Post by anusham163 on Aug 12, 2014 11:18:38 GMT 5.5
தடுத்தாட்கொண்ட புராணம்.
ரா.கணபதி.
பகுதி 6
என் பெற்றோருக்கு அவர்களை ஸ்ரீசரணர்கள் கண்டுகொள்ளாவிட்டாலும் என்னை இப்படி ஏகமாகக் ‘கண்டு கொண்டதில்’ திருப்தியும் ஸந்தோஷமும். அடிநாளிலிருந்தே நோஞ்சான், நாலைந்து வருஷம் முன்பு கவலைக்கிடமாகப் படுத்துப் பிழைத்தாலும் ஓவர்டோஸாலேயே நலிவு கண்டவன், அவர் கண்டு கொண்டதில் வலிவு காண்பேனென்று ஊருக்குத் திரும்பும் வழியில் அவர்கள் பேசிக் கொண்டார்கள். உணர்ச்சிக் கூத்துக்களுக்கு இடம் கொடாதவர்களாதலால் இதை ஓவர்டோஸாகப் பேசாமல் விட்டும் விட்டார்கள். (அதனாலேயே பிற்பாடு நான் நல்லாரோக்கியம் பெறாமல் இருந்ததில் ஸ்ரீசரணர்களிடம் ஏமாற்றமடையாமலும் இருந்தார்கள்.)
என்னைப் பொறுத்தமட்டிலோ அந்த ஓரிக்கை நிகழ்ச்சியும், அதன் நடுநாயகரும் ‘ரைட் ஆஃப்’ செய்யப்பட வேண்டிய விஷ்யங்களாகவே தோன்றின. அன்றிரவு படுக்கும் முன்பே தன்னியல்பாக ‘ரைட் ஆஃப்’ ஆகியும் விட்டன.
மறுநாள் காலை எழுந்திருக்கும் போது ---ஸ்ரீசரணர்கள் நினைவுதான் !
தொடர்ந்தும் அதே நினைவு !
அவரை நினைக்கிறேன் என்பது எனக்கே தெரியாமல், ஆனாலும் அவர் நினைவாகவே இருக்கிறேன் -- நாள் முழுவதும், மறுநாளும், மூன்றாம் நாலாம் நாளும் கூட !
‘ஓ ! அவரையா நினைக்கிறோம் ?’ என்று தெரிகிற அபூர்வமான சில சமயங்களில் ‘எதற்காக நினைக்கிறோம் ? அந்தக் கிழவருக்கும் நமக்கும் என்ன சம்பந்தம் ?’ என்ற கேள்வியும் எழுகிறது.
ஆனாலும் அந்த நினைவு மஹா ப்ரவாஹம் சிற்றலையான கேள்வியை உடனுக்குடனே விழுங்கியும் விடுகிறது.
அவரை நினைப்பதைத் தவிர வேறெதுவும் செய்யத்தெரியவில்லை; செய்ய முடியவில்லை.
‘ஏன் நினைக்க வேண்டும் என்று காரணம் தேடுவானேன் ? ஏன் நினைக்காமலிருக்க வேண்டும் ? நெஞ்சத்திற்கு இத்தனை ரஞ்சகமாக உள்ள ஒன்றை ஏன் நினைக்காமலிருக்க வேண்டுமாம் ? அப்படிச் சொன்னால் கூடப் போதாது; போதவே போதாது. அவரை நினைப்பதற்குத்தான் நினைப்பு உறுப்பாக இந்த அந்தஃகரணமே நமக்கு இருக்கிறது. அவரை நினைக்காவிட்டால் ..?
ஆம், உணர்வு அந்த அளவுக்கு ஓங்கியிருந்தது --- ‘அவரை நினையாவிட்டால் உயிர் தரிக்க முடியாது !’
“ மறப்பேன் அலேன் உன்னை, ஓர் கணமேனும்
மறக்கில் அன்றே இறப்பேன்;
இது சத்தியம், சத்தியம், சத்தியம் !”
