Who should get.. - from book of Sri Venkatasaamy
Jun 25, 2014 14:17:13 GMT 5.5
Sumi and radha like this
Post by uma2806 on Jun 25, 2014 14:17:13 GMT 5.5
பென்ஷன் யாருக்காக?
ஒரு நாள் மாலைப் பொழுது மஹான் ஸ்ரீமடத்தில் பக்தர்களுக்கு தரிசனம் அளித்துக் கொண்டிருந்தார். அங்கிருந்த பக்தகோடிகளில் ஒரு விதவையும் இருந்தார். வெள்ளுடை தரித்து, தன் தலை முடியை முண்டகம் செய்திருந்தார்.
பக்தர்கள் பலருக்கு அருளுரை வழங்கிக் கொண்டிருந்தபோது, இந்த வயதான மாது மஹானிடம் என்னவோ சொல்ல விரும்புவது போலத் தெரிந்தது. இத்தனைக்கும் அந்த மாது நீண்ட நாட்களாக மடத்திலேயே இருப்பவர்.
அவரது முறை வந்த போது –
“பெரியவாகிட்டே ஒரு விஷயத்தைப் பத்திக் கேட்கணும்” என்றார்.
“உனக்குமா பிரச்சினை…. சொல்லு?”
“இப்பல்லாம் சர்க்கார்லே வயசானவர்களுக்கு பென்ஷனா மாசம் இருபது ரூபாய் தராளாம்”.
“ஆமா, அதுக்கென்ன இப்போ?” மஹான் கேட்கிறார்.
“மடத்து மூலம் சிபாரிசு பண்ணா அந்தப் பணம் எனக்கும் கிடைக்குமோன்னோ”
லேசாகப் புன்னகைத்தார் மஹான்.
“கிடைக்குந்தான். சரி, உனக்கு இங்கே என்ன குறை? வேளா வேளைக்கு சாப்பாடு, புடவையும் தர்றா, தங்க மடத்திலேயே இடம், இதுக்கப்புறம் உனக்கு எதுக்கு பணம்?”
மஹான் இப்படி ஒரு பிரச்னையை எழுப்புவார் என்று அம்மையாருக்குத் தெரியவில்லை.
“சும்மா கிடைக்கிறதே வாங்கிக்கலாமுன்னுதான்” என்று மூதாட்டி மெதுவாகப் பேனினார்.
“இதோ பார், நானும் எந்தவிதமான ஆதரவும் இல்லாதவன் தான். ஏதோ மடத்திலே ஒரு மூலையிலே இருக்கேன். நாம் ரெண்டு பேர் வேணுமுன்னா பென்ஷனுக்கு மனு போடலாமா?” குறும்பாகக் கேட்டுவிட்டு மஹான் சிரித்தார்.
இதைக் கேட்ட அந்த மூதாட்டிக்கு வெட்கம் வந்துவிட்டது. தலையைக் குனிந்து கொண்டார். மஹான் லேசான குரலில் தொடர்ந்தார்:
“நமக்காவது ஒழுங்கா சாப்பிட சாப்பாடு கிடைக்கிறது. வெய்யில் மழையிலே ஒதுங்க ஒரு ஜாகை, உடலை மறைக்கத் துணி – இவ்வளவும் இருக்கு. இதில் எதுவுமே இல்லாத ஏழைகள் எத்தனை பேர் இருக்கா? அவாளுக்குத்தான் சர்க்கார்லே இந்தப் பென்ஷனை தர்றா…அதுக்கான திட்டமும் இருக்கு. நான் உனக்கு இப்போ பென்ஷனை வாங்கித் தந்தா ஒரு ஏழைக்குக் கிடைக்கவேண்டிய உதவி கிடைக்காமே போயிடுமோ இல்லையோ?” என்று கேட்டார்.
இது சிறுதொகைதான். ஸ்ரீமடம் சிபாரிசு செய்தால் அந்த விதவைக்கும் கிடைக்கும். இதனால் சர்க்காருக்கு நஷ்டமில்லை. ஆனால் இதனால் அரசாங்க உதவி தவறான நபருக்கு போனால் அது ஒரு ஏழையை வஞ்சிப்பது போலப் பெரும் பாவமல்லவா?
இதைக் கேட்டபின் தான் மூதாட்டிக்கு மனம் சமாதானமடைந்தது. நிம்மதிப் பெருமூச்சு விட்டார்.
ஜெய ஜெய சங்கர! ஹர ஹர சங்கர!!