Abhisheka Theertham - from book of R.Venkatasaamy
May 22, 2014 11:33:49 GMT 5.5
Sumi, radha, and 1 more like this
Post by uma2806 on May 22, 2014 11:33:49 GMT 5.5
போன இடம் தெரியாத வயிற்று வலி
காட்டுப்பள்ளி எஸ்டேட் உரிமையாளர் சண்முகசுந்தர முதலியார். அவரது மேனேஜர் கிருஷ்ணானந்தம். இருவரும் மஹாபெரியவாளின் பக்தர்கள்.
1965-ஆம் வருடம் மஹான் தண்டையார்பேட்டையில் முகாமிட்டிருந்தபோது, தாம் காட்டுபள்ளிக்கு விஜயம் செய்வதாக முதலியாரிடம் சொன்னார். முதலியாருக்கு அளவற்ற மகிழ்ச்சி.
கிருஷ்ணானந்தத்தின் மனைவிக்குத் தொடர்ச்சியாக வயிற்று வலி. மஹாபெரியவாளிடம் முறையிட்டுப் பிரசாதம் வாங்கிக் கொடுத்தார். இதற்கிடையில் ஒரு நாள் மஹான் எப்போதோ கிருஷ்ணானந்தம் சொன்னதை நினைவில் கொண்டு,
”உன் மனிவிக்கு சிகிச்சை அளிக்க வேலூர் போவதாகச் சொன்னாயே நாளையே அழைத்துப் போ” என்று புன்சிரிப்போடு, அவரைச் சோதிப்பது போலக் கூறினார்கள்.
அதன்படியே இவரும் தயாராகி, மனைவியை மைலாப்பூரில் ஒரு உறவினர் வீட்டில் தங்க வைத்து அடுத்த நாள் வேலூர் போகத் திட்டமிட்டார்.
ஆனால் நடந்ததோ வேறு. முதலாளியிடமிருந்து மஹாபெரியவா அதே நாளில் காட்டுப் பள்ளிக்கு விஜயம் செய்வதாகத் தகவல் வர, கிருஷ்ணானந்தம் எல்லாம் தெய்வச் செயல் என்று மனைவியுடன் ஊருக்கே திரும்பிவிட்டார். வேலூர் பயணம் தவிர்க்கப்பட்டது. மேலும் எதிர்பாராத விதமாக காட்டுப் பள்ளியிலேயே மஹாபெரியவா சாதுர்மாஸ்ய வியாச பூஜையை செய்யத் திட்டமிட்டார்.
போக்குவரத்து வசதியில்லாமல் படகில் வந்து போகும் கிராமத்திற்கு இப்படி ஒரு வாய்ப்பு கிட்டியதில் எல்லோருக்கும் மகிழ்ச்சி.
மஹான் அங்கேயே நாலரை மாதங்கள் தங்கி, பக்தர்களுக்கு அருள் பாலித்துக் கொண்டிருந்தார்.
முதலியாரின் மேனேஜர் தன் மனைவி படும்பாட்டை மஹானின் முன் முறையிட்டார். மஹான் கிருஷ்ணானந்தத்தின் மனைவியை அங்கே அழைத்து வந்து ஒரு வாரம் தங்கும்படி சொல்ல, மேனேஜரும் அவ்வாறே செய்தார். அவரது மனவி தினமும் குளித்துவிட்டு, பூஜைக்கு சென்றார். வயிற்றுவலி தாங்காமல் அந்தப் பெண்மணியும் கண்களில் நீர் தளும்ப அமர்ந்திருப்பார். கருணாமூர்த்திக்கு இதெல்லாம் தெரியாதா என்ன?
முதலியாரின் மைத்துனரை அழைத்து குளத்தங்கரைக்குப் பக்கத்தில் குளியலறை போன்று தற்காலிக ஏற்பாடாக தென்னக்கீற்றினால் அமைக்கப்பட்டது.
மறுநாள் அந்த அம்மாள் ஸ்நானம் செய்தபின், சுவாசினிகள் பூஜைக்கு அமர்ந்தபோது,
“இந்த அம்மாவை குளியலறைக்கு அழைத்துப் போய் இரு ஸ்டூல்களைப் போட்டு ஒன்றில் உட்காரவைத்து, அபிஷேகத் தீர்த்தத்தை பாதத்தில் படாமல் எல்லா ஜலத்தையும் சிரசில் விடுங்கள் என்றார்” மஹான்.
அபிஷேக தீர்த்தம் உதவியாள் மூலமாக அனுப்பப்பட்டது. சிரசில் நீர் கொட்டும்போது மேனேஜர் மனைவி மெய்மறந்த நிலையில் இருந்தாராம். ஸ்நானம் முடிந்தவுடன் புத்துணர்ச்சி பெற்று வயிற்றுவலி போன இடம் தெரியாமல் வலி நீங்கப் பெற்றவராக வந்தாராம். அதற்குப் பிறகு வயிற்றுவலி அந்த அம்மையாருக்கு வரவே இல்லை.
இப்படிப்பட்ட அதிசயமான அனுபவம் வேறு யாருக்கும் கிட்டியிருக்காது என்று கிருஷ்ணானந்தம் நன்றிப் பெருக்கோடு குறிப்பிடுகிறார்.
மஹாபெரியவாளெனும் மாபெரும் தெய்வம் தன்னை அண்டியவர்களுக்கெல்லாம் அற்புதமான அனுபவங்களை அருளிக் காத்து நிற்கிறார்.
ஜய ஜய சங்கர! ஹர ஹர சங்கர!!