Post by Sumi on Mar 20, 2015 11:13:14 GMT 5.5
Message forwarded by Email by our respected member Sri S Ramanathan
வர்ண தர்மத்தைப் பற்றி தப்பான அபிப்பிராயம் உண்டாகியிருப்பதற்கு பிராமணன் தான் காரணம். யுகாந்தரமாக ஆத்ம சிரேயஸும் தேச க்ஷேமமும் லோக க்ஷேமமும் தந்து வந்த தர்மம் தொலைந்து போனதற்கு பிராமணந்தான் பொறுப்பாளி. பிராமணன் தன் கடமையாகிய வேத அத்யயனத்தையும், கர்மாநுஷ்டானத்தையும் விட்டான். அப்புறம் ஊரை விட்டான். கிராமங்களை விட்டுப் பட்டணத்துக்கு வந்தான். தனக்குரிய ஆச்சாரங்களை, அதன் வெளி அடையாளங்களை விட்டான். கிராப் வைத்துக் கொண்டான்.ஃபுல் ஸூட் போட்டுக் கொண்டான். தனக்கு ஏற்பட்ட வேதப் படிப்பை விட்டு வெள்ளைகரனின் லௌகிகப் படிப்பில் போய் விழுந்தான். அவன் தருகிற உத்தியோகங்களில் போய் விழுந்தான். அதோடு அவனுடைய நடை, உடை, பாவனை எல்லாவற்றையும் காபி அடித்தான். வழி வழியாக வேத ரிஷிகளிலிருந்து பாட்டன், அப்பன் வரை ரக்ஷித்து வந்த மகோந்நதமான தர்மத்தைக் காற்றிலே விட்டு விட்டு வெறும் பணத்தாசைக்காகவும் இந்திரிய சௌக்கியத்துக்காகவும், புதிய மேல் நாட்டுப் படிப்பு, ஸயன்ஸ், உத்தியோகம், வாழ்க்கை முறை, கேளிக்கை இவற்றில் போய் விழுந்து விட்டான்.
சாஸ்திரங்கள் இவனுக்கு பணத்தாசையே கூடாது. இவன் சொத்தே சேர்க்கக் கூடாது என்கின்றன. அதன் பிரகாரமே இவன் வாழ்க்கை நடத்தி வேத சப்தத்தாலும், யக்ஞங்களாலும் லோக க்ஷேமத்தை ஏற்படுத்திக் கொண்டிருந்த வரையில் இவனிடம் மற்ற எல்லா ஜாதியாரும் குறைவில்லாத அன்பும் மரியாதையும் காட்டி வந்தனர். இவனையே உதாரணமாக, வழிகாட்டியாக, முன்மாதிரியாக (Example, guide, model) வைத்துக் கொண்டார்கள். இப்போது தொழிலை விட்டு விட்டு, கிராமத்தை விட்டு, பட்டணத்துக்கு இவன் வந்து, இங்கிலீஷ்காரன் தந்த படிப்பு, அவன் கொடுக்கிற உத்தியோகம், அவனுடைய வாழ்க்கை முறை இதை எல்லாம் எடுத்துக் கொண்டு, இதனால் தானே ஏதோ ரொம்பவும் நாகரிகத்தில் உயர்ந்து விட்டது போல் தாட் பூட் என்று பண்ணியதை மற்ற ஜாதியினர் பார்த்தார்கள். இதுவரை நல்லதெற்கெல்லாம் இவனை முன் உதாரணமாக வைத்துக் கொண்டிருந்த அவர்கள் இப்போது ஒழுங்கு தப்பிப் போவதிலும் இவனையே பின்பற்ற ஆரம்பித்தார்கள். தாங்கள் பாட்டுக்குத் திருப்தியோடு செய்து வந்த தொசிலை விட்டு விட்டு கிராமத்தை விட்டு, நகரவாசம் (Town life) இங்கிலிஷ் படிப்பு, வெள்ளைக்கார அரசாங்க உத்தியோகம் இவற்றுக்கு மற்றவர்களும் ஆசைப்பட ஆரம்பித்தார்கள்.
தானும் கெட்டு, சந்திர புஷ்கரணியையும் கெடுத்தானாம் என்கிற கதையாகப் பிராமணன் தானும் தர்மத்தை விட்டு, மற்றவர்களும் அவரவர் தர்மத்தை விடுகிற மாதிரி செய்து விட்டான். இன்றைக்குப் படிப்பதற்கு பிராமணப் பசங்கள் இல்லாததால் வெறிச்சோடியிருக்கின்ற நூற்றுக்கணக்கான பாடசாலைகள் இருக்கின்றனவே. இவற்றுக்கெல்லாம் முதல் போட்டு மூலதனம் வைத்து என்ன பிரயோஜனம். வீட்டை விட்டு ஓடி எங்காவது படித்து உத்தியோகம் பார்த்தால் தான் ஒரு பிடி சோற்றுக்கு வழி உண்டு என்ற நிலை பிராம்மணர்களுக்கு வந்ததாகவே வைத்துக் கொள்வோம். இப்படிப்பட்ட நிலை ஏற்பட்டிருந்தாலும் கூட அவர்களை செத்தாலும் நம் தர்மத்தை விடாமல் செய்து கொண்டே சாகவேண்டும் என்று உறுதியோடு வேதாத்யயனத்தையும், கர்மாநுஷ்டானத்தையும் விடாமல் இருந்திருக்க வேண்டும்.
இப்போது என்ன பரிகாரம் என்றால் பிராமணர்கள் எல்லோரும் இப்போதைக்கிருக்கிற வாழ்க்கை முறைகளை விட்டு, அத்யயனத்திற்கு திரும்புவார்கள் என்று எதிர்பார்க்க முடியாது. அது இப்போதைய நடைமுறைக்கும் ஒத்துவராது. அதனால் நாம் கூடிய வரையில் நம்முடைய தர்ம சாஸ்திரங்களில் சொல்லியிருக்கிறவைகளை அலுக்காமல், சலிக்காமல் நம்முடைய தலைமுறையினருக்கு எடுத்துச் சொல்லி எத்தனை பிரதிகூலங்கள் இருந்தாலும் நீங்கள் அதன்படிதான் நடக்க வேண்டும் என்று வலியுறுத்துவது தான்.