என்று வள்ளலார் சொல்வதாக்கும் அன்று என் அநுபவ நிலையாயிருந்தது !
இந்த அதிசய மாற்றம் எப்படி நடந்தது ? “மாற்றாரை மாற்றழிக்க வல்லான்” இந்த மாற்றானை அழிக்காமல் இவனுடைய மாற்று மனப்போக்கை மாத்திரம் அழித்து இவனை வாழ்வித்தது எப்படி ? அதுவும் மாறாக இருந்ததற்காக இவன் குற்றவுணர்ச்சி கொள்ளாமல், மன்னிப்புக்கு மன்றாடாமல் இத்தனை இயல்பாக, ரம்யமாக ?
அன்று படுக்குமுன் அவரை ‘ரைட் ஆஃப்’ செய்தேனே, அல்லது அப்படி நினைத்தேனே ! அப்புறம் அந்த இரவு இவனுடைய உள் நினைப்பில் அவர் தங்கி, ‘ஓரிரவு இருக்கை’ கொண்டு, என்ன செய்தார் ? நேரிலே ‘இம்ப்ரெஸ்’ செய்யாதவர் நித்திரையிலே எப்படி ஆழ ‘இம்ப்ரெஸ்’ பதித்தார் ? விடியும்போது இவன் வாழ்வுக்கே விடிவாக உள்ளுக்கும் உள்ளிதயத்தில் ஸதாகால இருக்கை கொண்டார் ? அந்த நாலு நாளுக்குப் பின் ஸதாகால நினைப்பு நலியத்தான் ஆரம்பித்து விட்டாலும், மூன்று மாமாங்க காலத்திற்குப் பின் இன்று இதை எழுதும்பொழுதும் இதயத்திலகும் மெய்ப்பொருளின் மூர்த்தமே அவர் என்பது நிச்சயமாகிவிட்ட உண்மையாகத்தானே தெரிகிறது ? அவரில்லையேல் இவனே ‘ரைட் ஆஃப்’ ஆக வேண்டியதுதான் என்று எப்படி ஆக்கினார் ? இஞ்ஜெக்ஷன் போட்டதாகவோ, அம்பு எய்ததாகவோ மலர் சொரிந்ததாகவோ ஒன்றும் தெரியவில்லை என்றேன். ஆனால் லேட் ஆக்ஷன் மருந்து என்பார்களே அப்படி, அந்த மருந்து வேலை செய்வதும் தெரியாமலே, இத்தனையும் அந்த இரவு செய்திருக்கிறார் ! சித்த நோய்க்கு இஞ்செக்ஷன்; முன்வினைக்கு அப்படி; முள்ளான எதிர்ப்புணர்ச்சியே இசைவுணர்வான மென்மலராயிருக்கிறது; ப்ரேம அம்ருதம் ஊட்டும் அமோகமே நடந்திருக்கிறது ! அவரை ‘இன்ன’ வென்று புரிந்து கொண்டு என்பதில்லை; உண்மையான கவிதையெனில் அதன் பொருள் அறிவுக்குப் புரியுமுன்னரே, ஸாரம் உள்ளத்துள் இறங்கிவிட வேண்டுமென்று டி.எஸ்.எலியட் சொன்னதுபோல் அவர் ‘இன்ன’ என்று புரியுமுன்பே ‘என்ன’வோ அந்த ஸாரமாக உள்ளே புகுந்து விட்டார் ! போகப் போக, புரியக் கூடிய அளவுக்குப் புரியவும் செய்தது. ஒன்றேயான உயிர்த்தத்துவம் என்று நான் கருதி வந்ததன் ஸாக்ஷாத் உருவமே அவரென்று புரிந்தது. அநாமதேயப் பட்டாளத்தில் ஒருவர் என்று அன்று நான் எண்ணியவர் வாஸ்தவத்தில் அந்த அநாமதேய ஏகத்தின் நாம—ரூபச் சின்னமே என்று புரிந்தது.
தொடரும்…………………………