Post by anusham163 on Oct 29, 2012 16:06:42 GMT 5.5
தமிழ் வேத விசாரம்.
சங்கரிப்பாட்டி என்று முதிய அம்மையார். பெரியவாளை தினமும் தரிசனம் செய்து கொண்டிருக்கவேண்டும் என்பதற்காகவே காஞ்சியில் தங்கியிருந்தார். ஒன்றிக்கட்டை.
ஸம்ஸ்க்ருதத்தில் ஒரு அட்சரம் கூடத்தெரியாது. ஆனால் தமிழிலிருந்த வேதாந்த நூல்கள் பலவற்றைப் படித்துப் புரிந்துகொண்டிருந்தார். கைவல்ய நவனீதம், உள்ளது நாற்பது போன்ற நூல்கள் எல்லாம் மனப்பாடம்.
பெரியவாளுக்குப் பாட்டியைப்பற்றி நன்றாகத்தெரியும் தினமும் வரிசையில் நின்று, தீர்த்தப்பிரசாதம் வாங்கிக்கொண்டு போகிறவரைத் தெரியாமலிருக்குமா?
ஆனால், பாட்டியோடு நாலைந்து வார்த்தைகள் சேர்ந்தார்ப்போல் பேசினதில்லை. அபூர்வமாக, ‘இன்னிக்கு கார்த்திகை சோமவாரம், உபவாசம்தானே?’ என்பது போன்ற விசாரணைகள் மட்டுமே..
ஒருநாள் பிற்பகலில் சங்கரிப்பாட்டி, மடத்துக்கு வந்தார். பெரியவாளைச் சுற்றி ஏழெட்டுப் பேர்கள் மட்டுமே. பாட்டி மெல்ல நமஸ்கரித்து எழுந்ததும், ஜாடை காட்டி உட்காரச் சொன்னார்கள்.
பாட்டிக்கே திகைப்பு. அடக்க ஒடுக்கமாக உட்கார்ந்து கொண்டார்.
“தமிழ்லே வேதாந்தம் படிச்சிருக்கேளே…சொல்லுங்கோ…இவாளெல்லாம் கேட்கட்டும்..”
பாட்டிக்குப் பரம சந்தோஷம். தனக்குத் தெரிந்த, படித்த நூல்களிலிருந்து பாடல்களைக் கூறி, விளக்கமும் கூறினார். பாட்டியின் வேதாந்த விசாரம் பிரமிக்க வைப்பதாக இருந்தது.
பெரியவாள், தாயுமானவர் பாடல்கள் சிலவற்றை எடுத்துக்கூறி, பாட்டி கூறிய தத்துவங்களுடன் இணைந்து போவதை விளக்கினார்கள்.
வெகுநேரம் ஆனபின், பெரியவாள் எழுந்துகொண்டே, “ஏதோ…இன்னிக்கு நல்ல பொழுதாகப் போச்சு…வேதாந்தம் புரிஞ்சுக்கிற மாதிரி சுலபமாகத்தான் இருக்கு” என்றார்கள்
எத்தனையோ மஹா மஹா பண்டிதர்களுடன் தத்துவ தர்க்கம் செய்த மஹாப்பெரியவாள், சங்கரிப் பாட்டிக்குக் கொடுத்த சர்டிஃபிகேட் இது!
பாட்டி மெல்ல எழுந்து நடந்தார்.
“எல்லாம் கனவு போல் தோன்றிற்று.. பெரியவா என்னோடு இத்தனை நேரம் வேதாந்த விஷயம் பேசினார்களா! பல ஆண்டுகளாகச் செய்து வந்த தவத்தின் பயன் கிடைத்து விட்டதா! இது போதும்….. இதுவே போதும்…”
அடுத்த மாதம் சங்கரிப்பாட்டி இல்லை!
தவத்தின் பயன் கிடைத்துவிட்ட பிறகு, மண் எதற்கு?
சங்கரன், காலகாலன். தெரிந்துதான் முன்கூட்டியே பலனைக் கொடுத்துவிட்டார்!
மூலம்--------மஹாபெரியவாள் தரிசன அனுபவங்கள்------ஆறாம் தொகுதி
சொன்னவர்------ஸ்ரீமடம் பாலு. மாமா.
பதிப்பகம்--------வானதி பதிப்பகம்.
தொகுப்பாசிரியர்-----டி.எஸ்.கொதண்டராம சர்மா.