Post by anusham163 on Oct 29, 2012 11:29:57 GMT 5.5
மதுராபுரியில்---வடமதுரை என்பதில்-----க்ருஷ்ண பரமாத்மா குப்ஜை(கூனி)க்கு இதேபோன்ற அனுக்ரஹம்தான் பண்ணினார். அது ஸப்தமோக்ஷபுரிகளில் ஒன்று. காஞ்சிதான் அந்த ஏழு மோக்ஷபுரிகளுக்குள் தக்ஷிண தேசத்தில் இருக்கப்பட்ட ஒரே ஒரு க்ஷேத்ரம். வடக்கே பகவான் பன்ணின அத்புதமான அருளை தெற்கே அவனுடைய அடியார்க்கடியானே பண்ணிவிட்டான்.. ஆழ்வார் பகவானுடைய அடியார், கணிவண்ணன் ஆழ்வாருக்கு அடியார்.
‘கூன்பண்டியன்’ என்றே சொல்லப்பட்டவனைத் திருஞானசம்பந்தர் ‘நின்ற சீர் நெடுமாறன்’ என்பவனாக நிமிர்த்திய கதையும் நினைவு வருகிறது..
கணிகண்ணன் குமரியாக்கிய கிழவி யாரென்றால், கிழவியாவதற்கு முந்திக் காஞ்சீபுரத்து ராஜாவின் ஸபையில் தாஸியாக இருந்தவள். பிற்பாடு நிஜமாகவே ‘தேவதாஸி’யாகி ஸ்வாமியின் கைங்கர்யத்தில் ஈடுபட்டவள்.
‘அடடா, இந்த பாகவதோத்தமருடைய அனுக்ரஹத்தால் இப்படி நல்ல பலம் வந்துவிட்டதே! இதை வைத்துக்கொண்டு பெருமாள் ஸேவையிலேயே ஸதாகாலமும் இருந்துவிடவேண்டும்’ என்று யுவதியான பின்பும் அவள் தீர்மானம் பண்ணிக்கொண்டு, அப்படியே செய்ய ஆரம்பித்தாள்.
கிழவி குமரியானால் ஊர் உலகமெல்லாம் ஆச்சரியப்படாதா? எங்கேயும் அதே பேச்சாகத்தானே இருக்கும்! காஞ்சீபுரத்தில் இருந்து கொண்டு ஆட்சி நடத்திய பல்லவ ராஜாவின் அரண்மனைக்குச் சேதி போயிற்று. ராஜாவும் அப்போது வ்ருத்தாப்ய தசையில் இருந்தான். தனக்கு ப்ரியமாக இருந்தவள் குமரியாகிவிட்டாள் என்றதும் அவனுக்குத் தகாத சபலம் ஏற்பட்டது.
கணிகண்ணனை வரவழைத்து, “என்னையும் இளமையாகப் பண்ணப்பா!” என்றான்.
கணிகண்ணன் பரிஹாஸமாக சிரித்தான். குருவே ஸகலமும், அவரே சரணம் என்று இருந்த அவனுக்கு ராஜா, கீஜா யாராயிருந்தாலும் பொருட்டாகத் தெரியவில்லை. யாராயிருந்தாலும் தான் கொஞ்சங்கூடப் பயப்படாமல், பவ்யப்படாமல் தர்மப்படி நடக்கணும், அவர்களுக்கும் தர்மத்தைச் சொல்லணும் என்ற தீரம் அவனுக்கு இருந்தது.
ராஜாவைப் பார்த்து, “நானா அந்தக் கிழவியைக் குமரி ஆக்கினேன்? எனக்கு ஏது அந்த சக்தி? என்னுடைய குருநாதருடைய சக்திதான் எனக்குள் புகுந்து கொண்டு அப்படிப் பண்ணுவித்தது” என்றான்.
“அப்படியானால் அந்த குருவையேதான் அழைத்துக் கொண்டு வாயேன்!” என்று ராஜா சொன்னான்.
