Post by uma2806 on Jun 5, 2014 16:12:28 GMT 5.5
சுக்ரவார நைவேத்தியம் எங்கே?
காஞ்சிமஹான் காசியில் இருந்து திரும்பும் வழியில் ஒரிசா மாநிலம் பெர்ஹாம்பூரில் சாதுர்மாஸ்யம் அனுஷ்டிக்கும்போது பல நாட்கள் சுத்த உபவாசம் இருந்தார். இந்த உபவாச விரதத்தை மடத்தைச் சேர்ந்தவர்கள் கூட அறியாவண்ணம் மிகவும் ரகசியமாக அனுஷ்டித்துக் கொண்டு வந்தார். ஆனால் மடத்து பண விவகாரங்களைக் கவனித்து வரும் ராமசந்திர அய்யருக்கு எப்படியோ விஷயம் தெரிந்து விட்டது. மடத்தில் நடக்கும் எல்லா விஷயங்களையும் கூர்ந்து கவனிப்பவர் அவர். மஹானின் அருகில் நெருங்கி மெதுவான குரலில் உபவாசத்தை விடும்படி மன்றாடிக் கேட்டுக் கொண்டார்.
மஹானும் உடனே மடத்து பரிசாரகரை அழைத்து, மறுதினம் தன் உணவில் எவையெல்லாம் சேர்க்கப்படவேண்டும் என்று ஒரு பட்டியலே கொடுத்தார். கணக்கருக்கு தனது வேண்டுகோள் ஏற்றுக்கொள்ளப்பட்டதில் மெத்த மகிழ்ச்சி. இருந்தாலும் அவர் மனதின் ஆழத்தில் ஒரு சந்தேகம். சமையல்காரரிடம் போய்க் கேட்ட போது,
“நீங்க அந்தண்டை போனதும் பெரியவா அவர் மனசு சமாதானமாகணும்னு தான் அப்படிச் சொன்னேன். நான் சொன்னதை அடியோடு மறந்துடு” என்று சொன்ன உண்மையைச் சொல்லிவிட்டார்.
இதைக்கேட்டு ஆடிப்போன கணக்கர் மீண்டும் பெரியவாளிடம் போய் நின்றார். பேசினார். ஆனால் மஹான் பிடிகொடுத்தால் தானே? இவர் சந்திக்க வரும் நேரத்திலெல்லாம் அடியார்கள், சிப்பந்திகள், அறிஞர்கள் என்று யாரையாவது அருகில் வைத்துப் பேசிக்கொண்டே இருப்பார். பேசுவது மிகவும் முக்கியமான விஷயமாக இருக்கும்.
கணக்கர் எப்படி குறுக்கே பேச முடியும்? இப்படிப் பல நாட்கள் ஓடின. மஹானின் கடுமையான உபவாசம் தொடர்ந்தது.
முடிவில் ஒரு நாள் இரவு பத்துமணிக்கு மேல் கணக்கரிடம், மஹான் தனியாக அகப்பட்டுக் கொண்டார். அன்று சுக்ரவார பூஜை.
உடல் மிகவும் தளர்ந்த நிலையில் அப்பூஜையை முடித்து விட்டு, மஹான் ஓய்வுக்குப் போன சமயம் பார்த்து கணக்கர் அவர் எதிரில் போய் நின்றார்.
“நாளைக்குப் பெரியவா வயிறாற பிட்சை பண்ணாட்டா நான் இந்த மடத்தை விட்டேப் போயிடறேன்” என்று சொன்னார்.
முகமெல்லாம் சிரிப்பாக, “நீ இல்லாட்டா இந்த மடம் நடக்காதோ?” என்று பெரியவா கேட்டார்.
”அப்போ இந்த லோகத்தைவிட்டேப் போயிடறேன்” அழுகையும், ஆவேசமும் நிறைந்த குரலில் கணக்கர் மஹானிடம் முறையிட்டார்.
“நீ இல்லாவிட்டால் லோகம் நடக்காதோ?” என்று மஹான் கேட்கவில்லை. கேட்க முடியாது. ஒரு நன்றியுள்ள ஊழியராயிற்றே கணக்கர். “சரி பிட்சை பண்றேன். நாளைக்கென்ன, இப்பவே பண்றேன். வயிறாறப் பண்ணணுமின்னியே, பண்றேன்” என்று சிரித்துக் கொண்டே பேசினார் மஹான்.
