Post by anusham163 on Sept 18, 2012 23:43:06 GMT 5.5
விநாயகுநி
பெரியவா சொன்ன கதை
இம்மாதிரி விஷயங்களில் ஸ்ரீசரணாளுக்கு ஒன்று ‘தோன்றினால்’ அது நமக்கெல்லாம் தோன்றுகிறது போன்ற வெறும் மனப் புனைவு அல்ல, பரமஸத்யம்தான் அவருக்குத் தோன்றும். ஆகையால், தொடர்ந்து வரும் கதையில் அவர், ‘ஐயர்வாள் இப்படிச் செய்திருப்பார், செய்திருக்கலாம், செய்திருக்கக்கூடும்’ என்று ஏதோ லேசான அனுமானம் போலச் சொல்வதெல்லாம் வாஸ்தவத்தில் கனமான ப்ரமாணமேயாகும். அவை ஐயர்வாள் செய்ததே என்பதுதான் உறுதி.
அவர் காமாக்ஷி ஆலய தரிசனத்தை இவர் உடனிருந்து பார்த்தது போலல்லவா திரைப்படச் சுருளாக அவிழ்த்து விட்டார்!
“ஐயர்வாள் அம்பாள் கோபுரத்வாரத்திலே நுழையறபோதே வேறே எந்தக் கோவில்லயும் இல்லாத மாதிரி வலது பக்கத்திலே ஒரு ஸ்தம்பத்திலே ஒரு நர்த்தன விநாயகரைப் பார்த்திருப்பார்; அதோட உள்ளே நேரே ஸிந்தூர விநாயகரைப் பார்த்திருப்பார் ( அதாவது பார்த்தார். இனி வருவதையும் இதே போலத் திருத்திப் படிக்கவும்). உள் ப்ரகார ஆரம்பத்திலே வலது பக்கம் ‘ஆதிசேஷன்’-னு ஒரு ஸன்னிதி. நாகரூபத்திலே இருக்கற ஸுப்ரம்மண்ய ஸ்வாமியைத்தான் அப்படி ஆதிசேஷன் என்று சொல்வது. அங்கேயும் சின்னதா ஒரு விநாயக பிம்பம் பார்த்திருப்பார். அப்படியே உள்ளே போனா, ஜயஸ்தம்பம் தாண்டினவொடனேயே சுவர்லே சின்ன பிள்ளையார் ரிலீஃப் (புடைப்புச் சிற்பம்) பக்கத்திலேயே நன்னா முழுசாவே இருக்கற இன்னொரு பிள்ளையார். அப்பறம் பிரதக்ஷிணம் வரச்சே பள்ளீயறைக்கு நேரே நல்ல ஆக்ருதியாக இஷ்ட ஸித்தி விநாயகர்னு ஒத்தர் ஒக்காந்திருக்கிறதைப் பார்த்திருப்பார். உத்ஸவ காமாக்ஷி ஸன்னிதி வாசல்லே ரெண்டு பக்கமும் பிள்ளையார், ஸுப்ரமண்யர்; அங்கேந்தே மேற்காலே பார்த்தாத் தெரியற மூல காமாக்ஷி ஸன்னிதி வெளிச்சுவர்லயும் பிள்ளையார்—ஸுப்ரமண்யர் பார்த்திருப்பார். ஐயர்வாள் மாதிரி ஒரு பெரியவர் எங்கேயோ திருவையாத்துலேந்து வந்திருக்கார்னா அர்ச்சகாள் மரியாதை பண்ணி , கூட இருந்து தானே சுத்திக்காட்டி தர்சனம் பண்ணி வெச்சிருப்பா. அப்படி, கூட வந்தவா உத்ஸவ காமாக்ஷி ஸன்னிதி தாண்டறச்சே, ‘இங்கே மௌனமாப் போகணும். ஏன்னா துண்டீர மஹாராஜா தபஸ்ல இருக்கார்’னு சொல்லி அவரோட பிம்பத்தையும் காடியிருப்பா.
