|
Post by saidevo on Feb 15, 2016 19:08:21 GMT 5.5
பூவாளூர்(நாலடித் தரவு கொச்சகக் கலிப்பா)சம்பந்தர் தேவாரம்: 2.43.1: கள்ளார்ந்த பூங்கொன்றை மதமத்தம் கதிர்மதியம்)கோவில் www.dinamani.com/weekly_supplements/vellimani/article728935.eceகாப்பு (அளவியல் இன்னிசை வெண்பா) பூவாளூர் புக்குறையும் வெள்ளை விநாயக! பூவாளி கொண்டடிக்கப் பொற்றவம் நீங்கியே அங்கசன் தன்னை அனங்கனென் றாக்கிய அங்கணனைப் பாட அருள். [பூவாளி = பூவால் ஆகிய அம்பு; அங்கசன் = மனதில் பிறக்கும் மன்மதன்; அனங்கன் = தூல உடலற்று சூக்கும உடலில் உலவும் மன்மதன்; அங்கணன் = அழகிய கண்ணுடைய சிவன்] பதிகம் (நாலடித் தரவு கொச்சகக் கலிப்பா) முன்னொருநாள் மாமலையில் முக்கண்ணன் தவம்செய்தார் இன்னலுரு சூரபத்மன் இமையவரைத் துன்புறுத்தப் பொன்னுலகார் மன்மதனால் பூவாளி தொடுக்கநேர்ந்த புன்கண்மை போக்கியவர் பூவாளூர்ப் பூரணனே. ... 1 [இமையவர், பொன்னுலகார் = தேவர்; புன்கண்மை = அச்சம், துன்பம்] சாம்பசிவன் கண்திறக்கச் சாம்பலானான் மன்மதனே ஏம்பலுற்ற ரதிதேவி இறைநோக்கித் தவம்செய்யச் சாம்பவிச மேதனெனத் தாண்டவனும் காட்சிதந்த பூம்பதங்கள் சேர்வதற்கே பூவாளூர் தலமாமே. ... 2 [ஏம்பல் = வருத்தம், மனக்கலக்கம்] மன்மதனை உயிர்ப்பிக்க மன்மதபு ரம்பேராம் பொன்மலர்கள் பொழிலாரப் பூவாளூர் பேராமே இன்னமுதாய் அன்னையுடன் ஈசனவர் வீற்றருளப் பொன்னனடி சேர்வதற்கே பூவாளூர் தலமாமே. ... 3 *****
|
|
|
Post by saidevo on Feb 19, 2016 20:06:14 GMT 5.5
திருமூல நாதருடன் திருக்குங்கு மத்தழகி தருவெனவே வில்வமரம் தலமரமாய் ஆவதுவாம் அருணகிரி ஒருகல்லாம் அறுமுகனைப் பாடினரே பொருவினையைப் போவினையாய்ப் பூவாளூர் செய்திடுமே. ... 4
தென்னாட்டுக் கயையாகும் திருத்தலமென் றிவ்வூராம் தென்புலத்தார் அருள்வேண்டித் திதிசெய்யும் ஆறாகக் கங்கைநதிக் கிணையாகப் பங்குனியாம் திங்களணிப் புங்கவனாய் மேவினனே பூவாளூர்த் திருத்தலமே. ... 5
நீங்கிடவே நாகதோஶம் நின்றருள்வி நாயகராம் ஆங்கவர்க்கு மோதகத்தை அர்ப்பணித்தால் நலமாகும் ஈங்கன்னை யைப்போற்ற இல்லைவது வைத்தடையே பூங்கொடியாள் மேவிநிற்கும் பூவாளூர்ப் புண்ணியனே. ... 6
கோட்டத்தில் பலதெய்வம் கொண்டருளும் கோவிலாகும் ஆட்டத்தின் நாயகனாய் அடுகாட்டில் ஆடுபவன் ஆட்சியிலே அறம்நான்கும் அமையவருள் ஆதிதேவன் பூட்சியெலாம் நீறணிந்தே பூவளூரில் மேவுவனே. ... 7
[பூட்சி = உடல்]
*****
|
|
|
Post by saidevo on Feb 21, 2016 8:55:12 GMT 5.5
துச்சனென ராவணனைத் துவளவைத்த தூமணியின் உச்சிமுதல் தாள்வரையில் உன்மத்தம் உன்னதமே நச்சரவும் பொடியணியும் நதிநீரும் திங்களுமாய்ப் புச்சிமலர் சூடுபவன் பூவளூரில் மேவினனே. ... 8
[புச்சிமலர் = எருக்குமலர்]
ஆரழலாய் எழுந்தபிரான் அடிமுடியைக் காணாதே நாரணனும் நான்முகனும் நலிவுற்ற போதினிலே வேரெனத்தான் விளங்குவதை வெள்விடையான் அறிவுறுத்திப் பூரணத்தைத் தந்தவர்க்குப் பூவாளூர் மேவினனே. ... 9
வேதநெறி விலக்குவதாய் வேறுநெறி விளங்குவதில் சாதனையாய் ஏதுமிலாத் தானறியும் ஞானமிலாப் பாதகமே எனவறிந்தே பரமசிவன் பாதவிணை பூதலத்தில் தேடுவோர்க்குப் பூவாளூர் புண்ணியனே. ... 10
பூவாளி பூரணன்மேல் போட்டவொரு கணையாலே பூவாளி உருவிழந்தே பொடியாகி அனங்கனாக பூவாளி மனையாளின் பூவிழிக்குள் வைத்தவனைப் பூவாலே போற்றடியார் பூவாளூர் சேர்வாரே. ... 11
--ரமணி, 01-10/11/2015
*****
|
|