Post by Sumi on Sept 10, 2014 14:22:00 GMT 5.5
Source: Dinamalar dated 9th Sept 2014
1942ல், காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோயிலில் திருப்பணி தொடங்கி, 1944 பிப்.7 ல் கும்பாபிஷேகம் நடத்த காஞ்சிப்பெரியவர் தீர்மானித்திருந்தார். இதற்கிடையில், ஜன.31ல் பெரியவர் கோயிலுக்கு வந்தார். அம்பாள் கர்ப்பகிரகத்தின் மீதுள்ள விமானத்தின் செப்புக் கவசத்தைக் கழற்றிக் கொண்டு வரும்படி கட்டளையிட்டார். பணியாளர்கள் அதைக் கொண்டு வந்ததும், பெரியவர் உன்னிப்பாக பார்த்துவிட்டு, அதன் மீது தங்கமுலாம் பூச வேண்டும் என அபிப்ராயப்பட்டார். அதைப் பார்த்த தங்க வியாபாரி இதற்கு முலாம் பூச குறைந்த பட்சம் 100 பவுன் தங்கமாவது தேவைப்படும் என தெரிவித்தார்.
அப்போது, ஸ்ரீமடத்தின் மேனேஜர் தங்க முலாம் பூசுவதற்குத் தேவையான பணம் கைவசம் இல்லை என்பதைப் பணிவுடன் பெரியவரிடம் தெரிவித்தார். கோயிலில் கூடியிருந்த பக்தர்கள் நடப்பதைக் கவனித்துக் கொண்டிருந்தனர்.
இந்த நேரத்தில், மகாராஜபுரம் விஸ்வநாத அய்யர் அம்பாளைத் தரிசிக்க கோயிலுக்கு வந்திருந்தார். சங்கீத மும்மூர்த்திகளின் பாடல்களை பாடுவதில் சமர்த்தரான அவர், பெரியவர் வந்திருப்பதை அறிந்து, நமஸ்காரம் செய்ய வந்தார்.
அவரிடம் பெரியவர்,""நல்ல சமயத்தில இங்கு வந்தே . இங்கே உட்காந்து அம்பாள் மீது கீர்த்தனைகளைப் பாடேன்'' என்றார். அவரும் 20 நிமிஷம் பக்தியோடு பாடல்களைப் பாடினார். அதன்பின், பக்கத்தில் நின்ற சீடனான சிறுவனை அழைத்து, ஆதிசங்கரருக்காக திருமகள் தங்கமழை பெய்வித்த "கனகதாராஸ்தவம்' ஸ்தோத்திரத்தைப் பாட உத்தரவிட்டார். அவர் பாடத் தொடங்கியதும், அங்கு கூடியிருந்த பெண்களில் சிலர், தங்கள் தங்க நகைகளை கழற்றி பெரியவர் முன் இருந்த தட்டில் சமர்ப்பித்தனர். அம்பாளின் கர்ப்பகிரக விமானத்திற்கு தங்க முலாம் பூச இதனை ஏற்றுக் கொண்டு தங்களுக்கு ஆசிர்வாதம் அளிக்கும்படி வேண்டினர்.
விஸ்வநாத அய்யர், பெரியவரிடம் விடை பெற்றுக் கொண்டு கிளம்பத் தயாரானார். அவரிடம் பெரியவர், "நீ இங்க வந்தப்போ குழப்பமா இருந்தது. நீ அம்பாளைப் பற்றி பாடி முடித்ததும், தைரியம் உண்டானது. இந்த பையன் கனகதாராஸ்தவம் பாடும் போது பொன்மழையே பொழிந்தது,'' என்று சொல்லி அங்கிருந்த அனைவருக்கும் ஆசியளித்து மகிழ்ந்தார்.
அம்பாளைப் பாடி வணங்கினால் தைரியம் ஏற்படும். லட்சுமி தாயாரை நினைத்து கனகதாரா ஸ்தவம் பாடினால், நியாயமான விஷயங்களுக்கு போதுமான பணம் கிடைக்கும். பெரியவர் நம் முன் நிகழ்த்திய அற்புதநிகழ்வு இது.