“அங்கே தாண்டின விட்டு ஐயர்வாள் ,’அது யார் துண்டீர மஹாராஜா’?ன்னு கேட்டிருப்பார். ( கண்ணெதிரே கண்டு கூறுவதைப் போல இருக்கிறதா இல்லையா?). அர்ச்சகாள், ‘அவர்தான் இந்தப் பிரதேசத்தோட மொதல் ராஜாவாயிருந்த ஆகாச பூபதியோட பிள்ளை. பிள்ளை வரம் வேண்டி, ஆகாச பூபதி அம்பாளுக்குத் தபஸ் கெடந்து அடைஞ்ச புத்ரர். அம்பாள் சாக்ஷாத் தன் கொழந்தை கணபதியைத்தான் அப்படிப் பொறப்பிச்சா; அதனால்தான் அவருக்குத் ‘துண்டீரர்’னு பேர் வெச்சது. துண்டம்னா தும்பிக்கையோன்னோ? ‘ வக்ரதுண்டர்னு பிள்ளாய்யாரைச் சொல்றோமே! அந்தத் துண்டீரர் பேர்லே தான் இந்தப் பிரதேசத்துக்குத் துண்டீர மண்டலம்னே பேர் வந்து, தமிழிலே ‘தொண்டைமண்டலம்—கிறா’ன்னு கதை சொல்லியிருப்பா. அதாவது, கோயில் மட்டும் இல்லாம அந்த சீமையே பிள்ளையார் விசேஷம் பெத்ததுன்னு ஐயர்வாள் கண்டிண்டிருப்பார்.
“ ஆகாசபூபதி கணேசாவதாரமான துண்டீரருக்கு ராஜாவாப் பட்டாபிஷேகம் பண்னினான்—கிறது மாத்திரமில்லை. ஸாக்ஷாத் அம்பாளே மூல கணேசருக்கே ராஜ்யாபிஷேகம் பண்ணினதாகவும் ஐதிஹ்யம். என்ன கதைன்னா……ஒனக்குத் தெரியுமோ?”
“தெரியலை”
ஈஸ்வர சாபத்துனால அம்பாள் அவரை விட்டுப் பிரிஞ்சு அப்புறம் மறுபடி அடையறத்துக்காகக் காஞ்சிபுரத்தில பிருத்வீ லிங்கம் பிடிச்சு வெச்சுப் பூஜை பண்ணீனது முதலான சமாசாரங்கள் கேட்டிருக்கையோனோ?’
“கேட்டிருக்கேன். அம்பாளை சோதிக்கிறத்துக்காக ஸ்வாமி அங்கே வெள்ளத்தைப் பெருக்க விட்டார். அப்பவும் அம்பாள் நகராம லிங்கத்தை இறுகக் கட்டிண்டு அப்படியே இருந்துட்டா. ஸ்வாமியும் ஆவிர்பாவமானார்.”
“அப்போ, அம்பாள் தபஸிருந்ததோட தர்மங்களூம் பண்ணீனா. ‘எண்ணான்கு அறம்’னு தமிழ்ப் பொஸ்தகங்கள்ளே இருக்கும். அதாவது, முப்பத்திரண்டு தர்மங்கள், மனுஷர்களுக்குச் செய்யற அன்னதானத்திலேருந்து வாயில்லாத ஒரு ஜீவன், ஒரு மாடு, அதுக்கு அரிச்சுப்பிடுங்கினா கூட அது சொறிஞ்சுக்கிறத்துக்கு ஸஹாயமா ‘ஆதீண்டுகுற்றி’ ன்னு கல் நட்டு வெக்கற வரைக்கும் முப்பத்திரண்டு தர்மங்கள். தபஸோட கூட அம்பாள் இந்த தர்மங்களைப் பண்ணீனதா இருக்கு அப்புறம் ஸ்வாமியைத் திரும்பச் சேர்ந்த விட்டும் இந்த தர்மங்களை அங்கே தொடர்ந்து பரிபாலிக்கணும்னு நெனச்சா. ஆனா, தானே அப்படிப் பண்ணாம பிள்ளையருக்குத்தான் ராஜாவாப் பட்டம் கட்டி, ‘தர்ம பாலனம் பண்ணிண்டிரு’ன்னு வெச்சான்னு ஸ்தல புராணத்துல இருக்கு. “ராஜகணபதின்னு சேலம் மாதிரி சில ஊர்ல பிள்ளையார் இருந்தாலும், இங்கேதான் அவர் ஸ்வயரூபத்திலே அம்பாளே பட்டம் கட்டியும், அப்புறம் அவதார ரூபத்திலே மனுஷ்ய ராஜா அதே மாதிரி பண்ணியும் ராஜாவா இருந்திருக்கார்.”
