Post by Sumi on Aug 31, 2014 15:45:01 GMT 5.5
Shared by our respected moderator Sri anusham163, along with this beautiful drawing.
(தெய்வத்தின் குரல்—முதல் பகுதி (pp853)
‘ஸ்ரீ வித்யா’ என்று தேவி உபாஸனையைச் சொல்கிறோம். ‘வித்யா’ என்றாலே ஞானம்தான். ‘அவித்யை’ என்றால் அஞ் ஞானம். ஞானப்பால் தருகிற குருவான அம்மாவாக அம்பிகை இருக்கிறாள். இந்த்ராதி தேவர்களுக்கும் ஞானம் தந்தவள் அவளே என்று ஸாம வேதத்தைச் சேர்ந்த கேன உபநிஷிதம் ஒரு கதை சொல்கிறது.
கதை இதுதான் :
ஒரு காலத்தில் தேவாஸுர யுத்தத்தில் தேவர்கள் ஜயம் பெற்றார்கள். ‘பரமாத்மா தந்த சக்தியைக் கொண்டே யுத்தம் செய்தோம்; அவரது அனுக்ரஹத்தாலேயே வெற்றி பெற்றோம்’ என்பதை மறந்து, தேவர்கள் தங்களைத் தாங்களே மெச்சிக் கொண்டார்கள்.
தங்கள் சக்தியால் தாங்களே வெற்றியை சாதித்து விட்டதாகக் கர்வப்பட்டார்கள். ‘இது ஏதடா, அசுரர்களை ஜெயித்த இந்த தேவர்களுக்கே அசுர குணம் வந்துவிடும்போலிருக்கிறதே’ என்று பார்த்தார் பரமாத்மா.
அவர்கள் அப்படிக் கெட்டுப்போகாமல் ரக்ஷிப்பதற்காக அவர்களுடைய கண்ணுக்கெட்டுகிற தூரத்தில் அடிமுடி தெரியாத ஒரு ஜோதி ஸ்வரூபமாக நின்றார்.
‘இதென்ன யக்ஷ வடிவம் ?’என்று தேவர்கள் அதிசயித்தார்கள். நமக்குப் புரியாததை ‘யக்ஷிணி’ என்று இப்போதும் சொல்கிறோம் அல்லவா? அம்மாதிரி தேவர்கள் அதை ‘யக்ஷம்’ என்கிறார்கள். அதனிடம் அக்னியை அனுப்பினார்கள்.
அது என்ன என்று தெரிந்துகொண்டு வருவதற்காக அக்னியை அனுப்பினார்கள். அவன் அதை நெருங்கி “நீ யார்?” என்று கேட்பதற்கு முன்பே, அது இவனைப் பார்த்து, “நீ யார்?” என்று கேட்டது.
“நான் அக்னியாக்கும். ‘ஜாத வேதஸ்’ என்கிற பெயரும் எனக்கு உண்டு” என்றான்.
“சரி, உனக்குள்ள சக்தி என்ன?” என்று யக்ஷம் கேட்டது.
“நான் எதையும் எரித்து பஸ்மீகரம் பண்ணிவிடுவேன்” என்றான் அக்னி.
“ஓஹோ ! அப்படியானால் இதை எரி பார்க்கலாம்” என்று சொல்லி ஒரு துரும்பை எடுத்துப் போட்டது யக்ஷம்.
அக்னி தன் பூரண சக்தியையும் அந்தத் துரும்பின்மேல் பிரயோகித்தான்.
ஆனால் துரும்பு எரியவேயில்லை.
அக்னி வெட்கமடைந்து தேவர்களிடம் திரும்பி வந்து நடந்ததைச் சொன்னான்.
“இதென்னடா ! நாம் வெற்றி கொண்டாடும்போது, இப்படி நம்மில் ரொம்ப சக்திமானான ஒருத்தனுக்கு ---- அக்னிக்கு ----அபஜயம் வந்ததே ‘ என்று தேவர்கள் நினைத்தார்கள். யக்ஷம் இன்னதென்று தெரியாததே ஒரு தோல்விதான்; அப்புறம் இந்த அபஜயம் வேறு. அதன்பின் அவர்கள் வாயுவை யக்ஷத்திடம் அனுப்பினார்கள்.
முன்போலவே “நீ யார் ?” என்று கேட்டது யக்ஷம்.
:நான் வாயு. ‘மாதரிச்வன்’ என்றும் பெயர் பெற்றவன். எதையும் புரட்டித் தூக்கிக் கொண்டு போகும் சக்தி வாய்ந்தவனாக்கும்” என்றான் வாயு.
