண்டே இரண்டு சான்றுகள் மட்டும் இங்கே எடுத்துக்காட்டலாம்.
விநாயகர் அகவலில், பலரும் பாராயணம் செய்கிற ஒரு வரி,
நெஞ்சிற் குடிகொண்ட நீல மேனியும்
என்பதாகும். இதுபோலவே, பலருக்கும் மனப்பாடம் ஆகியுள்ள இன்னொரு வரி,
கூடுமெய்த் தொண்டர் குழாத்துடன் கூட்டி.
என்பதாகும்.
பலருக்கும் நன்கு தெரிந்த இந்த இரண்டு வரிகளில் நிகண்டு (dictionary) பார்த்துப் பொருள் கொள்ள வேண்டிய எந்தச் சொல்லும் இல்லை. என்றாலும், சித்தர் நெறியைப் பயில்கின்ற யோகிகள் எல்லோரும், ‘நீலமேனி’ என்பதற்கும், ‘மெய்த்தொண்டர் குழாம்’ என்பதற்கும் நீண்ட பெரும் விரிவுரைகள் தந்துள்ளார்கள். அந்த இரண்டு சொற்றொடர்களையும் சித்தர்களின் ஞானக் கருவூலங்கள் என்றே சொல்ல வேண்டும்.
இந்த உலகில் உள்ள நடப்பனவும் நிற்பனவும் ஆகிய சராசரங்களை ஆராய்ந்து பார்த்துள்ள விஞ்ஞான மேதைகள், அண்மைக்காலத்தில் ஒரு மிகப் பெரிய அறிவியல் நுட்பத்தை ஆராய்ந்து கண்டுபிடித்துச் சொல்லியிருக்கிறார்கள். அதுதான் ‘ETHERIC BODY’ அல்லது நுண்ணுடல் ஆகிய ஒளி உடம்பு ஆகும்…………….இதன்படி, உயிர்கள் அனைத்திற்கும் அவை தாங்கியுள்ள பரு உடலைச் சுற்றி நுட்பமான வான்துகளால் ஆகிய நுண் உடல் இருக்கிறது என்பதை இன்றைய அறிவியல் வல்லுனர்கள் மெய்ப்பித்துக் காட்டியிருக்கிறார்கள். இதை ‘ETHERIC DOUBLE’ என்றும் இன்றைய விஞ்ஞானம் அழைக்கிறது.
‘நீலமேனி’ என்ற சொல்லுக்கு சிவயோகி இரத்னசபாபதியார் இந்தப் பொருளையே, தன் ஞானப்பேருரையில் எடுத்துக் கூறுகிறார். இதையே விநாயகரின் வேழமுகமாகவும், தும்பிக்கையாகவும் பொருள் கூறுகிறார் சிவயோகியார்.
மனித உடம்பிலே நமது பின் மூளையில் உள்ள ‘pineal gland’ என்னும் சுரப்பியின் ஆற்றலும், முன் மூளையில் உள்ள ‘pitutory gland’ என்னும் சுரப்பியின் ஆற்றலும் பொருந்தும்போது, நீல ஒளி தோன்றுகிறது என்றும், இந்த நீல ஒளியின் பரிணாமத்தோடு ஒளி உடம்பாகிய ‘ETHERIC DOUBLE’ இயைகிறது என்றும் பொருள் சொல்லி, இவற்றின் நுட்பங்களை மிக விரிவாக ஞானிகள் நமக்கு எடுத்துக் கூறுகிறார்கள்.
தொடரும்……….