Post by anusham163 on Aug 9, 2014 10:49:50 GMT 5.5
தடுத்தாட்கொண்ட புராணம்.
ரா.கணபதி.
பகுதி 4.
எனக்கு வெட்கமாக இருந்தது. கண்ணைத் தாழ்த்திக் கொண்டேன்.ஆனாலும் அவர் பார்த்துக்கொண்டேதான் இருக்கிறாரென்று உள் மனத்துக்குத் தெரிந்தது. அது மட்டுமில்லை; இன்னும் உள்..ள் மனத்துக்குத் தெரிந்தது, ‘நான் உள்ளே நுழைந்ததும் முதலில் பார்த்தாரே, அதிலிருந்து அந்தப் பார்வை என்னை விட்டு நகரவில்லை’ என்று !
சிறிது போது நகர்ந்தது. பதிலேதும் வராததால் பாட்டி ஒதுங்கி விட்டாள்.
எங்கள் ‘டர்ன்’ வந்தது.
தகப்பனார் எண் சாணுடம்பு நாலு சாணாக, கையுறையை ஸமர்ப்பித்தார்.
அவர் முன்பே சொல்லியிருந்தபடி, அவர், என் தாயார், நான் மூவரும் சேர்ந்து ஏக காலத்தில் நமஸ்கரித்தெழுந்தோம்.
‘ஸென்ஸிடிவெ’ உடம்பானதால் அந்த முற்றம் முழுதும் பரப்பி வைக்கப்பட்டிருந்த வைக்கோலின் ஸ்பரிசத்தில் சுணையெடுத்தது. ஸ்ரீசரணர்களின் பார்வையோ ‘ஸென்ஸிடிவ்’ உள்ளத்தில் சுணையெடுக்கச் செய்தது.
ஆம். இன்னமும் அவர் பார்வையை என் மேலிருந்து அகற்றவில்லை.
நான் திருட்டுத்தனமாகக் கண்களை லேசாக உயர்த்தி அவரைப் பார்ப்பதும், அவரும் பார்க்கிறார், பார்க்கிறார், பார்த்துக் கொண்டேயிருக்கிறாரென்பதில் தாழ்த்திக் கொள்வதுமாக இருந்தேன்.
நமஸ்கரித்தெழுந்த பிதா ஒன்றும் சொல்லாமல் நின்றார். அதிகாரப் போக்கும் தன் முனைப்புமே அவரது பொது இயல்பெனினும் ஸ்ரீசரணர்கள் என்றால் ஸப்த நாடியும் ஒடுங்கி நிற்பார். அப்படித்தான் இப்போதும் நின்றார். ஸாத்வியான அம்மாவோ அங்கே வாய் திறப்பாள் என்று நினைப்பதற்கே இடமில்லை.
ஆனால் மற்றவர் வாய் திறந்தாலும் திறக்காவிட்டாலும் தாமே பேசி, ‘ம்ருது பூர்வ பாஷி’யாக முன்சொல், இன்சொல் பேசி, அவர்களையும் பேச வைப்பவரென்றும், அவர்களுடைய பூர்வீகம் பற்றிய விருத்தாந்தங்களை குடைந்து குடைந்து கேட்டு அவர்களுக்கே புதுப் புதுப் பழைய தகவல்கள் தருபவரென்றும் புகழ் கொண்ட ஸ்ரீசரணர்களும் அன்று வாய் திறந்தாரில்லை.
பாரிஷதரே ‘யார் ? என்ன? எங்கேயிருந்து ?’ இத்யாதி கேட்டு என் தகப்பனாரை வாய் திறக்க வைத்தார். ‘டு தெ பாயிண்ட்’ மட்டுமே.
அந்நாளில் (அதன் பின் பல்லாண்டுகள் கூட) இடை மனிதரின்றி ஸ்ரீ சரணர்களே கேட்டுக் கொள்வார்கள். அன்றோ கேட்டுக் கொண்டார்களா, இல்லையா என்றே தெரியவில்லை. காது திறந்திருந்ததோ, இல்லையோ, வாய் நிச்ச்யமாகத் திறக்கவில்லை. மறுமொழி கூறவில்லை. கண் திறந்திருந்தது; ஆனால் என்னொருத்தன் மேலேயே இருந்தது.
மௌனமாகப் போயிற்று, நெடுங்காலமாகத் தோன்றிய சில நிமிஷங்கள்.
பொறுத்துப் பார்த்த பாரிஷதர் இன்னும் தர்சனத்திற்கு அடியார்களிருந்ததால் என் தந்தையாரிடம் முடிவாக ‘ ஏதாவது விஞ்ஞாபனம் இருந்தா பண்ணிக்கலாம்” என்றார்.
‘அனுக்ரஹம் இருக்கணும்” என்று சொல்வதாக நினைத்து, நாத் தழுதழுத்து ஏதோ குழரினார் தந்தை.
தொடரும்…………………………………………