"பெரியவா பார்வை பட்டு விட்ட அவனிடம் இன்னும்
நூறு ஆண்டுகளுக்குக் காலன் வரமுடியுமா,என்ன?"
தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மா
தட்டச்சு;வரகூரான் நாராயணன்
மூன்று பெரியவர்களும் கலவையில் முகாம்.
பாதுகாப்பு ஏற்பாடுகள் சரியாக செய்யப்படாத நேரம்.
யாரோ ஒரு பையன் மடத்தில் ஏதோ ஒரு பொருளைத்
திருடும்போது கையும் களவுமாகப் பிடிபட்டு விட்டான்.
மானேஜர் வந்தார், "போலீஸில் ஒப்படைக்க வேண்டும்"
என்று தீர்மானித்து, காவல் நிலையத்துக்குத் தகவல்
கொடுக்க ஏற்பாடு செய்து கொண்டிருந்தார்.
ஸ்ரீ மகாப் பெரியவாளிடம் செய்தி தெரிவிக்கப்-
பட்டவுடன் மானேஜரைக் கூப்பிட்டனுப்பினார்கள்.
"அந்தப் பையன்கிட்ட விவரம் கேட்டு அவனோட
தகப்பனாருக்கு ஆள் அனுப்பி, அழைச்சிண்டு
வரச் சொல்லுங்கோ..."
பக்கத்துக் கிராமம் என்பதால், தந்தை விரைவில்
வந்து சேர்ந்தார்.
அப்பா - பிள்ளை இருவரையும் பெரியவா முன்
கொண்டு வந்து நிறுத்தினார்கள்.
பெரியவாள் சைகை மூலமாகவே வேட்டி - துண்டு
பழங்கள் கொண்டு வரச் சொல்லி அவ்விருவருக்கும்
கொடுக்கச் சொன்னார்கள்.
தகப்பன்காரருக்கு நெஞ்சு உருகி விட்டது.
விசும்பி,விசும்பி அழுதார். பின்னர் பையனுடன் கூட
பெரியவாள் எதிரில் தரையில் விழுந்து கும்பிட்டார்.
"வீட்டுக்குப் போய் பையனை அடிக்காதே.....
சிறு பிள்ளை....தாங்க மாட்டான்....."
பெரியவாள் கொடுத்த பரிசுப் பொருட்களுடன்
வெளியே வந்தார்கள் தந்தையும் மகனும்.
மகன் வெல வெலத்துப் போயிருந்தான்.
"இவனை மட்டும் போலீசுக்காரன் புடிச்சிட்டுப்
போயிருந்தா...அவமானம் தாங்காம நான்
செத்தே போயிருப்பேன்..."
பெரியவா பார்வை பட்டு விட்ட அவனிடம் இன்னும்
நூறு ஆண்டுகளுக்குக் காலன் வரமுடியுமா,என்ன?
Attachments: