Post by Sumi on Mar 25, 2014 10:16:46 GMT 5.5
தலைமுறை தலைமுறையாக வந்த அநுபவ weight ஆசாரத்துக்குத்தான் இருக்கிறது.
Tradition (மரபு) என்று ஒன்றை மதித்து அதன்படிச் செய்கிறபோதுதான் நம் மனஸை, இந்திரியங்களை, போக்குகளை, கார்யங்களை ஒரு நெறியில் சீராகக் கட்டுப்டுத்திக் கொண்டு வருகிற discipline -ம் ஏற்படுகிறது. இதுதான் மோக்ஷ த்வாரத்துக்கு முதல் வாசலான 'சித்த சுத்தி'என்பதைத் திறந்துவிடுவது. நன்றாக ஸ்திரப்பட்டுவிட்ட established tradition -ஐ (நன்கு நிலைப்பட்ட மரபை) மதிக்காமல், அதை நம்பாமல், அதில் ஏன் அது இப்படி, இது இப்படி என்று கேள்வி கேட்டுக் கொண்டேயிருப்பதோடு முடிந்து போகிறதே தவிர, பதிலாக, இப்போது இருக்கிற ஆசாரங்களை எடுத்து விட்டதற்குப் பதிலாக வெயிட் உள்ள டிஸிப்ளின் எதையும் நிலைநாட்ட முடியவில்லை. காந்தி மாதிரி தன்னளவில் சுத்தராக இருந்துகொண்டு, ஈஸ்வர பக்தியும் பண்ணிக்கொண்டு, பழைய இந்திய வழக்கப்படியே எளிய வாழ்க்கை, தேஹ உழைப்பு இவற்றை மேற்கொண்டு இருந்தவர்களே பழைய ஆசாரங்களில் சிலவற்றை எடுத்துவிட்டு, பழசில் சில ஒழுக்கக் கட்டுப்பாடுகளையும், புதிதாகத் தாங்களே ஆச்ரமங்களில் ஏற்பாடு பண்ணி, கண்குத்திப் பாம்பாக நேராகத் தாங்களே நிர்வாஹத்தைக் கவனித்து வரும் போதுகூட, ஒழுங்குத் தப்பான கார்யங்கள் நடந்து. அதற்காகத் தாங்களே பஹிரங்க கண்டனம் பண்ணிப் பட்டினி கிடக்கும்படியாக ஆகிறது.
என்ன காரணமென்றால், established -ஆக (நன்கு நிலைப்பட்டதாக) உள்ள சாஸ்திர ஆசாரங்களில் கை வைத்துக் கொஞ்சமோ நஞ்சமோ மாற்றிச் 'சீர் திருத்தம்'பண்ணலாம் என்கிற எண்ணம் வந்தவுடனேயே ஒழுங்குக்குக் கட்டுப்பட்டு நடப்பது என்ற அடக்க குணம் போக ஆரம்பித்து விடுகிறது. பழையதான ஒரு ஒழுங்கு முறையை, ''இது மநுஷ்ய ஸ்வதந்திரத்தை நெரிக்கிறது''என்று சொல்லி ஒரு சீர்திருத்த தலைவர் மாற்றியவுடனேயே, அவரைச் சேர்ந்தவர்களுக்கு அவரே போடுகிற புது ஒழுக்க நெறிகள் உள்பட எல்லாக் கட்டுப்பாட்டையும் உடைத்தவிட்டு மனம் போனபடி ஸ்வந்திரமாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டு விடுகிறது. ஒரு தலைவர், ''பழைய ஆசாரக் கெடுபிடியிலிருந்து உங்களை விடுவிக்கிறேன்''என்று ஸ்வயமாசார்யராக, தாமே தம்மை ஒரு 'ஸேவியராக' (ரக்ஷகராக) ஆக்கிக்கொண்டு உதவ வருகிறாரென்றால், அவரைச் சேர்ந்தவர்கள் கொஞ்ச நாளிலிலேயே, ''நீங்கள் பழைய ஆசாரக் கெடுபிடிகளிலிருந்து எங்களுக்கு விடுதலை கொடுத்தீர்களானால், இப்போது நீங்கள் புதிதாகப் போடுகிற கெடுபிடிகளிலிருந்தும் நாங்களே விடுபடுகிறோம்''என்று வெளியே கிளம்பிவிடுகிறார்கள்!
அதனால்தான் எந்தக் கட்டுபாடுமில்லாமல் ஜனங்களை அவிழ்த்துவிட்டிருக்கிற சீர்திருத்த இயக்கங்களைச் சேர்ந்தவர்களைப் போலவே, கட்டுப்பாடுகளை வற்புறுத்தும் சீர்திருத்தத் தலைவரைப் பின்பற்றுகிறவர்களும் கொஞ்ச காலத்திலேயே அவரவர் இஷ்டப்படி செய்பவர்களாகிறார்கள். தேசபக்தி, நேர்மை, ஸ்வதேசியம், த்யாகம் முதலியவற்றை எத்தனையோ கட்டுப்பாட்டோடு காத்து வந்த ஸ்தாபனத்துக்காரர்கள் இப்போது எப்படியிருக்கிறார்கள் என்பதைப் பார்க்கிறோமல்லவா?