Post by uma2806 on May 27, 2014 16:12:44 GMT 5.5
சக்கர வாகனங்களில் ஏறாத மஹான்
மக்களின் நல்வாழ்வே தமது குறிக்கோள் என்று நினைக்கும் காஞ்சி மஹான், பாரத தேசம் முழுவதையும் பாதயாத்திரையாகவே மூன்றுமுறை வலம் வந்து இருக்கிறார்.
அப்படிப்பட்ட ஒரு யாத்திரையின் போது மஹான் பண்டரீபுரத்தில் தங்கி இருந்தார். தொடர்ச்சியாக பக்தர்கள் அவரை அணுகி அருளாசி பெற்றுக் கொண்டு சென்றார்கள். அப்படி வந்தவர்களுள், அங்குள்ள சர்க்கரை ஆலை அதிபரும் ஒருவர்.
பெரியவாளின் திருப்பாதங்கள் தனது ஆலையில் படவேண்டும் என்று விருப்பப்பட்டார். அதற்கு மஹான் இசைவு தந்தால் தமது வண்டியிலேயே போய் விடலாம் என்றும் சொன்னார்.
இதைக் கேட்ட மஹான் சிரித்துவிட்டு,
“நான் சக்கரம் வைத்த வண்டியில் ஏறுவதில்லை” என்றார்.
ஆலை அதிபருக்கு மிகவும் வியப்பு.
“இந்த நூற்றாண்டில் தாங்கள் இப்படி ஒரு விரதத்தைக் கடைப்பிடிக்க வேண்டுமா? தாங்கள் துரித வண்டியில் பயணம் செய்தால், தங்களுடைய நேரம் நிறைய மீதப்படுமே. அதனால் தங்களால் அதிக இடங்களுக்கும் செல்ல இயலுமே” என்று அவர் மஹானுக்கு தன் பக்க நியாயத்தைச் சொன்னார்.
அதற்கு மஹான் சொன்ன பதில்:
“நான் மடத்துக்கு வந்து பட்டத்தை ஏத்துண்ட சில மாதத்திலேயே சக்கரம் வைத்த வண்டியில் ஏறுவதில்லை என்று சங்கல்பம் செய்து கொண்டேன். அதற்கு என்ன காரணம் தெரியுமா? ஒரு ஊருக்கு நான் மடத்து ஊழியர்களோடு சென்றுகொண்டு இருந்தபோது திடீரென மழை பிடித்துக் கொண்டது. போகும் வழியில் இருபுறமும் சற்று பள்ளமாகவும், நடுவே மட்டும் மேடாகவும் இருந்தது. அதனால் அடர்த்தியாக பெய்த மழையால் நீர் பெருக்கெடுத்து பள்ளத்தில் வேகமாகப் பாய்ந்து ஆறானது. இதனால் அந்தப் பள்ளத்தில் இருந்த பல ஜீவராசிகள் யாவும் மேட்டுப் பகுதிக்கு வந்துவிட்டன. அதனால் என்னவாயிற்று? மேட்டின் மீது சென்ற பல வாகனங்களில் அந்த ஜீவராசிகள் சிக்கி உயிர்விட்டன. இதையெல்லாம் பார்த்த என் மனம் என்ன பாடுபட்டது தெரியுமா? இப்படி ஒரு வேதனை இனி எப்போதும் என்னால் ஏற்படக்கூடாது என்று நான் முடிவு செய்து கொண்டதால், சக்கர வாகனங்களில் ஏறுவதில்லை என்று என் மனதில் சங்கல்பம் செய்து கொண்டேன்” என்றார்.
பாரதத்தைப் பாதயாத்திரையாக வலம் வந்த மஹானுக்குப் பாத பூஜை செய்தவர்கள் பெரும் பாக்யசாலிகள்.
ஜய ஜய சங்கர! ஹர ஹர சங்கர!!