Post by anusham163 on Sept 23, 2012 14:56:30 GMT 5.5
There were many incidents when Mahaperiava shed tears-----Why He shed tears? Let us read some of them in Ra.Ganapathy anna's own words:
SOURCE---- "Kanchi Munivar NinaivukKadhambam "
AUTHOR---- "Ra.Ganapathy.
Publishers--- Divya Vidhya Trust.
இந்த மானுடநேய மாகருணையில் அடியார் துயரைத் தனதேயாகத் தாங்கி அவர் "கண்ணீர் சோர நின்ற " நெகிழ்ச்சி மிகு நிகழ்ச்சிகள் பார்க்கலாம்.
1957 நவராத்ரியின்போது சென்னைக்கு வருகை புரிந்து நெடிய பல மாதங்கள் ஸம்ஸ்கிருதக் கல்லூரியில் முகாமிட்டிருந்தபோது ஒரு மாலை வேளை.
புத்ர சோகத்தில் தவித்த ஒரு தாய் பெரியவாளிடம் ஆறுதல் நாடிக் கண்ணீர் வடித்துப் பிரார்த்தித்தாள். தன்னுடைய சோகம் ஆறுவதற்கு மட்டுமல்ல, தன்னைச் சோகத்தில் ஆழ்த்திச் சென்று விட்ட புத்திரனின் ஆவி ஆறுவதற்கே முக்கியமாகப் பிரார்த்தித்தாள். ஏனென்றால் அவன் இயற்கை மரணம் அடையவில்லை. கல்லூரியில் படித்து வந்த கட்டிளம் காளை மின்சார ரயில் விபத்தில் அபம்ருத்யுவாக மாண்டு போயிருந்தான். இவ்வாறு உயிரிழப்பவர்கள் அமைதி காணாமல் ஆவியாக அலை அலை என்று அலைவதாக நம்பிக்கை இருக்கிறதல்லவா? அந்த எண்ணத்தின் மேல்தான் செல்வ மகனின் ஆவிக்குச் சாந்தி வேண்டி ஸ்ரீசரணரிடம் அத் தாய் அழுது வேண்டினாள்.
" அந்த சாந்தி, இந்த ஹோமம் என்று ஒவ்வொருத்தர் ஒவ்வொன்று சொல்கிறார்கள். ஆஸ்தி, பாஸ்தி எல்லாம் விற்று அத்தனையும் பண்ணவும் தயார்தான். ஆனாலும் வாஸ்தவமாகவே இந்த பரிஹாரமெல்லாம் அவனைச் சேருமா சாந்தி பண்ணூமா, அப்படி அவன் சாந்தி ஆனாலும் ,ஆகிவிட்டான் என்று எனக்கு நிச்சயமாகி நிம்மதி தருமா என்று தெரியவில்லை. பெரியவா வாயினாலே என்ன வருகிறதோ அதுதான் நிஜமான பரிஹாரம் என்று மட்டும் நிச்சயமான நம்பிக்கை இருக்கிறது. அவன் பேயாகத் திரியாமல் பெரியவாதான் காப்பாற்றிக் கொடுக்கணும்" என்று தேம்பல்களுக்கிடையே சிக்கிச் சிக்கித் தெரிவித்தாள்.
'பரிவே உருவாய்' என்று ஒரு சொற்றொடர் அடிக்கடிச் சொல்கிறோமே, அது சொற்றொடராக மட்டும் இல்லாமல் உயிருதாரணமாக இருப்பது அபூர்வமே. அப்பேர்ப்பட்டதோர் அபூர்வ மூர்த்தியாக அப்போது ஸ்ரீசரணர் சமைந்திருந்தார்.
அவரிடமிருந்து என்ன திருவாக்கு வரப் போகிறதென்று பெண்மணி ஆர்வமாக இருந்தாள்.
அருள் சுரக்கும் திருநயனத்தை மூடி உட்பார்வையைத் திறந்து கொண்டார் தயாமுனி.
ஒரு யுகத்தைத் தன்னுள் இறுக்கிக்கொண்ட ஒரு நிமிடம் சென்றது.
திருநயனம் திறந்தது. திருவாயும் திறந்து கனிவு சொட்டச் சொட்ட முனிவர் பேசினார்.
"சாந்தி, ஹோமம் ஒண்ணும் வேண்டாம். கிராமத்தில இப்பப் பண்ணை வேலை நடந்துண்டு இருக்கோன்னோ? அங்கே இருந்து கவனிச்சுக்க மனுஷாளும் இருக்காளோன்னோ? அதனால், வெயில்ல வேர்க்க விருவிருக்க ஒழச்சுக் கொட்ற குடியான ஜனங்களுக்கு ஹிதமா நீர் மோர் நெறயக் கொடுக்கறத்துக்கு ஏற்பாடு பண்ணு. தவிச்சிண்டிருக்கிற கொழந்தைக்கு அதுவே சாந்தி பண்ணீடும். நல்ல கதிக்கும் அனுப்பிச்சுடும். நீயும் நிம்மதியா இரு."