“இதற்காகக் தான் நான் காத்துண்டிருக்கேன்” என்ற ராமச்சந்திரன், மஹானின் திருப்பாதங்களில் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கினார். கண்களில் ஆனந்த வெள்ளம். அந்த இரவு நேரத்தில் மஹான் பழமும் பாலும் தான் சாப்பிடுவார். வேறு எதையும் உட்கொள்ளமாட்டார் என்று கணக்கர் நினைத்து சமையல் பணியாளரை அழைத்தார்.
“அவனை ஏன் இப்ப கூப்பிடறே? உன்னைத் தானே பிட்சை பண்ணி வைக்கச் சொன்னேன். நீயும் ஒப்புண்டேயே…”
‘அளவு தெரியாததாலே அவனைக் கேட்கலாமென்னுதான்” கணக்கர் இழுத்தார். ஆனால் உடனே போய் பழங்கள் நிறைந்த தட்டை மஹான் முன் கொண்டு வைத்தார். – அவர் வேண்டியதை எடுத்துக் கொள்ளட்டும் என்ற நினைப்பில்.
ஆனால் மஹானிடமிருந்து ஆச்சர்யமான கட்டளை ஒன்று அப்போது பிறந்தது.
“சுக்ரவார நைவேத்யம், சொஜ்ஜி, சுண்டல் எல்லாம் எங்கே? அதுகளைக் கொண்டா?” வியப்படைந்த கணக்கர் உள்ளே ஓடிப்போய் சமயலறையில் இருந்த சொஜ்ஜி, பஜ்ஜி, சுண்டல் பாத்திரங்களைக் கொண்டு வந்து மஹான் முன் வைத்தார். அவைகளில் பிரசாதம் இருந்தது. இதற்கு மேல் நடந்தது தான் ஆச்சர்யம்.
மஹா பெரியவா வெகு விரைவில் முழுவதும் உட்கொண்டு விட்ட பின்னர் “இவ்வளவு தானா?” என்று கேட்டு வைத்தார். பழத்தட்டை கணக்கர் நகர்த்த அதில் இருந்த பழங்களையும் மஹான் உண்டு முடித்தார் தொடர்ந்து “இன்னும் என்ன இருக்கு?” என்று கேட்டாரே பார்க்கலாம்.
இப்போது கணக்கர் உண்மையில் ஆடித்தான் போய்விட்டார். “வயிறாறப் பண்ணறேன்னு சொல்லிட்டு பசியை கிளறிட்டியே, உயிர் போறதே” என்று மஹான் கூறக் கணக்கர் ஒரு பெரிய கூஜா நிறைய பாலைக் கொண்டு வந்து வைத்தார். மஹான் அதையும் பருகிடக் கணக்கர் கன்னத்தில் போட்டுக்கொண்டபடி மஹானின் காலில் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கினார்.
“பெரியவா மன்னிக்கணும். இனிமே ஒரு நாளும் பெரியவாளைத் தொந்தரவு செய்ய மாட்டேன்” என்று கதறி அழுதார். “இனிமே என் வம்புக்கு வரமாட்டியோல்லியோ” என்று தன் இரு கைகளைத் தூக்கி ராமச்சந்திரரை ஆசீர்வதித்தார்.
இப்படிப்பட்ட பரமனுக்கே கூடப் பசி ஏற்பட்டதோ என்று சொல்லக்கூடிய சந்தர்ப்பங்களும் அபூர்வமாகத் தோன்றுமாம். சேர்ந்தாற்போல் பல நாட்கள் உபவாசமிருந்து அதை முடித்து பாரணை செய்யும் நாளாகவே அந்த நாள் இருக்கும். பூஜை முடித்தெழும்போது பெரியவாள் மிகவும் சோர்வாக இருப்பது தெரியும். “சட்டுன்னு சந்தர்ப்னை பண்ணுங்கோ” என்று அவரே இம்மாதிரி சந்தர்ப்பத்தில் சொல்வதும் உண்டு. அந்தணர்கள் தீர்த்தம் வாங்கிக் கொண்டார்களோ இல்லையோ, மஹானின் சோர்வு இருந்த இடம் தெரியாமல் ஓடிவிடும்.
குறைவாகவே பெரியவர் அமுதுகொள்வார் என்பது தான் அவ்விஷயம்.
மஹானின் யோக மகிமையை அறிந்தவர் யார்?
ஜய ஜய சங்கர! ஹர ஹர சங்கர!!