Post by anusham163 on Nov 6, 2012 22:05:27 GMT 5.5
இப்பெருமையை அயல்நாட்டறிஞர் ஒருவர் கண்டு வியந்த ஒரு நிகழ்ச்சி. மில்டன் ஸிங்கர் என்ற அந்த அறிஞர் இந்திய கலாச்சாரம் குறித்து ஆராய்ந்து எழுதுவதற்காக வந்திருந்தார். ஸ்ரீசரணரிடம் பேட்டி பெற்றுப் பல விஷயம் தெரிந்து கொண்டார். முடிவாக ஸ்ரீசரணர் அவரிடம், ‘திராவிட இயக்கத் தலைவர்களில் ஒருவரையேனும் நீ பேட்டி கண்டாலன்றி உன்னுடைய ஆராய்ச்சி பூர்த்தியானதாகாது” என்றார்.!
சாதாரணமாக, ஒரு வேத கலாசாரக் காவலரான மடத்தலைவரெனில், எங்கே அயல்நாட்டினர் நம் நாட்டிலுள்ள பல பிரிவினரையும் சந்தித்தால் தமது மரபுக்கு மாறுபட்டவரின் வாதத்தால் கவரப்பட்டு அதையே உலகுக்குச் சொல்லிவிடுவாரோ என்பதால், அவர்களாகவே அப்படிச் சந்திக்க இருந்தால்கூடத் தடுப்பதற்கே நினைக்கக்கூடும். நமது ஸ்ரீசரணரோ?
‘தம்மளவில்’ அவர் காழ்ப்புணர்ச்சியை அறவே வென்றவர் என்று சொன்னதால் வெளியில் ஸ்தூலமாக மாற்றாரை அவரது அன்பு வெல்லவே இல்லை என்று ஆகுமா என்ன? அல்லவே அல்ல. ‘அகில ஹ்ருத்’ எனுமாறு எல்லா உள்ளங்களையுமே வென்றதுதான் அது. மாறாகவும் கண்டோமே என்றால் அது எந்த விதிக்கும் இருந்தே தீரும் விலக்கைச் சேர்ந்ததுதான்!
எண்ணற்ற உதாஹரணம் காட்டலாம், அவர் மாற்றாறின் மாற்று அழித்த மஹிமைக்கு!
பொதுப்படச் சொன்னால் கொள்கையளவில் பெரியவாளிடம் மாறுபட்ட எத்தனைக் கட்சித் தலைவர்கள் அவரிடம் மனமாறு இன்றி பக்தி விசுவாசம் கொண்டிருந்தனர்? காந்தீய சீர்திருத்தங்களில் சிலவுமே ஸ்ரீசரணாள் வலியுறுத்திய தர்ம சாஸ்திர நெறிகளுக்கு மாறாகத்தான் இருந்தன. அந்த இயக்கங்களை எதிர்த்தும் ஸ்ரீசரணரின் தொண்டர்கள் ஸத்யாக்ரஹம் செய்தும் கூட உண்டு. ஆனால் காந்தி மஹாத்மாவிலிருந்து தொடங்கி ராஜாஜி, சத்யமூர்த்தி, ஸப்ரு, பஜாஜ் முதலிய அனைவருமே அவரிடம் மிகுந்த மரியாதையும் நேயமும்தான் கொண்டிருந்தனர்.
தம்மைப் பற்றி படு blunt—ஆக விமர்சித்துக் கொள்ளத் தயங்காத ஸ்ரீசரணர், சுமார் பன்னிரண்டாண்டு முன் ஒரு நாள் பேசுகையில் அப்போது புரி சங்கராச்சார்ய ஸ்வாமிகளை மூர்க்கப் பழமைவாதி என்ற பொருளில் fundamentalist என்று எல்லோரும் தாக்கிக்கொண்டிருந்ததைப் பற்றிப் பிரஸ்தாவம் வந்தது. அப்போது, “ என்னையும் அப்டி சொல்றத்துக்கு ஸகல ந்யாயமும் இருக்கோன்னோ? அவர் விடாமப் பிடிச்சிண்டிருக்கிற அதே சாஸ்திரங்களைத்தானே நானும் விடாமப் பிடிச்சிண்டிருக்கேன்? என்னை ஏன் ஒத்தரும் அப்டிச் சொல்லமாட்டேங்கிறா? சொல்லாதது மட்டுமில்லே, அதி நூதனக் கொள்கைக்காரா, புரட்சியாளர்னு சொல்லப்படறவா கூட நமஸ்காரம் பண்ணிட்டுப் போறாளே? ஏன்னு தெரியல்லையே?” என்றார்.
ஏன் ‘ஏன்னு தெரியல்லை’? முன்பே சொன்னாற்போல் கொள்கை என்று புத்திமட்டத்தில் என்ன இருந்தாலும் அவரது இதயத்தில் ஸகலர் பாலும் அன்பு, அன்பு, அன்பு ஒன்றே இருந்ததுதான் காரணம். அவர் தம்மை ஸைஃபராகச் சொல்லிக்கொண்டாலும் அவரது மன்னாதி மன்ன வீரியம் பெற்ற ப்ரேம சக்திதான் காரணம்.
தொடரும்……