எத்தனை எளிமையாகப் பரம வேதனைக்கும் சோதனைக்கும் மாற்று மருந்து சொல்லி விட்டர்!
சாஸ்திரீயச் சடங்குகளான சாந்தி, ஹோமம் ஆகியவற்றின் சக்தியையும் அவசியத்தையும் வெகுவாக வலியுறுத்துபவரே ஸ்ரீசரணர். பரிஹாரம் தேடி வரும் அடியார் பலருக்கு அவற்றை அவர் விதித்திருப்பதும் உண்டு. ஆனால், இந்தப் பிள்ளை அம்மாள் விஷயத்தில் குறிப்பாக என்ன கண்டாரோ, சடங்குகள் வேண்டாம் என்றே சொல்லி, தீன ஜனங்களுக்கு உபகரிப்பதை விதித்தார்.
ஸஞ்சீவி பர்வதமே பெற்றுவிட்ட உணர்வோடு பெண்மணி திருவடியில் விழுந்தாள். குலுங்கக் குலுங்க அழுதவாறு நமஸ்கரித்த நிலையிலேயே இருந்தாள். அது என்ன அழுகை என்று யார் இலக்கணம் கூற முடியும்?
அப்போதுதான் அது நடந்தது. ஸ்ரீசரணர்களீன் கண்களிலிருந்தும் மாலை மாலையாகக் கண்ணீர் வழிந்தது!
அவளுடைய புத்ர சோக தாபம் அந்தப் புத்திரனுடைய ஆவியின் தாபம் ஆகியவற்றைத் தணித்துக்குளிர்விக்க அக்கண்ணீரே போதுமானதாயிருந்திருக்கும்! 'சாந்தியும், ஹோமமும் வேண்டாம், நீர் மோர் உபசாரம் போதும் என்றாரே அந்த நீர்மோருக்குக்கூட அவசியமில்லாமல் செய்திருக்கும் நீராளமாக அவர் உருகிப் பெருக்கிய பாஷ்ப அம்ருதம்!
The tears of saints more sweet by far
Than all the songs of sinners are
என்றான் கவி ஹெர்ரிக். அந்தக்கவியின் மத மரபுப்படி மக்கட்குலம் முழுவதுமே sinners ஆகிய பாவியர்தான். இப்பாவியரனைவரின் பாட்டுக்கள் அனைத்தையும்விடப் பாவன அடியார்களின் கண்ணீர் பன்மடங்கு மதுரமானது என்கிறான். நமது பாவன புருஷரின் கண்ணீரோ தாபத்தையும், அந்தத் தாபத்துக்கு வித்தான பாபத்தையும் கழுவியே விட்ட கங்கையாகும்.
நமஸ்கரித்த பெண்மணி எழுந்திருந்தபோது அழுகை அடியோடு நின்று அவள் ஏற்கெனவே வடித்த கண்ணீரின் சில முத்துக்கள்தான் முகத்தில் இருந்தன. குழாயை இறுக்கி மூடுவது போல் அதன் பின் அவள் கண்ணீர் வடிக்க முடியாமல் அருளாளர் மந்திரம் போட்டுவிட்டார்!.
அந்த 'மந்திரம்' அவள் அழவேண்டிய அழுகையையெல்லாம் இறுக்கி அவர் கண்களுக்கே மாற்றி விட்டது!
எழுந்திருந்தவள் தன் தெய்வத்தின் திருமுகத்தில் உலராத சில நீர் முத்துக்களைக் கண்டாள். பதைத்துப்போய் சொன்னாள்:
" என் பாரமெல்லாம் பறந்து போயிடுத்து. ஆன பெரியவா மனஸைக் கஷ்டப்படுத்திட்டேன் போல இருக்கே..."
இடைமறித்து இன்முறுவலுடன் பேசினார் அருளாளர்," அதை நெனச்சு புது பாரத்தை ஏத்திக்காதே! பெரியவாளுக்கு மனஸும் இல்லே, கஷ்டமும் இல்லே".
பிரஸாதத் தட்டை நகர்த்தி, எந்த வார்த்தைக்கும் இல்லாத வளிதப் பரிவோடு ஆசி கூறி அனுப்பும் திருநோக்கையும், தலையாட்டலையும், கையசைப்பையும் அருளினார்.
கருமேகம் மூடி வந்தவள் இளநிலா ஒளியோடு திரும்பினாள்.
"பெரியவாளுக்கு மனஸும் இல்லே, கஷ்டமும் இல்லே" என்று ஏதோ பேச்சுவாக்கில் சொன்னது போல் அவர் சொல்லிப்போனதற்குள்தான் எப்பேர்ப்பட்ட ஆழ்ந்த உண்மை உள்ளது!.