Post by radha on Jan 11, 2020 17:35:37 GMT 5.5
OM SRI GURUPYO NAMAHA RESPECTFUL PRANAMS TO SRI KANCHI MAHA PERIVA
Venkat Radhakrishnan
*தெய்வத்தின் குரல் (Volume 3) – 022*
*தீக்ஷை*
ஒரு பையன் வரவில்லை என்றான். மற்றவன் வந்துவிட்டார் என்றான். அப்புறம் முதல் பையன் சொன்னதுதான் நிஜம் என்று தெரிந்தது. நான் இரண்டாவது பையனிடம், ”ஏன் பொய் சொன்னே? பொய் சொன்னா தப்பில்லையா?” என்று கேட்டேன்.
அதற்கு அவன் தைரியமாக, ”பாட நேரம் வந்தும் வாஸ்தவத்தில் வாத்தியார் வராமலிருந்தாரென்றாலும், அவர் வரவில்லை என்று சொன்னால் குருவின் தப்பை வெளியிலே சொன்னதாகும்.
பொய் சொல்வதைவிட இப்படி குருவுக்குத் தப்பு சொல்வதுதான் பெரிய தப்பு என்பதாலேயே அப்படிச் சொன்னேன்” என்றான். நானும் அவன் பண்ணினதை ஸரி என்று ஒப்புக் கொண்டேன்.
குரு பக்தி விசேஷத்துக்காகச் சொன்னேன். குரு எப்படியிருந்தாலும் அவருக்கு ஆத்மார்ப்பணம் பண்ணிவிட்டால், குருவால் எது கிடைக்க வேண்டுமோ அது ஈச்வர ப்ரஸாதமாகச் கிடைத்துவிடும்.
நாமே ஒன்றைப் படித்துத் தெரிந்துகொள்ளும் போது அதில் இந்த சரணாகதி, ஸமர்ப்பண புத்தி surrender பண்ணுவதில் இருக்கிற humility (விநயம்) இதெல்லாம் இல்லை. நாமாகவே படித்துப் புரிந்து கொள்வதில் இதற்கெல்லாம் நேர்மாறாக அஹங்காரமே உண்டாக இடமிருக்கிறது.
வித்யை நிஜமான வித்யையாக இருந்தால் அஹங்காரத்தைப் போக்கத்தான் வேண்டும். அதனால்தான், தானே ஒரு வித்தையைக் கற்பது, தானே ஒரு மந்த்ரத்தை எடுத்துக் கொள்வது, தானே ஒரு புண்ய கர்மாவைப் பண்ணுவது எல்லாம் சாஸ்திரத்தில் விலக்கப்பட்டு, குரு முகமாக உபதேசம் வாங்கிக் கொண்டே இவற்றைச் செய்ய வேண்டும் என்று சொல்லியிருக்கிறது.
தானாகவே படித்தும் தெரிந்து கொள்ளலாம் தான்; ஆனாலும் இந்த அறிவு ஆத்மாபிவிருத்திக்குப் பிரயோஜனப்படாது என்பதை ஒரு உபமானத்தால் சுரீலென்றே மனஸில் தைக்கிறாற்போலச் சொல்லியிருக்கிறது — இது ஜாரபுருஷனிடம் புத்ரனைப் பெற்றுக் கொள்கிற மாதிரி; புத்ரன்தான் என்றாலும் அவன் வைதிக கர்மா எதற்கும் உதவாதது போல என்று.
பூர்ண யோக்யதை பெற்ற குரு — அதாவது கனமான உள்ளநுபவம் பெற்றவர் — எந்த விதமான தீக்ஷையும் தரவேண்டுமென்றில்லா விட்டாலுங்கூட rare exception [அஸாதரணமான விதிவிலக்கு] தவிர அவராலும் ஏதாவது ஒரு தீக்ஷை நடக்கிறதென்று சொன்னேன் அல்லவா?
இதில் வாக்கால் கொடுக்கிற தீக்ஷைதான் மந்த்ரோபதேசம்; மந்த்ர தீக்ஷை என்பது. த்ருஷ்டியால் (பார்வையால்) தீக்ஷை தருவது சக்ஷு தீக்ஷை; நயன தீக்ஷை என்றும் சொல்வார்கள். தொடுவதால் தீக்ஷை தருவது ஸ்பர்ச தீக்ஷை. ஹஸ்த தீக்ஷை என்று சொல்வது இதைத்தான்.
இதிலே பல வகை உண்டு. குரு சிஷ்யனின் தலையைத் தம் கையால் தொட்டுத் தம் spiritual energy –யை [ஆத்ம சக்தியை] அவனுக்குள் செலுத்துவதற்கு ஹஸ்த மஸ்தக தீக்ஷை என்று பெயர்.
SRI KANCHI MAHA PERIVA THIRUVADIGAL CHARANAM