Post by uma2806 on Jul 1, 2014 11:31:08 GMT 5.5
தேடி வந்தருள் தந்த தெய்வம்
அதே ரத யாத்திரையில் இன்னொரு எளிய பக்தர் கூறிய சம்பவம், ஆட்கொண்டருளும் மஹா பெரியவா கருணையை எடுத்து இயம்புகிறது.
அந்த ஏழைக்கும் வறுமைக்கும் நெருங்கிய தொடர்பு. அவர் பட்ட கஷ்டங்களைச் சொல்ல இயலாது. 1984-ஆம் ஆண்டு மஹாபெரியவா திருமங்கலம் கிராமத்திற்கு விஜயம் செய்தபோது, அங்கே முகாமிட்டிருந்த தெய்வத்தை தரிசிக்க இந்த ஏழை பக்தர் போவதுண்டு.
இந்தப் பாமரனுக்கு மஹாபெரியவா இன்னார் என்பதோ, அவர் தம் மேன்மையை அறிந்து அவர் மீது பக்தி கொள்ளும் மனோ நிலையோ இல்லை. ஆனால் தினமும் வீட்டில் சாப்பாட்டிற்கே வழி இல்லாததால் மஹான் இருக்கும் முகாமில் அன்னதானம் நடைபெறுவதால் அந்த இடத்திற்குச் சென்று வயிறு நிறைய உணவருந்தினார். வறுமை மட்டும் அப்படியே இருந்தது.
மஹானின் முகாம் கிராமத்தை விட்டுச் சென்ற பிறகு அந்த மதிய வேளை உணவுக்கும் திண்டாட்டம். நான்கைந்து பேர் அடங்கிய குடும்பத்தை அவரால் காப்பாற்ற முடியாமல் பணச்சிக்கல், கடன் என்று பிரச்னைகள் எழ, தன் உயிரை மாய்த்துக் கொள்வதைத் தவிர வேறு வழி அவருக்குப் புலப்படவில்லை.
இப்படி முடிவெடுத்த அவர், எல்லோரும் சிறப்பாக போற்றிக் கொண்டாடும் காஞ்சி மஹானைத் தரிசித்த பின் தன் உயிரைப் போக்கிக் கொள்ளலாம் என்ற முடிவோடு காஞ்சிக்கு வந்தார்.
மஹானின் எதிரே ஒன்றும் சொல்லாமல் மெளனமாக நின்றார்.
மஹான் கருணையோடு இவரைப் பார்த்தார். நடந்தது, நடப்பது, நடக்கப்போவது என்று எல்லாவற்றையும் தெரிந்தவராயிற்றே அவர்.
“உன் அடுத்த புரோகிராம் என்ன?” என்று ஒரு கேள்வியைத் தன் முன்னே நிற்பவரிடம் கேட்டார்.
வாழ்க்கையின் கடைசி அத்தியாயத்தில் இருக்கும் அந்த எளியவர் என்ன பதில் சொல்வார்? தனது தற்கொலை திட்டத்தையா மஹானிடம் தெரிவிப்பார்?
“என்ன செய்றதுன்னே தெரியல்லே சாமி, எங்க ஊருக்குத்தான் போகணும்” என்றார்.
சொன்னதில் தனக்கு ஆறுதல் கிட்டாதா என்கிற ஏக்கம் தொனித்தது.
“நான் உனக்கு பஸ் சார்ஜ் தர்றேன்…. இப்படியே உன் ஊருக்குப் போகாதே…… நேரே இங்கிருந்து மெட்ராஸ் போய் பாரிஸ் கார்னர்லே இறங்கி, அங்கிருந்து மறுபடியும் பஸ் பிடிச்சு உன் ஊருக்குப் போ” அந்த நபர் புரிந்து கொள்ள முடியாத கட்டளையாகச் சொல்லி அனுப்பினார்.
மடத்திலிருந்து அவரது பஸ்சார்ஜுக்குப் பணம் கொடுக்கப் பட்டது.
‘காஞ்சியிலிருந்து வேலூர் பக்கம் உள்ள தன் கிராமத்திற்கு நேரடியாகப் போகச் சொல்லாமல், சென்னைக்குப் போய் தன் ஊருக்கு ஏன் இந்த சாமியார் போகச் சொல்கிறார்?” என்று புரியாதவராய் மஹானின் கட்டளைப்படியே கிளம்பினார்.
சென்னை பாரிஸில் இறங்கி தன் ஊருக்குப் போக பஸ் நின்று கொண்டிருந்த இடத்திற்குப் போக, அங்கே தெய்வம் அனுப்பிய தூதராக ஒருவர் வந்தார். இவரது பால்ய நண்பர். வெகு தினங்களுக்குப் பிறகு இந்தச் சந்திப்பு. நண்பர் அவரை ஓட்டலுக்கு அழைத்துச் சென்று வயிறு நிறைய டிபன் வாங்கிக் கொடுத்தார். மஹானின் கருணையை எண்ணியபடி, நண்பர் தன் குடும்பத்தைப் பற்றிக் கேட்டபோது தான் பட்ட அவலத்தை அழுதபடியே கொட்டித் தீர்த்தார்.
பரமேஸ்வரரே, தன் காருண்யத்தினால் அனுப்பிய நண்பரல்லவா?
இவருக்கு ஆறுதல் சொல்லி எல்லா கடன்களையும் அடைத்து, குடும்பத்தை தற்காலிகமாக கவனித்துக் கொள்ளவும் பணம் தருவதாகச் சொல்லி, அப்படியே செய்து இவரைக் காப்பாற்றினார்.
அவல நிலையில் இருந்து விடுபட்டவர் வேலையும் கிடைக்கப் பெற்று, 25 ஆண்டுகளுக்குப் பிறகு தனது பெண்ணின் கல்யாணத்தையும் விமரிசையாகச் செய்து, மஹாபெரியவா ரதயாத்திரையாக சிலை ரூபத்தில் தரிசனம் தர வந்தபோது தனது நன்றியைக் கண்ணீராகக் கொட்டித் தீர்த்தார்.
இப்படித்தான் அந்தத் தெய்வம் தனது கருணையால் வலியச் சென்று தன்னை நம்பியவர்களைத் தடுத்தாட்கொள்கிறது.
ஜய ஜய சங்கர! ஹர ஹர சங்கர!!