“இந்த விருத்தாந்தமும் ஐயர்வாள் கேட்டிருப்பார். அவரும் ஒரு ராஜாதான்---தியாகராஜா.”
“தொடர்ந்து மேற்கால திரும்பி பிரதிக்ஷணம் போறப்போ, ஐயர்வாள் காலத்துக்கு முன்னாடியே தஞ்சாவூருக்குப் போய் சாமா சஸ்திரிகள் கிட்டேந்து நெறைய பாட்டு பெத்துண்ட பங்காரு காமாக்ஷியோட காலி ஸன்னிதியைப் பார்த்திருப்பார். அங்கே வாசல்லே ரெண்டு பக்கமும் பிள்ளையார்—ஸுப்ரமண்யர் இருக்கிறதைக் கவனிச்சிருப்பார்.”
“கர்ப்பக்ருஹ வாசல்லேயும் அதே மாதிரி அந்த ரெண்டு பேர் வரவேத்திருப்பா.”
“அவர் மூலஸ்தானத்திலே அம்பாளைத் தரிசனம் பண்ணி அப்படியே மனஸ் நெறஞ்சு போயிருப்பார். ராமர்தான் அவருக்கு இஷ்ட தெய்வமானாலும், அடுத்தாப்பல அம்பாள் கிட்டேயும் அவருக்கு நல்ல பக்தி. திருவையாத்திலேயே தர்மஸம்வர்த்தினி, திருவொத்தியூர் த்ரிபுரஸுந்தரி பேர்லேல்லாம் அவர் கொட்டியிருக்கிற க்ருதிகளைப் பாத்தாத்தெரியும். அவர் தொண்ணூத்தாறு கோடி ராம நாமா ஜபிச்சதே கூட தர்மஸம்வர்த்தினி ஸன்னிதியிலே பின் பக்கத்துலேதான்னு சொல்லக் கேட்டிருக்கேன். அதனால் நம்ப அம்பாளை (காமாக்ஷியை நம்ப அம்பாளாகப் பெரியவாள் கூறும் உரிமையருமை அலாதிதான்). தர்சிக்கறப்பவும் உருகித்தான் போயிருப்பார். மனஸ் அப்படியே ரொம்பிப்போனதுலே வாய் திறந்து பாடக்கூட முடியாமப் போயிருக்கும்.”
“இவர் பாடாட்டா என்ன? அர்ச்சகாள் அங்கே நன்னா ராகம் போட்டுண்டு அர்ச்சனை பண்ணுவா. பாட்டுன்னா அம்பாளுக்கு ஒரே பேராசைங்கறதால்தான் ‘கானலோலுபா”ன்னு ஒரு பேர் (ஸஹஸ்ரநாமத்தில்) சொல்லியிருக்கு.. காமாக்ஷி அர்ச்சக பரம்பரையிலேயே இங்கேருந்து தஞ்சாவூருக்குப்போய் பங்காரு காமாக்ஷியைப் பூஜிச்சிண்டிருந்தவா ஆத்திலேதானே சாமா சஸ்திரி பொறந்திருந்தார்? அழகா ராக பாவமாப் பாடி ஐயர்வாளுக்காக அர்ச்ச்னை பண்ணீயிருப்பா.( என்னென்ன ‘டீடைல்ஸ் கொடுக்கிறார் பாருங்கள்?).
