Post by anusham163 on Aug 11, 2014 11:23:07 GMT 5.5
தடுத்தாட்கொண்ட புராணம்.
ரா.கணபதி.
பகுதி 5.
பாரிஷதர் ப்ரஸாத மடக்கை ஸ்ரீசரணர்களின் முன் நகர்த்தினார். அவர்கள் அப்போதும் திருஷ்டியைப் பெயர்க்காமலே விரல்களால் மடக்கைத் தீண்டி எங்களிடம் ஜாடை காட்டினார்கள். மூவருமாகச் சேர்ந்து அதை எடுத்துக் கொண்டோம்.
ஸ்ரீசரணர்களிடம் துரைப்பாண்ணா அகத்துப் பழையது பற்றித்தான் கேட்க முடியவில்லை என்றில்லாமல், எதுவுமே பேசுவதற்கில்லாமல் ஆக, தந்தையார் தாழ்வாரக் குறட்டுக்கு ஒதுங்கினார். அம்மாவும் நானும் அவரைத் தொடர்ந்தோம். அந்த ஓரமும் தூரமில்லை என்று ஸ்ரீசரணர்களின் திருஷ்டியும் என் மேலேயே தொடர்ந்து படர்ந்தது.
அடுத்து, எங்களோடு வந்த என் பெரிய சிற்றப்பாவின் மைத்துனர் ஸ்ரீசரணர்களை நமஸ்கரித்தார். அவரை ‘எங்களோடு வந்த’ என்பதை விட “எங்களையே அங்கு வரச்செய்த” என்பதுதான் பொருத்தமாயிருக்கும். அப்போது காஞ்சீபுரத்தில் கோயில்களின் கணக்குத் தணிக்கை அலுவலில் இருந்த அவருடைய அழைப்பின் மேல்தான் நாங்கள் அந்தப் பயணம் மேற்கொண்டதே.
கோயில் ஆடிட்டிலிருந்த தம்மிடம் ஸ்ரீசரணர்கள் நிறையப் பேசுவாரென்று அவர் எதிர்பார்த்திருந்தார். ஆனால் அவருக்கு ஏமாற்றமே கிட்டிற்று. ஸ்ரீசரணர்கள் அதே மௌனத்தோடு அதே குறிமாறாப் பார்வையோடுதான் அமர்ந்திருந்தார்.
பாரிஷதரின் ‘அனுக்ரஹ’த்தில் ப்ரஸாதம் பெற்று சிற்றப்பா மைத்துனர் எங்களோடு சேர்ந்து கொள்ள, இனி அங்கு நிற்பதில் காரியமில்லை என்று புறப்பட்டு விட்டோம். அரைமணிதான் அங்கிருக்க முடியுமென்று நினைத்தவர்கள் கால்மணியிலேயே புறப்பட்டிருப்போமென்று நினைக்கிறேன். ஆனால் ஒரு வேற்று மனிதரின் இடைவிடாத பார்வையிலிருப்பதென்றால் அந்தக் கால்மணிக்கே கால் யுகத்துச் சுமை ஏற்படுந்தானே ?
‘அப்….பாடா’ என்று நான் நிம்மதிப் பெருமூச்செறிய, வெளியே வந்து சேர்ந்தோம்.
அங்கேயிருந்தவர்களெல்லாம் ஸ்ரீசரணர்கள் என்மேல் செலுத்திய கால்மணி நேர ‘நான்—ஸ்டாப்’ கடாக்ஷத்தையே பேசி வியந்தார்கள் இப்படியொரு ‘பாக்யம்’ பெற்ற என்னைப் பாராட்டினார்கள்.
“சித்தே முந்தி வரைகூட பெரியவா பந்தாடிண்டிருந்தாளாம். அதென்ன, உங்க பிள்ளையைப் பார்த்ததுலேயிருந்து அப்படியே மாறிப்போய் அதுமேலேயே வெச்ச கண் வாங்காம சமைஞ்சுட்டா ? இப்படியொரு கடாக்ஷம் கெடக்கறத்துக்கு மஹா பாக்யம் பண்ணியிருக்கணும். கொழந்தை ஆனாலும் பூஞ்சையா புல் தடுக்கியா இருக்கோன்னோ ? அதான் ஒடம்பு நன்னாகணும்னு த்ருஷ்டியாலேயே ஆரோக்யத்தை இஞ்ஜெக்ஷன் பண்ணியிருக்கா” என்று சீடை—முறுக்குப் பாட்டி, தன்னை ஸ்ரீசரணர்கள் கவனிக்காததையும் பொருட்படுத்தாமல், என் பெற்றோரிடம் மனஸாரச் சொன்னாள்.
நான் உள்ளே அசடு வழிந்து கொண்டு நின்றிருக்க வேண்டும் ! அவர்கள் சொன்ன ‘பாக்ய’த்தின் ஸங்கேதமாக உள்ளே ஒரு உணர்ச்சியும் ஏற்பட்டிருக்கவில்லையே ! ஸ்ரீசரணர்களைப் போன்ற ஸ்தானத்திலுள்ள ஒருவர் கால்மணி நேரம் மற்ற எல்ல கார்யங்களையும் நிறுத்தி விட்டு விடாமல் பார்ப்பது என்றால், அது ஸாதாரண விஷயமல்லதானெனினும் அப்போது அப்படித் தெரியவேயில்லை ! ‘அப்படியொன்றும் இஞ்ஜெக்ஷனாகவோ, கவிகள் சொல்லும் பார்வைக் கணையாகவோ அந்தப் பார்வை துளைத்துக் கொண்டு உள்ளே போய்விடவில்லையே ! அல்லது பூச்சொரியலாக மென்மை கூட்டவோ, அம்ருத கடாக்ஷம் என்பதாக இனித்துக் குளிர்ந்து உள்ளே பாயவோ இல்லையே ! கிழவர் என்னவோ பார்த்தாராக்கும்’ என்று லேசாக நினைத்தேன்.,
தொடரும்……………………………………..