Post by kramans on Jun 21, 2012 21:51:03 GMT 5.5
தலையெழுத்தை மாற்ற முடியுமா?
தலையெழுத்து, விதி என்பது பிரம்மாவால் எழுதப்படுகிறது. மனிதன் முதலான எல்லா ஜீவன்களுக்கும் ஆயுள் நிர்ணயம் செய்வதும் பிரம்மா தான். ஒவ்வொரு ஜீவனுக்கும் ஆயுள் எவ்வளவு என்று தலையில் எழுதி விடுவார். உடனே, அது எமலோகத்தில் சித்ரகுப்தனுடைய கணக்கு நோட்டில் பதிவாகி விடும். வருஷம், மாதம், தேதி தவறாமல் வந்து, அந்த உயிரை எடுத்துச் சென்று விடுவான் எமன். எமன் எப்படி வருவான், எப்படி ஜீவனை அழைத்துச் செல்கிறான் என்பது புரியாத புதிர். எப்படியோ நேரம் தவறாமல் வருகிறான்; அழைத்துச் சென்று விடுகிறான். குழந்தை பிறந்தால் ஜாதகம் எழுதி ஜோசியரிடம் காட்டுகின்றனர். ஆயுள் பாகம் எப்படி இருக்கிறது என்று கேட்கின்றனர். ஜாதகத்தை பார்த்து கணக்கு போட்டு, “ஜாதகனுக்கு தீர்க்காயுசு…’ என்பார் ஜோசியர். தீர்க்காயுசு என்றால் என்ன? எழுபது, எண்பது வருஷம் இருந்தாலே தீர்க்காயுசு என்பர். ஆயுள் என்பது விதியைப் பொறுத்த விஷயம். அதைக் குறைவாகவோ, விருத்தி செய்யவோ வழியில்லை. விதி என்பது அவ்வளவு வலிமை வாய்ந்தது.தவம் செய்து கொண்டிருந்த முனிவரின் கழுத்தில் செத்த பாம்பை பரீட்சித்து மன்னன் போட்டதால், தட்சன் என்ற பாம்பு கடித்து மரிக்க வேண்டும் என்ற சாபம் பெற்றான் ராஜா. ஒரு ராஜா இப்படிப்பட்ட காரியத்தை ஏன் செய்தான்? விதிதான். தனக்கு தட்சனால் மரணம் என்று தெரிந்ததும் ஒரு மலையில் மிகவும் பாதுகாப்பாக உட்கார்ந்திருந்தான். ராஜாவுக்கு, தட்சனால் மரணம் ஏற்படப் போகிறது என்று எல்லாருக்கும் தெரிந்து விட்டது. ராஜாவை, பாம்பு கடித்தால் அந்த விஷத்தை மந்திரத்தின் மூலம் இறக்கிவிட்டு, பரிசும், பணமும் பெறலாமென்ற எண்ணத்துடன், அரண்மனையை நோக்கி போய் கொண்டிருந்தார் மந்திர சாஸ்திரம் தெரிந்த ஒருவர். இவர் போவதை பார்த்த தட்சன், “ஓய்… இங்கே வாரும்…’ என்று கூப்பிட்டான். தட்சனிடம் போனார். “இப்போது எங்கே போகிறீர்?’ என்றான் தட்சன். “ராஜாவை, தட்சன் கடிக்கப் போகிறானாம். அவன் கடித்ததும் என் மந்திர சக்தியால் நான் விஷத்தை இறக்கி, ராஜாவை காப்பாற்றப் போகிறேன்…’ என்றார் அவர். “அப்படி நீர் செய்தால் உமக்கு என்ன கிடைக்கும்?’ என்று கேட்டான் தட்சன். “எனக்கு நிறைய பணமும், பரிசும் கிடைக்கும்…’ என்றார் மந்திரவாதி. “சரி… ராஜா எவ்வளவு கொடுப்பாரோ, அதைப் போல் இரண்டு பங்கு நான் தருகிறேன். நீர் திரும்பிப் போய் விடும்…’ என்றான் தட்சன். மந்திரவாதி (சாஸ்திர ஞானமும் உண்டு! தன் ஞான திருஷ்டியில் பார்த்தார். ராஜாவுக்கு, தட்சன் கடித்து மரணம் என்று தலைவிதி இருப்பது தெரிந்தது. ஓஹோ… விதி அப்படி இருந்தால் அதை யாரால் மாற்ற முடியும்? முடியாது. அதனால், ராஜாவிடம் போய், மந்திரத்தால் பயன் ஏற்படாமல் திரும்பி வருவதை விட, இவன் கொடுக்கும் பொருளையும், பணத்தையும் பெற்று திரும்பி விடுவதே மேல் என்று எண்ணி, தட்சனிடம் பொருள், பணம் பெற்று திரும்பிப் போய் விட்டார். பிறகு, பரீட்சித்து மன்னனும், தட்சனால் கடிக்கப்பட்டு வைகுண்டம் சேர்ந்தார் என்பது புராணம். விதி எப்படியெல்லாம் வேலை செய்கிறது பாருங்கள்! எனவே அவரவர் தலையெழுத்து போல் தான் அனைத்து செயல்களும் நடக்கும் என்பதே விதி. அதை மாற்ற யாராலும் முடியாது.
Sri Kanchi Maha Periva Thiruvadigal Charanam