“என்ன ச்லோகம்னா….. பஞ்சகமா ( ஐந்து ஸ்லோகங்கள் அடங்கியதாக) ஒரு அம்பாள் ஸ்தோத்ரம் உண்டு. ஒவ்வொரு ஸ்லோகமும்
மாம் அம்பாபுரவாஸினீ பகவதி ஹேரம்ப மாதா (அ) வது
ன்னு முடியும். கவனிச்சியோன்னோ? ‘ஹேரம்பமாதா (அ)வது’ ( விநாயகனின் தாய் ரக்ஷிப்பாளாக)!—அந்த நாள்ல,---அந்த நாள்னா தியாகையர்வாள் நாள் இல்லே, நான் பால்யமாயிருந்த அறுபது , அறுபத்தஞ்சு வருஷத்துக்கு முந்தி ( இதைக் கூறுகையில் ஸ்ரீசரணர் எழுபத்தோரு பிராயத்தினர்) காமாக்ஷி கிட்ட நம்ம மடத்துக்கிட்ட பக்தியா இருக்கிறவா அந்த அம்பாள் பஞ்சகத்திலே ஒரு ஸ்லோகம் குழந்தைகளுக்குக்கூட சொல்லிக்கொடுப்பா.”
(ராக ஸஞ்சாரமாக நீட்டாமலும் இழைக்காமலுமே கல்யாணி ராகச் சாயலை அழகுறக் காட்டிச் சொல்கிறார்கள்)
“கல்யாணி கமநீய ஸுந்தரவபு: காத்யாயநீ காளிகா
கால ச்யாமள மேசக த்யுதிமதீ காதி—த்ரீபஞ்சாக்ஷரீ !
காமாக்ஷி கருணாநிதி கலிமலாரண்யாதி தாவாநலா
மாமம்பாபுரவாசிநீ பகவதீ ஹேரம்பமாதாவது !
---ங்கிற ஸ்லோகம். அதையும் அன்னிக்கு அர்ச்சகர் பெரிய ஸாஹித்யகர்த்தா வந்திருக்கச்சே நம்ம கோவிலோட ஸங்கீதச் செறப்பையும் காட்டி ஆசீர்வாதம் வாங்கிக்கணும்னு நன்னா ‘கல்யாணீ’ன்னு ஸ்லோகத்திலேயே வரதாலே கல்யாணி ராகத்துலே பாடிக்கட்டியிருப்பா.”
“இதுவரை கண்ணாலே அனேக கணேச மூர்த்திகளைப் பார்த்தவர் இப்போ காதாலேயும் அந்தப் பிள்ளையோட அம்மாவா அம்பாள் ரக்ஷணையைப் பிரார்த்திக்கிற ஸ்லோகத்தைக் கேட்டதும் அது அவர் மனஸுலே நன்னா எறங்கியிருக்கும்.”
“தர்சனம் ஆனதும் குங்கும ப்ரஸாதம் குடுத்து, அதை அரூப லக்ஷ்மிக்கு அர்ப்பணம் பண்ணிட்டுத்தான் இட்டுக்கணும்னு அவருக்கு அர்ச்சகாள் சொல்லி அந்தப் பக்கவாட்டுக்கு அழைச்சிண்டு போயிருப்பா. அரூபலக்ஷ்மி தெரியுமோன்னோ?”
“தெரியும்”
என்ன தெரியும்? பிம்பம் இருக்கிறது மட்டுமா? கதையும் தெரியுமா?”
“ரெண்டும் தெரியும்”
“நாலதாச்சு. அந்தக் கதை சொல்ற காரியம் எனக்கு மிச்சமாச்சு. ஐயர்வாளை அரூபலக்ஷ்மி கிட்டேஅழைச்சிண்டு போனவா அங்கேயும் கிழக்கு முகமா ஸௌபாக்ய கணபதின்னு ஒத்தர் ஒக்காந்திண்டிருக்கிறதைக் காட்டியிருப்பா. அந்த உள் அங்கணத்துலேயே தெற்கு முகமாக ஸந்தான கணபதின்னு வேறே ஒத்தர் இருக்கிறதையும் அவர் பார்த்து, ‘மொத்தத்திலே அப்பிடியொண்ணும் பெரிய கோவிலா இல்லாட்டாலும் திரும்பற எடத்துலே எல்லாம் ஒத்தரா எத்தனை கணபதிகள்?’ னு நெனச்சுண்டு சன்னிதியிலேந்து வந்திருப்பார்.”
