Post by uma2806 on Feb 18, 2014 15:51:23 GMT 5.5
தந்தது உன் தன்னை
தன் மனம், மார்க்கம் அனைத்துமே ஸ்ரீமஹா பெரியவாளே என்னும் ஆனந்தக் களிப்போடு தன் பிறவிப்பேற்றை அனுபவித்த ‘பிரதோஷம் மாமா'வின் அதி தீவிர பக்தி, அவரை '64-ஆம் நாயன்மார்’ என்று மஹா பெரியவாளே அங்கீகரித்தருளும்படி செய்தது.
இவரின் பக்திநெறி ஒவ்வொன்றையும் மஹா பெரியவாளே வகுத்துக் கொடுத்ததாக பல அபூர்வ சம்பவங்கள் சாட்சியாக விளங்குகின்றன.
நடு இரவில் தன் இல்லத்திலிருந்து புறப்பட்டு வழி நெடுக ஈஸ்வர நாமாக்களை விடாது பாடிக்கொண்டு சுமார் நான்கு கிலோ மீட்டர் தூரத்திலிருந்த ஸ்ரீமடத்திற்கு பாதயாத்திரை செய்து தரிசிப்பதை ‘பிரதோஷம் மாமா’ தனது ஆனந்த அனுபவமாகவே கொண்டிருந்தார்.
பிரதோஷம் மாமா நடுநிசியில் பயணம் செய்யும்போது சில பக்தர்களும் அவருடன் வருவது வழக்கம். அதுபோல அன்றொரு நாள் இரவு தரிசன யாத்திரையில் திருவரத ஓதுவாரும் கலந்து கொண்டார். இதனால் வழியெங்கும் தேவாரமும், திருவாசகமும் ஒலிக்கத் தொடங்கியது. ஓதுவார் உரக்கப் பாட உடன் சென்றவர்களும் இதே போல் குரலெடுத்துப் பாடினார்கள்.
எப்போதும் ஓங்கி ஒலிக்கும் ’அருணாசல சிவ’ அப்போது தடைபட்டது போல் பிரதோஷம் மாமா உணர்ந்தார். ரமண மஹரிஷியின் மீது இவருக்கு இருந்த அபரிமித பக்தியினால், திருவாசகத்திற்குப் பதிலாக ‘அருணாசல சிவ’ என்று சொல்லலாமே என்று உடன் வந்தவர்களிடம் சொல்லிப் பார்த்தார். நமச்சிவாயமும், அருணாசல சிவமும் வேறல்ல என்று ஏன் இவருக்குப் புரியவில்லை? இதனால் மடத்தில் வீற்றிருந்த சர்வேஸ்வரருக்கு இவருக்கு பதில் சொல்லவேண்டும் என்ற தீர்மானம் ஏற்பட்டு விட்டது. தரிசன யாத்திரை முடிந்து, அவருடன் வந்தவர்கள் மஹா பெரியவாளை தரிசித்து மகிழ்ந்தார்கள். ஓதுவார் ஸ்ரீமடத்திலிருந்து புறப்பட்டு போய்விட்டார்.
அப்போது மஹான் தமது திருவிளையாடல் நாடகத்தை ஆரம்பித்தார்.
“ஓதுவார் எங்கே?” என்று மஹான் கேட்டார். அவர் புறப்பட்டுப் போய்விட்டார் என்று மஹானுக்குத் தெரியாதா என்ன? பிரதோஷ மாமாவுக்கு விளங்கவில்லை – ஏன் மஹான் ஓதுவாரை அழைக்கிறார் என்று…
மஹான் பிரதோஷ மாமாவை அழைத்துக் கையில் ஒரு புத்தகத்தைக் கொடுத்தார். அது தன் கைக்கு வந்தவுடன் மெய் சிலிர்த்ததை உணர்ந்தார் பிரதோஷ மாமா. அருணாசலமா, நமச்சிவாயமா என்ற இவரது மன சஞ்சலத்தை அனைத்தும் நானே என்று சொல்லாமல் சொல்லித் தீர்த்து வைத்து விட்டது போலிருந்தது.
அவரது சிந்தனை வேறு பக்கம் திரும்பக் கூடாது என்று நினைத்த மஹான், “இந்தப் புத்தகம் எந்த வருடம் வெளியானதுன்னு ஓதுவாரைக் கேட்டுத் தெரிஞ்சுண்டு வா” என்றார்.
