Post by Sumi on May 22, 2014 17:03:46 GMT 5.5
Email message forwarded by our respected member Sri S Ramanathan
போப்பாண்டவர் சென்னைக்கு வருகை தந்தபோது எல்லா மதங்களையும் பற்றிய அனைத்துலக மகாநாடு ஒன்று சென்னையில் நடைபெற இருந்தது. அதை ஒட்டி பல்வேறு மதங்களைச் சேர்ந்த குருமார்களுக்கு அழைப்பு அனுப்பப்பட்டிருந்தது. அதில் அந்தத் தலைவரின் புகைப்படத்தையும் அவரைப் பற்றிய குறிப்பையும் அனுப்பி வைக்கவேண்டும் என்று ஏற்பாடு செய்தவர்கள் கேட்டிருந்தார்கள்.
ஸ்ரீ காஞ்சி மடத்துக்கும் இந்த வேண்டுகோள் அனுப்பப்பட்டிருந்தது. பரமாச்சாரிய சுவாமிகளின் புகைப்படத்தையும் [ஸ்டாம்பு அளவில்] அனுபவக் குறிப்பையும் அதில் கேட்டிருந்தார்கள்! மகாநாட்டிற்கு ஏற்பாடு செய்தவர்களிடையே இந்து மதத்தைச் சார்ந்த முக்கியப் பிரமுகர்கள் பலரும் இருந்தார்கள். அவர்களுக்கு இந்த விஷயம் தெரிந்தபோது திடுக்கிட்டுப் போனார்கள்! ஏற்பாடு செய்தவர்களுக்குக் கண்டனக் கடிதங்களும் வரத் தொடங்கின.
சென்னையில் இருந்த ஆர்ச் பிஷப் இதைப் பற்றித் தெரிந்து கொண்டதும், தனது பிரதிநிதியாக முக்கியப் பதவி வகிக்கும் பாதிரியார் ஒருவரைக் காஞ்சி ஸ்ரீ மடத்துக்கு அனுப்பி, தவறு நிகழ்ந்ததற்கு மன்னிப்புக் கேட்டுவர ஏற்பாடு செய்தார். அவருடன் ஸ்ரீ காஞ்சி மடத்திற்கு அறிமுகமான முக்கியப் பிரமுகர் ஒருவரையும் அனுப்பி வைத்தார். சென்னையைச் சார்ந்த பேராசிரியர் பி.கே.சுந்தரம் அந்தப் பொறுப்பை ஏற்றுக் கொண்டார்.
காஞ்சிபுரத்தை அடைந்து ஸ்ரீ மடத்துக்குச் சென்றவர்கள் ஸ்ரீ விஜயேந்திர சரசுவதி சுவாமிகளிடம் நடந்ததை விளக்கினார்கள். பரமாச்சாரிய சுவாமிகளைத் தரிசிக்க விரும்புவதாகவும் கூறினார்கள். மகாசுவாமிகள் அப்போது கடுமையான ஜூரத்தில் பாதிக்கப்பட்டிருந்தார். இருப்பினும் அவருக்கு தகவல் மட்டும் தெரிவிக்கப்பட்டது.
சில நிமிடங்களில் பாதிரியாரும் பேராசிரியரும் மகாசுவாமிகள் இருந்த இடத்திற்கு அழைக்கப்பட்டார்கள். அங்கே உள்ளே நுழைந்ததும் அவர்கள் திடுக்கிட்டுப் போனார்கள்! மகாசுவாமிகள் வெறும் தரையில் ஓலைப்பாயை விரித்துப் படுத்திருந்தார். அவருடைய முகம் மட்டும் தெரியும்படி துணியால் போர்த்தப்பட்டிருந்தது.
மகாசுவாமிகள் ஜாடை காட்டியதும் தூரவே நின்றிருந்த அனைவரும் சற்று அருகில் வந்தார்கள். அவர்கள் வந்த விஷயம் பற்றிப் பேசும்படி ஸ்ரீ மடத்தின் முத்திராதிகாரி கூறினார். சுந்தரம் மகா சுவாமிகளிடம் நடந்த நிகழ்ச்சியை விவரித்துவிட்டு சென்னை ஆர்ச் பிஷப் நேர்ந்த தவறுக்கு மன்னிப்புக் கேட்க, தனது பிரதிநிதியாகப் பாதிரியாரை அனுப்பி இருப்பதைக் கூறினார். மேலும் மகாநாடு நல்லமுறையில் நடந்தேற மகாசுவாமிகளின் ஆசிகளை வேண்டிக் கொள்வதாகவும் கூறினார். பாதிரியாரும் ஆர்ச்பிஷப்பின் சார்பாகத் தனது வேண்டுகோளைக் கூறினார்.
கடுமையான ஜூரத்தினால் பாதிக்கப்பட்டிருந்தாலும் பரமாச்சார்ய சுவாமிகள் அவர்கள் கூறியதைக் கூர்ந்து கவனிப்பது புரிந்தது. அவர்கள் பேசி முடித்ததும் மகாசுவாமிகள் துணிப் போர்வையிலிருந்து இரண்டு கைகளையும் வெளியே எடுத்தார்.கையை உயர்த்தி இருவரையும் ஆசிர்வதித்தார். மேலும் கீழுமாகத் கையை அசைத்து அருளாசி வழங்கினார். இருவரும் அதைக் கண்டு மனம் நெகிழ்ந்து போனார்கள்.
பிறகு ஸ்ரீ மடத்தின் சார்பாகச் சால்வையைப் போர்த்தி பாதிரியாரைக் கௌரவித்தார்கள். மடத்துக்குரிய மரியாதை,பிரசாதங்கள் வழங்கப்பட்டன. பாதிரியார் அந்தக் கருணை உள்ளத்தின் மேன்மையை உணர்ந்து உருகிப் போனார்.
சென்னைக்குக் காரில் திரும்பிய போது கோடைக்கால வெப்பம் அதிகமாகத் தெரிந்தது. சுந்தரம், பாதிரியாரிடம் “நீங்கள் அந்தப் போர்வையை வேண்டுமானால் எடுத்துவிடுங்கள். மரியாதைக்காக அளிக்கப்பட்ட சால்வையை நீங்கள் அணிந்து கொண்டே வரவேண்டும் என்ற அவசியம் இல்லை” என்று சொன்னார்.ஆனால் அவர் அந்த சால்வையைச் சென்னைக்கு வந்து ஆர்ச் பிஷப்பைச் சந்தித்துப் பேசும் வரையில் எடுக்கவில்லை. அந்தச் சால்வையை அருளாசியின் அடையாளமாகவே கருதி,ஆர்ச் பிஷப்பிடம் அதைக் கொடுத்து வணங்கிப் பெருமிதம் அடைந்தார்.