ஆசார்யாள் ஸன்னிதியிலே அவரை மரியாதை பண்ணீ , ரொம்பப்பெரியவாளுக்கு எப்படிப் பண்ணுவாளோ அப்படி எல்லாம் பண்ணி, வழியனுப்பறத்துக்காக அழைச்சிண்டு வரச்சே, ஜயஸ்தம்பத்துக்கு வந்தா, ஆரம்பத்திலேயே வர பிள்ளையாரே இங்கே முடிவாயும் ஸ்தம்பத்துக்கு மேலண்டைப் பக்கம் ஒக்காந்துண்டிருக்கிறதைப் பார்த்திருப்பார். ‘இவரைப் பார்த்து வேண்டிண்டாதான் அம்பாள் தர்சன பலன் ஸித்திக்கும். வரஸித்தி விநாயகர்னே பேருன்னு அர்ச்சகாள் சொல்லியிருப்பா.
“அடேயப்பா! இங்கே பிள்ளையாருக்கு இத்தனை மஹிமையா? அம்பாளைப் பாக்கறத்துக்கு முன்னாலேயும் மூணு, நாலு பிள்ளையார், பார்த்துவிட்டும் மூணு, நாலா?--ன்னு ஆச்சரியப்பட்டுண்டு ஐயர்வாள் கோவில்லேருந்து புறப்பட்டிருப்பார்.”
இதெல்லாம் அவர் கோவிலுக்கு வந்த மொதல் தடவைன்னு வெச்சுக்கலாம் அது ஒரு கார்த்தால வேளைன்னும் வெச்சுக்கலாம். ( இத்தனை விவரம் சொல்லும்போது ‘லாம்’ போடலாமா?).
தர்சனம் முடிச்சு அவர் உபநிஷத் ப்ரஹ்மேந்திர மடத்திலே ஆஹாரம் பண்றப்போவும் அப்பறம் விச்ராந்தி பண்ணிண்டிருக்கிறப்போவும் கூட, அம்பாளை தர்சனம் பண்ணினதே அடிமனஸுல சொழண்டுண்டு இருந்திருக்கும். அதோட, அவளோட க்ருபைக்கு விசெஷமா பாத்ரமாயி, கோவில் பூரா பல ரூபத்தில இருந்த பிள்ளையாரோட பாக்யத்தையும் நெனச்சு நெனச்சுப் பார்த்திருப்பார்.”
“ஸாஹித்ய கர்த்தாவா ஸாஹித்யத்தை மட்டும் பண்ணாம, அதுக்கு ஸ்வர—தாளங்களூம் அமைச்சவாளா ‘வாக்கேயகாரா’’ன்னே இருக்கிறவாள்ல முதல் ஸ்தானத்துல இருக்கிறவரில்லையா? அன்னிக்கு மத்யானம் அவர் மனஸுல காமாக்ஷியைப் பத்தி ஸாஹித்யம் பொங்கிண்டு வந்திருக்கும். அப்ப அந்த விக்னேஸ்வரரோட பாக்யமும் முண்டிண்டு அவர் வாக்குல மொதல்ல வந்து,” அந்தப் பிள்ளை மாதிரி என்னையும் நெனச்சு க்ருபை பண்ணும்மான்னு அபிப்ராயம் குடுக்கும்படியா ‘விநாயகுனி’ன்னு கீர்த்தனமாயிருக்கும். ஸாயரக்ஷை மறுபடி கோவிலுக்குப் போய் ஸன்னிதியிலேயே பரவசமாப் பாடியிருப்பார். அம்பாளும் பரிபூர்ணமா அனுக்ரஹம் பண்ணீயிருப்பா.”
“ என் ’குதிரை’ தேவலயா? ஒன் குதிரைக்கு அரைத் திட்டம், கால் திட்டமாவது வருமா?” அதென்ன மோஹனச் சிரிப்பு? மோஹத்தையெல்லாம் விரட்டும் மோஹனச் சிரிப்பு?
“பெரியவா குதிரை நிஜக்குதிரை; ஒசந்த ‘அராபியன்’ ‘ஹார்ஸ்’. என்னுது பொய்க்கால் கழுதை.” என்றேன், ஏதோ ஒரு வேகத்தில்
Remaining small portion in the third post on the same subject