Post by uma2806 on Feb 19, 2014 10:52:43 GMT 5.5
சி.வெங்கடேஸ்வரனின் கட்டுரை – ஆன்மீக மலர் தினமலர்.
காஞ்சி மஹா பெரியவர் தியானம் செய்வதற்காக காஞ்சி அருகிலுள்ள தேனம்பாக்கம் செல்வது வழக்கம். ஒருமுறை அங்கு பக்தர்கள் ஏராளமாகக் கூடியிருந்தனர்.
அப்போது டாக்டர் சீர்காழி கோவிந்தராஜன், தன் நண்பர் கவிஞர் நெமிலி எழில் மணியுடன் அங்கு வந்தார். தான் அங்கு வருவது தெரிந்தால் கூட்டம் கூடிவிடக்கூடாது என்பதால் யாருக்கும் முன்கூட்டியே தகவல் சொல்லாமல் வந்து விட்டார். தனது உதவியாளரிடம் கூட காஞ்சிபுரம் செல்வது பற்றி அவர் சொல்லவில்லை. தான் பாடிய பாடல் அடங்கிய இசைத்தட்டுகளை பெரியவரிடம் கொடுத்து ஆசி பெற வேண்டும் என்பது அவரது நோக்கம்.
பெரியவர் அப்போது பூஜையில் ஈடுபட்டிருந்ததால் திரை போடப்பட்டிருந்தது. ஒரு சில பக்தர்களே பெரியவரைக் காணக் காத்திருந்தனர். அவர்கள் வரிசையில் சீர்காழியும் சேர்ந்து கொண்டார். அப்போது கதவு திறக்கும் சத்தம் கேட்டது. அனைவரும் பெரியவர் தரிசனம் தர வெளியே வருகிறார் என எண்ணித் தயாராக நின்றனர். ஆனால், பெரியவரின் சீடர் ஒருவர் மட்டுமே அங்கே வந்தார்.
கூட்டத்தினரை நோக்கி, “இங்கே சீர்காழி கோவிந்தராஜன் வந்திருக்கிறாரா?” எனக் கேட்டார். பரபரப்புடன் எழுந்த சீர்காழி, “இதோ இருக்கிறேன்” என்று பதிலளித்த படி அவர் முன் வந்தார்.
“உங்களை மஹாபெரியவா பாடச் சொன்னா” என்று சொல்லி விட்டு உள்ளே போய்க் கதவைத் தாழிட்டுக் கொண்டார். மெய் சிலிர்த்துப் போய் விட்டார் சீர்காழி. தான் தேனம்பாக்கம் வந்து ஒரு சில நிமிடங்கள் ஆகாத நிலையில் உள்ளே பூஜை செய்யும் பெரியவருக்கு எப்படித் தெரிந்தது?” என்று பரவசப் பட்டார். தான் பாடுவதற்கு பெரியவர் உத்தரவிட்டதை எண்ணி மகிழ்ந்தார்.
“ஹிமாத்ரி சுதே பாஹிமாம்” என்ற பாடலைப் பாடத் தொடங்கினார். தொடர்ந்து பெரியவர் மீது, தான் பாடிய பாடல்களையும் பாடினார். சிறிது நேரத்தில் கதவு திறக்கப்பட்டது. அதுவரை, சீர்காழியின் இசைமழையில் நனைந்து, இதயம் குளிர்ந்த பெரியவர், பூஜை முடித்து, காவியுடையில் வெளியே வந்தார். சீர்காழி கோவிந்தராஜன் அவரருகே சென்று, இசைத்தட்டைக் கொடுத்து, ஆசி பெற்றார். பின் ஆனந்தக் கண்ணீருடன் புறப்பட்டார்.
சீர்காழி கோவிந்தராஜனின் மகன் டாக்டர் சிவசிதம்பரம் இந்த சம்பவத்தை இசை மேடைகளில் அடிக்கடி சொல்லி மகிழ்வதுண்டு.
சீர்காழியைப் பாடச் சொல்லி உத்தரவிட்ட காஞ்சிப் பெரியவர், ஞானசக்தியால் அனைத்தையும் அறியும் திறமை பெற்றிருந்தார் என்பதற்கு இந்நிகழ்ச்சி ஒரு எடுத்துக் காட்டு.
ஜெய ஜெய சங்கர! ஹர ஹர சங்கர!!