Post by anusham163 on Nov 7, 2012 14:45:24 GMT 5.5
தேச ஸ்வதந்த்ரத்திற்கு முற்பட்ட அக்காலத்தில் காந்தீயச் சீர்திருத்தவாதிகள் மாத்திரமின்றி, இன்றைய கழகங்களின் தாயாகவே பல இனங்களில் கருதக்கூடிய ஜஸ்டிஸ் கட்சியினரும் ஸ்ரீசரணரிடம் தனித்ததொரு விச்வாஸம் வைத்துத்தானிருந்தார்கள். 1932—இல் அவர் சென்னைக்கு விஜயம் செய்தபோது மாநகராட்சி மன்றத்தில் ஜஸ்டிஸ் கட்சியின் ஆதார ஸ்தம்பங்களின் ஒன்றாகக் கருதப்பட்ட ஸர் ஏ. ராமாஸ்வமி முதலியார் அவருக்கு வரவேற்பு அளிக்கவேண்டும் என்று தீர்மானம் கொண்டு வந்தார். மதத்தலைவரொருவருக்கு மாநகராட்சி வரவேற்பு தருவது இதுவே முதல் முறை என்றும், வைதீக மதத்தினர் மாத்திரமின்றி சகல மக்களும் போற்றும் பெருமை பெற்றவர் ஸ்ரீ ஸ்வாமிகள் என்பதாலேயே இவ்விசேஷ உபசாரம் அளிக்கப்படுகிறது என்றும் அப்போது அவர் கூறினார். அது விவாதமே இல்லாமல் ஏகமனதாக நிறைவேறிற்று. அதற்காக ரூபாய் முந்நூறு ஒதுக்கவும் தீர்மானமாயிற்று. அந்நாள்களில் அது வி.ஐ.பி—களுக்கான விமரிசையான வரவேற்புகளுக்கு மட்டுமே ஒதுக்கப்பட்ட பெருந்தொகை ஆயினும் நமது பெருந்தகை அவ் வரவேற்பை ஏற்க இயலாமல் போயிற்று.
முப்பத்து நாலாண்டுகளுக்குப்பின் 1966 ஜூனில் தி.மு.க. நிர்வாகத்திலிருந்த வேலூர் நகர ஸபையில் ஸ்ரீசரணருக்கு வரவேற்பளிக்கப்பட்டது. இவ்வன்புக் காப்பியத்தில் ஒரு மறக்க முடியாத படலம். முன்பிருந்த நிலை மாறி அப்போது இறைப்பற்றுள்ளவர்களும் கழகத்தில் இடம் பெற்று வெளிப்படவே அதனைக் காட்டிக்கொள்ளவும் செய்தனர். அந்த முறையில், நகராட்சித் தலைவர் வழிபாடு நின்று போயிருந்த கோட்டைக்கோயிலில் மீண்டும் லிங்கப் பிரதிஷ்டை செய்து பூஜைகள் நடைபெற வேண்டுமென்று நகராட்சி மன்றம் விரும்புவதாகவும் அதற்கு ஸ்வாமிகளே வழிகாட்டியுதவ வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டார்.
அது ஆச்சரியமாயிருந்ததெனில், அதனினும் ஆச்சரியமாயிருந்தது ஸ்ரீ பெரியவாள் அதற்கு அளித்த மறுமொழி. நகராட்சித் தலைவரின் நல்ல யோசனை தமக்கு மிக்க மகிழ்வூட்டுவதாகத் தெரிவித்த அவர், ஆயினும் ஊராட்சி மன்றங்கள் நகரின் ஸுகாதாரம், சாலைப்பராமரிப்பு, தெரு விளக்கு, குடிநீர், மருத்துவம், கல்வி போன்ற ஸமயக் கலப்பில்லாத நெடுங்கால மரபுப்பணிகளை ஆற்றினாலே போதுமானது என்றும், தனிப்பட்ட முறையில் மட்டுமே இந்த நகரஸபையினர் ஆலயத் திருப்பணிக்கு ஆதரவு தேடித்தருவதுதான் உசிதம் என்றும் கூறினார்.
சிந்தித்துப்பார்த்தால் இதில் ஆச்சரியப்பட என்ன இருக்கிறது? எவராயினும் அவருக்கு சாஸ்த்ர பூர்வமாகவோ, சட்டபூர்வமாகவோ விதிக்கப்பட்டுள்ள தொழில் வரம்புகளுக்குள்ளேயேதான் கட்டுப்பட்டுச் செயலாற்ற வேண்டும் என்று நாளும் வலியுறுத்தி வந்த நீதி தேவதையன்றோ அவர்?
முடிவாக மன்றத்தினரின் தெய்வ நம்பிக்கையைத் தாம் சிலாகிப்பதாகக் கூறியவர் அதோடு சேர்த்தே, ‘கடவுள் நம்பிக்கையுள்ளவர்கள் என்று தங்களைக் கருதிக்கொள்பவர்கள் அந்த நம்பிக்கையில்லாதவரிடமும் பகை பாராட்டாது அன்போடு பழக வேண்டும் என்று ‘மைத்ரீம் பஜத’ உபதேசித்தார்.
தொடரும்……..