Post by anusham163 on Aug 7, 2014 23:13:56 GMT 5.5
தடுத்தாட்கொண்ட புராணம்.
ரா.கணபதி.
பகுதி 2.
மொத்தத்தில், அந்த 57 மத்தியில் ஓரிக்கை எனும் ஓரிரவிருக்கையில் என் பெற்றோருடன் ஸ்ரீசரணர்களை முதன் முறை தர்சிக்கச் சென்றபோது, ‘தர்சனம்’ என்ற எண்ணமின்றி, ‘பார்த்துத் தீர வேண்டியிருக்கிறதே’ என்ற ‘திவ்ய’மான எண்ணத்துடனேயே சென்றேன். “சொல்வது அத்வைதம். அப்படிப் பட்டவர்களுக்கு மடமாம்! அது போதாதென்று, அங்கு அத்வைத வாடையே இல்லாத பூஜைதான் முக்யமான காரியமாம் ! அதையும் விட மோசம் , ஆயிரத்தெட்டு வித்யாஸங்களைக் கட்டியழும் ஆசாரங்களைக் ‘கொந்தி’க் கொண்டிருப்பது ! இவர்களை ஆதரிக்கும் வரையில் உலகம் உருப்படாது. நல்லவேளை, பெரும்பாலான மக்கள் இவர்களை அதிகம் கண்டு கொள்ளாமலிருக்கிறார்கள்’ என்று ‘தேர்ந்த, தெளிந்த’ சிந்தனையோடு ஸ்ரீசரணர்களின் முகாம் சென்றடைந்தேன்.
அப்போது மாலை ஐந்து மணியிருக்கும். தர்சனம் முடித்து, நாங்கள் ஸ்ரீபெரும்பூதூர் திரும்பி (அப்போது அங்குதான் வாஸம்) எங்களுக்குக் கார் உதவியிருந்த அன்பருக்கு அதை ஏழு மணிக்குள் திருப்பியனுப்ப வேண்டியிருந்ததால் அரை மணிக்குமேல் அங்கிருப்பதற்கில்லாமலிருந்தது. வழியில் காமாக்ஷி ஆலயத்தில் தாமதமானதால் இப்படியாயிற்று. அதில் தந்தையாருக்கு மிகவும் வருத்தம்.
ஸ்ரீசரணர்கள் குழந்தைப் பிராயத்தில் விழுப்புரத்திலிருந்தபோது அவருடைய தோழர்களில் ஒருவர் பிற்காலத்தில் தென்னார்க்காட்டில் பிரபல வழக்குரைஞரான ஸ்ரீ சிதம்பரையர்; எம்.எல்.ஏ யும் ஆனவர். அந்த ஆதி நாளில் என் பெரிய பாட்டனாரும் , எங்கள் குலதேவியுடன் ப்ரத்யக்ஷமாக உரையாடக்கூடிய புனிதருமான துரைப்பா(அ)ண்ணா எனப்பட்ட துரைஸ்வாமி சாஸ்திரி என்ற இல்லறத்துறவி விழுப்புரத்தில்தான் ரெவின்யூ அதிகாரியாயிருந்தார். இல்லறத்துறவிக்கு மகப்பேறு இல்லாவிட்டாலும், அக்கால அவிபக்த குடும்பமாதலால் வீட்டில் தாயாதிக் குழந்தைகள் புழக்கம் உண்டு. அவர்களில் ராஜா என்ற பிள்ளை தமக்கும், குட்டி ஸ்ரீசரணர்களுக்கும் ஸ்னேஹம் என்றும், தாமும் குட்டி ஸ்ரீசரணர்களும் ராஜாவோடு கூட எங்களகத்தில் முப்பாட்டி ஒருத்தி பிசைந்து போட்ட ’பழையது’ உண்டதுண்டு என்றும் சிதம்பரய்யர் கூறியிருந்ததை முடியுமாயின் ஸ்ரீசரணர்களின் காதில் போட்டு உறுதி பெறவேண்டுமென்று தந்தையாருக்கு ஆசை. இதுபோல் விஷயம் பேச மிகவும் தயங்கும் பரம பவ்ய பக்தர்தானவர். ஆனாலும் அன்று பகல் நாங்கள் காஞ்சி வந்தபோது ஸ்ரீசரணர்கள் அன்றைக்கு உத்ஸாஹமாக ஊர்க்கதைகள் பேசிக்கொண்டிருப்பதாகத் தெரிய வந்ததால், நாங்களும் அவருடன் ஸாவகாசமாகப் பொழுதைச் செலவிட்டு, மனத்திலிருப்பதைக் கேட்கலாமென்று எண்ணினார். எனினும் பிற்பாடு மாலை நான்கு மணிக்கு காமாக்ஷி ஆலயம் திறந்தபின் அங்கு அர்ச்சனை முடித்தே ஓரிக்கை செல்லவேண்டி நேரிட்டுவிட்டதால், அங்கே அரை மணிக்குமேல் இருப்பதற்கில்லாமலாயிற்று.
இப்படி நிர்ப்பந்தமாச்சே என்று தகப்பனார் நொந்துகொள்ள, எனக்கோ ‘பந்தப் படுத்தும் இந்தப் புழுக்கச் சூழலில் அரை மணிக்கு மேல் அவதிப்பட வேண்டாமே’ என்று கொஞ்சத்தில் கொஞ்சம் ஆறுதலாயிருந்தது.
ஸ்ரீமடத்தின் முகாமாயிருந்த பழைய ஓட்டுக் கட்டிடம். அங்கே குடியிருந்த கூடியிருந்த பஞ்சக்கச்ச—குடுமி ‘பத்தாம் பசலிகள்’, மடிசார் மாமிகள், முக்காட்டுக் கைம்பெண்டிர், “பெரியவா, பெரியவா” என்ற அடித்தொண்டை பக்திக் கிசுகிசுப்பு யாவும் என் எதிர்மறை உணர்ச்சிக்குத் தூபம் போட்டன.
சட்டையைக் கழற்றி விட்டுத்தான் முகாமுக்குள் போகவேண்டும் என்று தெரிந்தபோது எதிர்ப்பு எரிச்சலாகவே ‘உயர்’ பரிணாமம் கண்டது ! ‘நல்ல அத்வைதம் ! இப்படியொரு ஆசார்யார் ! இப்படியொரு கேள்வியே கேட்கத் தெரியாத அஜக்கூட்ட சிஷ்யகணம்!’ என்று மனசு பொருமியது.
நாலு பேர் பார்க்க சட்டையைக் கழற்றிவிட்டு நிற்க, நான் பட்ட பாடு உண்டே ! ‘ஏண்டா வந்து தொலைந்தோம்?’ என்றே நெஞ்சாழத்தில் கோப வேதனை குமுறியது. இதற்கு மாற்றுப் படலம் பிறந்த பின்னுங்கூடச் சிலகாலம் சட்டையை மட்டும் அசட்டை செய்ய முடியாமலேதான் சிரமப்பட்டேன். அன்பர் ‘பரணீதர’ னுக்கும் ஆரம்ப நாட்களில் இதே ‘காம்ப்ளெக்ஸ்’ இருந்ததென்று படிக்க ஆச்சரியமாகவும், ஆச்வாஸமாகவுங்கூட இருந்தது !
தொடரும்…………………………………