Post by anusham163 on Aug 12, 2014 19:53:46 GMT 5.5
தடுத்தாட்கொண்ட புராணம்.
ரா.கணபதி.
பகுதி 7.
அவராக உள்ள அவரே சத்தியம் என்றுணர்ந்ததன் உபாங்கமாக, அவர் சொல்வதே சட்டம், அவர் செய்து காட்டுவதே உய்வழி என்றும் தீர்மானமாகிவிட்டது. என் நூதனக் கொள்கை, புரட்சிக்கருத்து யாவும் மாயமே மறைந்தொழிந்தன ! இதுவும் முதலில் அந்தரான்மாவில் தன்னியல்பாகப் பிறந்த உறுதியேயாகும். பிற்பாடுதான் அவருடைய உபதேசத்தாலும், அருட்சக்தியாலும் இது அறிவு பூர்வமாகப் புரிந்தது !
முக்கியமாக என்ன புரிந்ததென்று சுருக்கமாகச் சொன்னால் ----ஒன்றேயான உயிர்த் தத்வம் குணம், குறி இல்லாமலிருப்பது மட்டுமின்றி ஒரு நிலையில் அலகிலா லீலா நாட்ட --- க்ருபா நாட்டங்களோடும் இருப்பது. லீலா நாட்டத்தில் ஏகப் பெருவாழ்வான தன்னை ஏகப்பட்ட சிறு வாழ்வினராக்கி, சிறிய சிறிய தனி மனங்களைக் கொண்டு அவர்கள் கர்மத்திலும் கர்ம பலனிலும், அதன் விளைவான ஜன்மச் சூழலிலும் சிக்குமாறு செய்கிறது. இது அப்படியே முடிந்து போகாமல் க்ருபா நாட்டத்தால் அவர்களை இவற்றினின்று மெல்ல மெல்ல மீட்டுத் தன் ஏகப் பெருவாழ்வில் ஐக்யமுற்று உயிர்த் தத்வமாகவே நிற்கவும் வழி காட்டுகிறது. இங்கேயும் லீலை தொடர்வதால் அச்சிறு வாழ்வினரே ஸ்வதந்திரத் தேர்வும் ஸ்வயப் ப்ரயத்னமும் செய்வது போலத்தான் காட்டி, அதற்கேற்பவே தன் க்ருபையை ஸூக்ஷ்மமாகப் பொழிந்து மேலே மேலே நடத்திச் செல்கிறது. இப்படிப்பட்ட ப்ரயத்னமாக ஸாதனை என்றும் அதனை ஸாதனை ‘க்ரமம்’ என்று ஆக்கும் பல மார்க்கங்களும் நிச்சயம் இருப்பதாகவே வியவஹாரத்தில் காட்டுகிறது. முற் கர்மாவைக் கழித்துக் கொள்ள உபாயமாகப் பற்றற்ற கர்மாவையே மார்க்கமாக வைத்திருப்பது பரம ஸத்தியமே. சிறிய தனி மனத்தைக் கழித்துக் கட்டுவதற்குப் பூர்வாங்கமாகச் சலனமயமான அதனை ஒருமுகப்படுத்த பக்தி மார்க்கத்தையும் அவசியமானதாக வைத்திருக்கிறது. மனமே மனிதன் என்றுள்ள நிலையில் மனங்கடந்த உயிர்த் தத்வத்தை எப்படிப் பிடிக்க முடியும் ? அதனால் அம் மனோதீதமே மனத்திற்குப் பிடிபடும் ஸகுண ஈச்வரனாகிறது. அது மட்டுமின்றி, லீலா ருசியில் அந்த ஒரே ஈச்வரன் பல்வேறு மனப்பான்மையினரைக் கவரும் வகையில் பல தெய்வ வடிவங்களாகவும், அவதார -- ஆசார்ய மூர்த்தங்களாகவும் ஆகி, மாந்தரை பக்தி மார்க்கமெனும் அன்பு வழியில் ஈர்த்து அவர்தம் மனத்தைத் தன்னில் ஒருமுகப் படுத்துகிறான். ஒருமுகப்பட்டபின்பே மனம் புத்துருப் பெற்று, தன்னையே கடக்கும் ஸூக்ஷ்ம தத்வத்தில் பிரவேசித்துத் தன்னை அடியோடு கரைத்துக் கொள்ள முடியும். இதற்கு உபாயமாகவே ஞான மார்க்கம் வைக்கப்பட்டிருக்கிறது. அதில் மெய் நாட்டத்துடன் க்ருபா சக்தியின் இறுதிக் கொடையாக சிறு மனம் சிதைந்து, சிறு வாழ்வு பெருவாழ்வாகி, சிற்றுயிரே ஏக உயிர்த் தத்வமாக நிற்கிறது.
இம் மார்க்கங்களை விவரமான ஒழுங்கு விதிகளாக வகுத்துத் தர அப்பேருயிரேதான் பென்னம் பெரியோர் மூலம் ச்ருதி, ஸ்மிருதிகளான வேத தர்ம சாஸ்திரங்களைக் கொடுத்திருக்கிறது. அவற்றில், குறிப்பாக, அடித்தளமான கர்ம மார்க்கத்தின் ஆசார அனுஷ்டானங்களில் ஏன் இத்தனை வித வித்யாஸங்களென்றால், முற் கர்மா யாவருக்கும் ஸமமாயில்லாமல் விதவிதமாக வித்யாஸப்பட்டு அதற்கேற்பவே மறு பிறவி வாய்ப்பதால்தான். எப்பிறவியானாலும் அதற்கான குணத்தையும் கர்மத்தையும் செவ்வை செய்ய அநுகூலமாகவே விதிகள் உள்ளன. வேறெந்த நாட்டிலுமின்றி இங்கு மட்டும் இப்படி இருப்பானேன் என்பதற்கு விடை இந்த சாஸ்திரப்படியே நமது ஸமூகம் ஒழுகி வந்த வரையில் மட்டுமில்லாமல், அந்த ஒழுகுமுறை பாதிக்கப்பட்டும் பழைய ‘பெடல்’ வேகம் தேயாமலிருக்கும் இன்றைக்கும் கூட, இங்கேதான் மற்ற எல்லா நாடுகளையும் விட அதிகமான ஞானியரும், யோகியரும், பக்தரும், சித்தரும் வாழையடி வாழையாகத் தோன்றி, அந்தப் பிறநாட்டினரும், ‘ஆன்மியத்திற்கு பாரதமே’ என்று கொண்டாடுவதிலேயே இருக்கிறது.
இப்படிப் புட்டுப் புட்டுத் தெரிந்துகொள்ளு முன்பே ‘இவர்தான் ஜகத்குரு; இவர் காட்டும் பாதையே ஜகத்திற்கானது’ என்று ஆவி அறிந்து கொண்டது. ‘இவர் வழி போனால் உலகு உருப்படாது. நல்ல வேளை, பெரும்பாலான மக்கள் அப்படிப் போகவில்லை’ என்று எண்ணியவன், ‘உலகு உருப்பட வேண்டுமானால் இவரின்றி வழியில்லை. அனைத்து மக்களும் இவர் காட்டுவதே கதி என்று சேர மாட்டார்களா ?’ என்று எண்ணலானேன் !
உலகத்தின் கதியும் கதையும் இருக்கட்டும். சிறியேனான நான் ஏன் அதுபற்றி அதிகம் சொல்ல வேண்டும் ? என் கதை என்னவாயிற்று, சொல்கிறேன்.
தொடரும்…………………………..