“அவரைப் பற்றி உனக்குத் தெரியாதா? நீ ராஜாவாயிருந்தும் உன்னைப் பார்க்க அவர் இத்தனை காலமாக வராததிலிருந்தே அவரைப் பற்றி நீ தெரிந்து கொண்டிருக்க வேண்டுமே! அவருக்கு பகவானைத் தவிர எவரிடமும் போய் என்னவும் ஆகவேண்டியதில்லை. பகவானையே நினைக்கிறவர்கள், பகவத் கைங்கர்யத்துக்கே ஆசைப்படுபவர்கள் ரொம்பவும் கஷ்டப்படும்போது அவர்கள் யாரானாலும் அவர்களிடம் அவருக்கு ஸ்வாபவிகமாகக் கருணை உண்டாகி அனுக்ரஹம் செய்து கஷ்டத்தை நிவர்த்தி செய்துவிடுவார். அவர்கள் போய் அவரிடம் சொல்லவேண்டுமென்பதில்லை. அவரும் தாமே அவர்களிடம் போய் அனுக்ரஹம் பண்ண வேண்டுமென்பதுமில்லை. ஏதோ ஒரு கருவி மூலம் அனுக்ரஹம் பண்ணிவிடுவார். அந்தக் கிழவிக்கு அப்படித்தான் நடந்தது. அவள் தன்னுடைய ஸொந்த சரீர அனுபோகங்களுக்காக யௌவனம் பெறவேண்டுமென்று நினைக்கவில்லை. பகவானுக்கு சரீர கைங்கர்யம் நன்றாகச் செய்யவேண்டுமென்பதொன்றே அவள் நினைவாயிருந்தது. அதனாலே என் குருவிற்கு தயை பொங்கிக்கொண்டு வந்தது ப்ரக்ருதி (இயற்கை) நியதியையும் மாற்றினால் கூடப் பரவாயில்லை என்று அவளை யுவதியாக்கினார்.
“நீயோ சரீர போகங்களை அனுபவிக்க வேண்டும் என்ற ஆசையிலேயே யௌவனத்தைக் கேட்கிறாய். இதற்கு அவர் ஒரு நாளும் ஒப்புக்கொண்டு அனுக்ரஹிக்க மாட்டார். யாரானாலும் ப்ரக்ருதி நியதிப்படி ஜரா மரணங்கள் நேர வேண்டியபோது நேரத்தான் செய்யும் நீ போனால் வேறே எவனோ ஒருத்தன் ராஜாவாக வந்து ராஜ்ய பரிபாலனம் பண்ணிவிட்டுப் போகிறான். உனக்கு முந்தி எத்தனையோ பேர் ஆட்சி நடத்திவிட்டு அப்புறம் கிழடு தட்டி, ‘போய்த்தானே’ இருக்கிறார்கள்? ஒருவிதமான விசெஷ காரணமுமில்லாமல் உன்னை இளமையாக்குவதற்கு என் குருநாதர் ஸம்மதிக்கவே மாட்டார்” என்று கொஞ்சம் கூட ஒளிவு மறைவில்லாமல் கணிகண்ணன் துணிச்சலாகச் சொன்னான், பல்லவ ராஜாகிட்டேயே!
ராஜஸ குணமே கொண்ட ராஜாவுக்குக் கோபம் வந்துவிட்டது. “உன்னை இந்த ஊரை விட்டே ப்ரஷ்டம் பண்ணுகிறேன்” என்று ஆக்ஞை பண்ணினான்,
“நானே இப்படிப்பட்ட ராஜா இருக்கிற ஊரில் இருக்கிறதில்லை என்றுதானப்பா தீர்மானம் பண்ணிக் கொண்டிருக்கிறேன்!” என்று கணிகண்ணனும் சொல்லிவிட்டு நேரே கோயிலுக்கு ஆழ்வாரிடம் வந்தான்.
அரண்மனையில் நடந்ததையெல்லாம் அவரிடம் சொல்லிவிட்டு ஊரை விட்டுப் புறப்பட்டான்.
தொடரும்………