“சரி, இந்தச் சின்னத் துரும்பைத் தூக்கிப்பார்” என்றது யக்ஷம்.
வாயு பிரம்மப் பிரயத்தனம் செய்தும் அவனால் துரும்பை அசைக்கக் கூட முடியவில்லை.
வாயுவும் திரும்பி வந்தான், “நீ யார்?” என்று யக்ஷத்தைக் கேட்பதற்கே வாயில்லாதவனாக.
‘நாம் அசுரர்களிடம் அடைந்த ஜயத்தைக் கொண்டாடும் வெற்றி விழாவை இப்படி இது அபஜயமாக்கி விட்டதே’ என்று தேவர்கள் யோசித்தார்கள்.
இப்போது தேவராஜனுக்கே ஓர் அடக்கம் உண்டாகி விட்டது. தங்களை விடப் பெரியதொரு சக்தி இருக்கிறது என்ற அறிவு உண்டாயிற்று. அகம்பாவம் போய், ஒரு க்ஷணம் ஈஸ்வர பக்திகூட உண்டாகிவிட்டது.
நாம் ஏதோ சாதித்துவிட்டதாக நினைத்து அவ்வப்போது வெற்றி விழா கொண்டாடுகிறோம். இப்போது நம் தேசத்தில் இது ரொம்ப ஜாஸ்தி. கொஞ்ச நாள் கழித்துப் பார்த்தால் அந்த வெற்றி எங்கே போச்சு என்று தெரிவதேயில்லை. வேறு யாரோ வெற்றி விழா கொண்டாடுகிறார்கள். அப்புறம் அவர்கள் கதையும் மாறிப் போகிறது. மாறாத ஜயம் ஆத்ம ஜயம்தான். அந்த ஜயமும் சரி, மற்ற லௌகீக வெற்றிகளும் சரி, பரதேவதையின் கிருபையாலேயே கிடைப்பவை.
இதைப் புரிந்து கொண்டு, தேவதைகளுக்கெல்லாம் சக்கரவர்த்தியாக இருக்கப்பட்ட இந்திரன் யக்ஷத்தை விநயத்துடன் நெருங்கினவுடன், மகாகாருண்யம் பொருந்திய அது இவனுக்கு ஞான அனுக்ர்ஹம் செய்வதற்காக திவ்ய ஸ்த்ரீ ரூபத்தில் நின்றது.
(யக்ஷம் நின்ற) ‘அந்த ஆகாசத்திலேயே மஹத்தான சோபை பொருந்திய ஹைமவதியான உமாதேவி பிரகாசித்தாள்’ என்கிறது உபநிஷத்து.
உருக்கிய பொன்னைப் போன்ற பிரகாசத்தோடு, அதாவது ஞான ஒளியாக ஜொலித்துக்கொண்டு நின்ற அம்பாளை இந்திரன் நமஸ்கரித்தான். “சற்று முன் இங்கு தோன்றிய யக்ஷ வடிவம் என்ன?” என்று கேட்டான்.
சாக்ஷாத் அம்பிகை அவனுக்கு ஆசார்ய ஸ்தானம் வகித்து ஞானோபதேசம் செய்தாள்.
“அப்பா, பிரம்மம்தான் அந்த யக்ஷ வடிவம்; இவ்வளவு பிரபஞ்சத்துக்கும், உனக்கும், சகல தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் காரணமாக, ஆதாரமாக இருப்பது அது ஒன்றுதான். அதன் அகண்டமான சக்திதான் எல்லா ஜீவராசிகளிடமும் கண்டம் கண்டமாக, துளித் துளி இருக்கிறது “ என்று உபதேசித்தாள்.
முதலில் யக்ஷ வடிவமாக நின்று, தேவர்களை அவமானப் படுத்தினாள். அவமானப் படுத்தியது அகம்பாவத்தை அடக்குவதற்கே ! அகம்பாவம் அடங்கியவுடன் பரமானுக்ரஹமாக ஞானோபதேசம் தந்தாள்.
தேவராஜன் உண்மையை இதுவென (இதம்) முதலில் கண்டுகொண்டதாலேயே (த்ர) அவனுக்கு ‘இந்திரன்’ என்று பெயர் உண்டாயிற்று. மற்ற தேவர்கள் பிரம்ம ஸ்வரூபத்தை பார்த்ததோடு சரி.. இவன்தான் அதன் கருணாமூர்த்தமான அம்பாளைத் தரிசனம் செய்து, அவளிடமிருந்து பிரம்மஸ்வரூப ரஹஸ்யத்தை உபதேசமாகப் பெற்றுக்கொண்டு வந்தவன்.
தொடரும்……………………..