இது போன்ற வேலையை மஹான் தன்னிடம் சொன்னதே இல்லையே, இந்த விஷயம் இவருக்குத் தெரியாதா? இந்த வேலைக்கு மடத்து ஊழியர் போதாதா? இதற்கு ஏதாவது காரணம் இருக்கும் என்று நினைத்த பிரதோஷம் மாமா இதற்காக சென்னைக்குச் செல்ல வேண்டிய நிலை. காஞ்சியை விட்டு எப்போதும் அகலாதவருக்கு இப்படி ஒரு சோதனையா?
மஹானின் மனதை யார் அறிவார்? சென்னை சென்று ஓதுவாரை பார்த்துத் தகவல் அறியச் சென்றவருக்கு அங்கே ஓதுவாரைத் தேடவும் ஒரு துணை தேவைப்பட்டது.
இதற்காக மஹானிடம் பரமபக்தி கொண்டிருந்த ஒரு வைணவ அன்பரைத் தொடர்பு கொண்டு ஒத்தாசை செய்ய அழைக்கலாம் என்று நினைத்தார். போன் வசதி இல்லாத காலம் அது. இதனால் பணி ஓய்வு பெற்றபின், பிரதோஷ மாமா தனது அலுவலகத்திற்குச் செல்ல வேண்டிய கட்டாயம்.
அலுவலகத்தின் உள்ளே நுழைந்ததும் இவரை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்த ஒரு அன்பர் இவரை வரவேற்று மூச்சு விடாமல் பேசத் தொடங்கினார்.
“ரொம்ப ஆச்சர்யம். நீங்க எப்படி இங்கே வந்தீங்க? உங்களுக்கு நாங்களே கடிதம் எழுதி வரவழைக்கலாமுன்னு நினைச்சோம்… ஏன்னா, உங்களுக்கு அரியர்ஸ் பணம் ஆயிரத்துக்கு மேலே வந்திருக்கு… ஆபீஸிலே இன்னிக்கு நீங்க வரலேன்னா பணத்தைத் திருப்பி அனுப்பச் சொல்லி உத்தரவு. என்ன செய்யறதுன்னே தெரியாம தவிச்சுண்டு இருந்தேன்…. பின்னாலே பணத்தை வாங்கறது மிகவும் சிரமமா இருக்கும்”.
பிரதோஷம் மாமா உண்மையில் திணறித்தான் போனார். அந்தக் கால கட்டத்தில் இந்தப் பணம் எவ்வளவு பெரியது? இதைத் தன்னிடம் சேர்க்க திருவாசக புத்தகத்தின் மூலம் மஹான் திருவிளையாடல் நடத்தியிருக்கிறார் என்றே தோன்றியது.
பிரதோஷம் மாமா, புத்தகம் எப்போது வெளியிடப்பட்டது என்பதைப் பலரிடம் விசாரித்துக் கொண்டு காஞ்சி வந்து, மஹானிடம் விவரங்களைச் சொன்னார். அதை மஹான் காதில் வாங்கியதாகவே தெரியவில்லை. தன்னை எதற்காக சென்னைக்கு அனுப்பினார் என்று மஹானுக்குத் தெரியாதா என்ன?
திருவாசகம் புத்தகத்தை அவரிடம் கொடுத்து “இதைப் படி” என்றார் மஹான்.
முதலில் எதைப் படிப்பது என்று இவர் தடுமாற “முதல்லேயிருந்து சில பக்கங்களையாவது படி” என்றார்.
அவர் புத்தகத்தைப் பிரித்தபோதே பிரமிப்பு….
“நமச்சிவாய வாழ்க” என்று தொடங்கும் சிவபுராணம் தான் முதலில் தென்பட்டது.
இப்படி பிரதோஷ மாமாவை நாயன்மாராக அங்கீகரித்தருளி “தந்தது உன் தன்னை கொண்டது என் தன்னை” என்று பக்தருக்குள்ளே ஐக்கியமாகி ஒவ்வொரு பக்தி நெறிக்கும் வழிகாட்டுபவராக ஸ்ரீமஹா பெரியவா பிரதோஷம் மாமாவுக்கு அருள் புரிந்தார்.
ஜெய ஜெய சங்கர! ஹர ஹர சங்கர!!