Post by anusham163 on Nov 5, 2012 23:08:09 GMT 5.5
மஹாபெரியவா தன்னுடைய அன்பினால் எப்படி இந்த உலகத்தையே கட்டிப்போட்டார் என்பதை அண்ணா ஸ்ரீ ரா. கணபதி அவர்கள், தன்னுடைய 'சங்கரர் என்ற சங்கீதம்' என்ற புத்தகத்தில் விரிவாகச் சொல்லியிருக்கிறார். அதலிருந்து சில முக்கிய பகுதிகளைப் பார்ப்போமா?
புத்தகம் வெளியிட்டவர்கள், திவ்ய வித்யா பதிப்பகம்.
ஜகத்தை வென்ற அன்பு!
பெரியவாளிடம் யாரேனும் பகமை பாராட்டியிருக்கலாம். ஆனால் அவருக்குப் பகைவர் யாருமில்லை. அஜாதசத்ரு என்பதற்கே சரியான பொருள் இப்படித்தான் செய்யவேண்டும். அதாவது எவரொருவர் பார்வையில் சத்ரு என்று ஒருவர் கூடப் பிறக்கவில்லையோ அவரே அஜாதசத்ரு எனலாம்.
சத்ருவே இல்லையென்றால் ஜயசாலிதானே? காரியத்தில் பிறர் தோல்வி கொடுப்பது வேறு. அதைச்சொல்லித்தான் அவர் தம்மையே நொந்துகொண்டது. ஆனால் அவர்களுக்கும் இவர் இதயத்தில் விரோதம் இல்லாதபோது அவ்விதயம் பகையையே வென்றுதானே விட்டது?
அகில ஹ்ருதயங்களையும் ஜயிக்கும் மைத்ரீ சகலரையும் தன் இதயத்துக்குள்ளேயே அன்பினால் ஜயித்து அடக்கிக்கொள்வதாக இங்கு உயர் பரிமாணம் பெருகிறது. நாம் முன்பு கண்ட தருமர், ராமர், புத்தர் போன்ற மஹாபுருஷர்கள் எல்லோரும்----தன்னைத்தானே வென்று கொண்ட எல்லோருமே-----கண்ட அன்பின் வெற்றி இதுதான். அன்புதான் அவர்கள் இதய ஸிம்ஹாஸனத்தில் பகையைப் பகைத்து வென்று விரட்டி அரசு செலுத்தியது.
இகலோடு செற்றம் நீக்கிய பெரியவாளின் பெருமைக்கு எத்தனைதான் எடுத்துக்காட்டுகள் இல்லை?
மஹான்களின் ஸ்தோத்திரங்களை ஸ்ரீமதி எம்.எஸ். சுப்புலக்ஷ்மி அந்நாள் இசைத்தட்டு, பின்னாள் இசை நாடாவில் பாடிப் பதிவு செய்வதற்கு ஸ்ரீசரணாளின் ஆசியாலோசனை கோரப்பட்டபோது பெருங்கருணையுடன் அவரே துதிகளைத் தேர்ந்தெடுத்துக் கொடுத்தார்.
அப்போது அத்வைத குரு என்று தம்மைச்சுருக்கிக் கொள்ளாமல், விசிஷ்டாத்வைத ஸ்ரீ ராமானுஜர், த்வைத ஸ்ரீ மத்வர், அசிந்திய பேதாபேத ஸ்ரீ கிருஷ்ண சைதன்யர், சுத்தாத்வைத ஸ்ரீ வல்லபாசாரியர் முதலியோரின் துதிகளை நமது ஸ்ரீசரணர் தாமாகவே மனமுவந்து தேர்வு செய்து கொடுத்தது போல், ‘மாற்றறியாத’ பொன் மனத்தை அபூர்வமாகவே ஒரு குறிப்பிட்ட மரபுக்கான மடாதிபரிடம் காண இயலும்.
இதனிலும் ரஸமானது, அத்வைத மடங்களே எனினும், ஸ்ருங்கேரி---காமகோடி மாறுபாடு அனைவரும் அறிந்ததே. இதற்கு ஆழமாக வித்திடப்பட்டது முன்பு நாம் கண்ட ஸ்ரீசிவாபிநவ ந்ருஸிம்ஹ ஸ்வாமிகளுடைய குருவின் காலத்தில்தான். மஹாதபஸ்வியான அப்பெரியார் மிகவும் கோபக்காரருமானதால், ‘உக்ர ந்ருஸிம்ஹ ஸ்வாமிகள்’ என்றே பெயர் பெற்றிருந்தார். அவர் காலத்தில்தான் பீடங்களிடையே பேதம் உக்ரமாகக் கிளர்ந்தெழுந்தது.
ஆயின் இந்த தோத்திர மாலைத் தேர்வில் நமது ஸ்ரீசரணாள் அவரது ‘ஸ்ரீ வெங்கடேஸ்வர கராவலம்ப ஸ்தோத்திரத்தையும் எடுத்துக் கொடுத்திருக்கிறார். ஏழுமலையானைப் பற்றி எத்தனையோ துதிகள் இருக்கும்போது ஸ்ரீமடத்திடம் வன்மையான பிணக்குக் கொண்டிருந்ததாக எண்ணப்படும் ஒருவரது துதியை உத்தமமானதாகக் கண்டு பெரியவாள் எடுத்துக் கொடுத்தாரென்றால் அது எத்தனை உத்தமமான உள்ளம்? தன்னளவில் பகைமையை அடியோடு வென்ற இதயம்?
எங்கே நல்லதைக் கண்டாலும் அதை அவரால் சிலாகிக்க முடிந்தது. இதனால்தான் மாற்றான் தோட்டத்து மல்லிகையானாலும் மணத்தை ஒப்பத்தான் வேண்டும் என்று கூறிய அறிஞரின் கட்சி விஷயமாகவே இப்படிச் சில செய்திருக்கிறார்.
1961—இல் காவேரியில் பெருவெள்ளம் பெருக்கெடுத்து உத்பாதமானபோது ஸ்ரீசரணர் பெருந்தொண்டர் படை திரட்டி சிறப்பாக நிவாரணப்பணிகள் நடத்தினார். அப்போது வேறு பல நிறுவனங்களும் இப்பணியில் ஈடுபட்டிருந்தன. அவற்றில் தி.க.வும், தி.மு.கவும் இடம் பெற்றிருந்தன.
பணி நல்லபடியாக பூர்த்தியானபோது ஸ்ரீசரணால் அதில் ஈடுபட்டிருந்த ஸகலருக்கும் பிரஸாதங்கள் வழங்கினார். அந்நாள்களீல் தி.க வில் மட்டுமின்றி தி.மு.க விலும் ஆத்திகர்கள் இருக்கமாட்டார்கள். எனவே பெரியவாள் அவர்களுக்குப் பிரஸாதம் அனுப்பாவிடினும் தம்முடைய பாராட்டுதலையும், மகிழ்ச்சியையும் சொல்லியனுப்பினார். அது மாத்திரமின்றி, பத்திரிகையாளர்கள் ஸ்ரீமடம் முன்னின்று செய்த பணியின் காரணமாகப் பெரியவாளிடமிருந்து பணிமுடிவில் ஓர் அறிக்கை வேண்டியபோது, அவ்வாறே அருளிய அவர் அதி தி.க, தி.மு.க வின் நற்பணியைக் குறிப்பிட்டுச் சொல்லி மெச்சுதல் தெரிவித்து, ஏடுகளீல் அது வெளியாகியிருந்தது.
தொடரும்………