Post by anusham163 on Dec 11, 2014 16:02:56 GMT 5.5
‘கலவையில் பிறந்த பேரொளி’-----கவிஞர் நெமிலி எழில்மணி அவர்கள் எழுதிய புத்தகத்தில் இருந்து ………………………………..
‘பெரியவா செய்த பேருதவி’ என்ற தலைப்பிட்ட நிகழ்ச்சிக்குப்பின், ஆசிரியர் மனத்தில் பிறந்த கவிதைகள் சில………………
பெரியவர் தரிசனம்.
பல்லவி.
காஞ்சிப்பெரியவரின்
கருணை முகம் கண்டேன்
கவலைகளை மறந்தேன்
களிப்பினை நான் கொண்டேன். (காஞ்சிப் பெரியவரின்……)
அனுபல்லவி.
வாஞ்சையுடன் பார்வை
வந்தபின் எது தேவை
வாழ்த்திடும் திருக்கரங்கள்
வார்த்தைகள் நல்வரங்கள் (காஞ்சிப் பெரியவரின்…….)
சரணம்.
ஞானியின் திருத்தோற்றம்
ஞாலத்தை விழிப்பூட்டும்
தானெனும் அகந்தையினை
நீக்கிடும் அறிவூட்டும்
மேனியோ சிலிர்த்திடும்
தியானமோ நிறைந்திருக்கும்
மேதினி நலம் காண
பூஜைகள் மலர்ந்திருக்கும். (காஞ்சிப் பெரியவரின்……..).
மூன்று நிலவுகள்.
சங்கரர் அருகே மூன்று நிலா-----திருக்
காஞ்சியில் வந்தன இன்ப உலா.
சங்கடம் தீர்க்கும் சாந்த நிலா----மனச்
சாந்தியைத் தரும்வே தாந்த நிலா. (சங்கரர்…….)
பெரியவர் பதமே சன்னிதியாம்---அவர்
பார்வையில் விளைவது நிம்மதியாம்
அருள்தனைப் பொழியும் முழு நிலவாம்---அவர்
அன்புடன் தருவது திருவருளாம். (சங்கரர்….)
இளையவர் என்றும் இனியவராம்-----ஒளி
இலங்கிடும் ஞானக் கனிஅவராம்
நலம் தரும் நாயகர் நிறைநிலவாம்--- தரும்
நாரண மந்திரம் மறை ஒலியாம். (சங்கரர்…..)
பால்மணம் வீசும் ஜெகஜ்ஜோதி----வரம்
பரிவுடன் தரும்சங் கரஜோதி
நூல்புகழ் சங்கரர் எழுநிலவாம்-----அவர்
நோக்கிய திசையினில் துயர் இலையாம் (சங்கரர்….)
இருள் நீக்கும் ஜோதி.
தொகையறா.
இருள்நீக்கும் ஜோதிஒன்று
எழுந்த இடம் இருள்நீக்கி
அருள்பூக்கும் ஞானப்பூ
மலர்ந்த இடம் இருள்நீக்கி
மருள் போக்கும் தலம் கண்டேன்
மகிழ்ச்சியை நான் கொண்டேன்
வரம் சேர்க்கும் கரம் கண்டேன்
வாழ்த்தினை நான் கொண்டேன்.
பாடல்.
ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்
விஜயம் உலகில் க்ஷேமம்
ஸ்ரீ ஸ்வாமிகளின் சிந்தையில் ஒலிக்கும்
திவ்ய நாராயண நாமம். (ஸ்ரீ ஜெயேந்திர….)
காஞ்சி மாமுனி கண்டு எடுத்தது
நறுமணம் வீசிடும் முல்லை
காமாட்சித் தாயும் சீராட்டி வளர்த்த
ஸ்வாமிக்கு பேதங்கள் இல்லை. (ஸ்ரீ ஜெயேந்திர….)
ஏழையின் சிரிப்பில் இறைவனைக் கண்டது
எங்கள் ஸ்வாமியின் நெஞ்சம்
என்றும் வாழ உதவிகள் புரியும்
ஸ்வாமிகள் திருவடி தஞ்சம். ( ஸ்ரீ ஜெயேந்திர…..).
ஸ்ரீ சங்கர மடம்.
சங்கர மடம் எனும் அருட்கூடம் -- அது
சந்ததம் நமைக்காக்கும் கலைக்கூடம் --- காஞ்சி (சங்கர..)
மங்கலமே தந்து காக்கும் இடம் --- அது
மாந்தரின் கவலைகளைப் போக்கும் இடம் --- காஞ்சி (சங்கர)
பெரியவர் அருள் சுரக்கும் அரிய இடம் ---- அது
பேரின்பம் அளிக்கின்ற புனித இடம்
வறியவர்க்கு வாழ்க்கை வழங்கும் இடம் -- அது
வாடுகின்ற முகம் மாற்றும் வண்ண இடம் (சங்கர )
கோபுரத்தின் முகப்பு விண்ணைத் தொடும் ---- என்றும்
கூடவே வரும் வினைகள் உன்னை விடும்
பாபத்தின் நிழல்தூர சென்றுவிடும் --- என்றும்
பதமலர் நம் நெஞ்சில் நின்று விடும் (சங்கர ).
தொடரும்………………………