Post by anusham163 on Nov 12, 2012 19:27:45 GMT 5.5
( anusham163---யின் குறிப்பு-----இனி சொல்லப்போகும் நிகழ்ச்சியை இப்பகுதியிலேயே முன்பே படித்திருக்கிறோம். இரண்டு காரணங்களுக்காக அதை இங்கு மீண்டும் தருகிறேன். ஒன்று, தொடரின் ‘தொடர்ச்சி’ தடைப்படாமலிருக்க, இரண்டு, கணபதி அண்ணாவின் வார்த்தைகளில் வாசிக்கும்போது, அதன் பாதிப்பே வேறே! )
1934 முற்பகுதியில் ஸ்ரீசரணர்கள் ஸ்ரீசரணம் நோகக் காசி யாத்திரை செல்லும் வழியில் ஸ்ரீசைலம் சென்றுகொண்டிருந்தார்கள். அந்நாளில் எளிதில் சென்று சேரமுடியாத மலைக்காடாகவே அந்த மஹாக்ஷேத்ரம் இருந்தது. அங்கு ஸபரிவாரம் பெரியவர்கள் பயணப்படும் வழியில், நாகலூட்டி என்ற இடம். அங்கே, செஞ்சுக்கள் என்ற ஆதிவாசிகள் வசித்து வந்தனர். அவர்கள் ராஜ்யமே அங்கு நடந்தது எனலாம். தங்கள் பகுதிகளில் பிறதேசத்தினர் பிரவேசிப்பதை அவர்கள் எளிதில் அனுமதிக்கமாட்டார்கள்.
அவ்வாறேதான் நமது அன்புத் தெய்வத்தின் கோஷ்டி சென்றபோது அவர்கள் பகைவர்களாக எதிர்க்க ஆயத்தமாயினர். பயங்கர எதிர்ப்பே! வில்லும் அம்புமாக தாக்கித் துரத்தும் அவர்களது வழக்கப்படியே வந்தனர்.
ஸ்ரீ மஹாபெரியவாளோ அஞ்சாநெஞ்சராக, ஆயினும், ‘அஞ்சா நெஞ்சு’ என்பதின் ஆண்மை மதர்ப்பு அணுவுமின்றி அன்னையன்பின் உருவமாக யாத்திரையைத் தொடர்ந்தார். அவர்களுக்குத் தாங்கள் எவ்விதத்திலும் தீமை செய்ய வரவில்லை என்றும், அவர்களது நலனை ‘தேவுடு’விடம் கோருபவரே என்றும், தெய்வ தரிசனம் முடித்து உடன் திரும்பிச்செல்வதே தங்களது நோக்கம் என்றும் தமது பரிவாரத்தின் மூலம் அறிவிக்கக்செய்தார்.
அறிவிப்பு இருக்கட்டும். அறிவிப்புக்குக் காரணமான அவரை அந்தப் பழங்குடிகள் கண்ணால் கண்டதுதான் தாமதம்! ப்ரேம ஜ்யோதிஸ் என ஒளி காந்தி ஒசிந்து வரும் திவ்ய மூர்த்தியைக் கண்ட மாத்திரத்தில் வைரம் பாராட்டிய வஜ்ர நெஞ்சங்கள் மெழுகாகக் குழைந்தனர்! ஜ்யோதியில் குழைந்த மெழுகு!.
பகைவராக எண்ணியவரை பகவராகவே கண்டு வில்லும் கையும் ஏந்தி வந்த கைகளைக் கும்பிடலில் குவித்தனர். அது மாத்திரமில்லை; அக்கைகளாலேயே அப்பெரிய பரிவாரத்தின் மூட்டை முடிச்சுகளைத் தூக்கிக்கொண்டு வரவும் முந்தி வந்தனர். அவர்கள் செய்த அந்தக் கூலித்தொழில் அன்புச்சக்திக்கு வன்புச் சக்தி கொடுத்த கூலிதானே?
சத்ருக்களாக வந்தோர் மித்ரர்களாகி விலங்குவாழ் கானக வழி நெடுக பெரியவாளது கோஷ்டிக்குப் பாதுகாவலாக உடன் வந்தனர். இரவில் மடமுகாமுக்கு விலங்குகளாலோ, வேறுவிதத்திலோ ஆபத்து ஏற்படாமல் கண்விழித்திருந்து பாராக்காரர்களாகவும் பணி செய்தனர்.
யாத்திரை முடிவில், பெரியவாள் அவர்களுக்கு வழங்கிய திரவிய வெகுமதியை, “தொடமாட்டோம்” என்று மறுத்துவிட்டனர், உட்பண்பில் நாகரீக சமுதாயத்தினரையும் விஞ்சிய அக்காட்டுக்குடிகள்!.
அவர்கள் ஸ்ரீசரணரிடம் விரும்பிய வெகுமதி ஒன்றே ஒன்றுதான்! அவர்கள் ஆடும் நடனத்தை அவர் காணவேண்டுமென்பதுதான்.
அருங்கலை ரஸிகர், பீடெமேறிய நாளிலிருந்து புகழ்பெற்ற நடனமணிகளின் ஆடலையும் காண மறுத்த ஆசாரசீலர் அந்த வேண்டுகோளுக்கு இணங்கினார். ஆயினும் அப்போதும் தமது துறவற வரம்பு மீறக்கூடாதென்பதால், ஆடவர் யாவரும் ஆடலாமாயினும், பெண்டிரில் வயது வராதோர் மட்டுமே ஆடலாம் என்று கூறினார்.
அவர்களும் அதற்கிணங்கி உற்சாகமாக ஆடினர்.
இதில் இதயத்தைக் கவ்வும் அம்சம், அவர்களுக்குள்ள பலவிதமான ஆடல்களீல்----வழிபாட்டு ஆட்டம், வீர ஆட்டம் என்பது போன்றவற்றில்---ஸ்ரீசரணருக்காக அவர்கள் தேர்ந்தெடுத்தது, ‘மிகவும் நெருங்கிய உறவினர் வந்தால் ஆடும் ஆட்டம்’ என்பதுதான்!
“காடு வாழ் சாதியுமாகப் பெற்றான்’ என்ற நாச்சியார் திருமொழி உயிர் கொண்டது!
‘துப்பில்லாதவ’ரின் மைத்ரீ தன்னை எப்படி ‘ஹ்ருத்—ஜேத்ரி’யாக நிரூபித்துக்கொண்டது பார்த்தீர்களா?
தொடரும்......