Post by uma2806 on Feb 17, 2014 18:21:36 GMT 5.5
மருத்துவர்களின் மருத்துவர்
மஹாபெரியவா அவர் காலத்தில் ஒரு சிறந்த வைத்தியராகத் திகழ்ந்தார் என்பதை பல நிகழ்ச்சிகள் நமக்குச் சொல்கின்றன.
”வெள்ளைத் தாமரையில் கஷாயம் வைத்து சாப்பிடு” என்றும் ”வில்வ இலையைத் தினமும் காலையில் சாப்பிடு” என்றும் “துளசி தீர்த்தத்தை தொடர்ந்து சாப்பிடு” என்றும் பலருக்குச் சொல்லி அவர்களது தீராத நோய்களைத் தீர்க்க உதவியிருக்கிறார். ஏறக்குறைய இது வைத்தியர் வேலைதானே?
இவற்றிற்கு மேலாக அவர் தம்மிடம் நேரில் வரமுடியாத பக்தர்களுக்கு அவர்களது கனவில் தோன்றி ஆலோசனைகளையும் வழங்கியிருக்கிறார்.
அப்படிப்பட்ட சம்பவம் ஒன்று – வைத்தியர் ஒருவருக்கே ஏற்பட்டது.
பெங்களூர் நகரில் அவர் மிகவும் பிரபலமான டாக்டர். ‘கைராசி’யான டாக்டர் என்றும் அவர் புகழப்பட்டார். நோயாளிகளிடம் அதிகப் பணம் கேட்பது கிடையாது. வந்தவர்கள் எல்லாரும் நோய் குணமாகி திரும்பினார்கள் என்னும் சிறப்பு இருந்தும் அவருக்குத் தேர்வு வைத்ததைப் போல் அவரிடம் ஒரு நோயாளி தன் நோயைத் தீர்க்க அணுகினார்.
வயிற்றுவலிதானே என்று முறைப்படி டாக்டரும் அந்த நோயாளிக்கு மருந்து கொடுத்தார். ஓரிரு நாளில் குணமாகிவிடும் என்று டாக்டரும், இவரிடம் வந்தால் தனது உபாதை தீர்ந்துவிடும் என்று அந்த நோயாளியும் நினைத்தனர். இருவரது நம்பிக்கையையும் நோய் தகர்த்தெறிந்தது. வயிற்றுவலி குணமாகவே இல்லை. டாக்டர் தொடர்ச்சியாக தனக்குத் தெரிந்த எல்லா மருந்துகளையும் அவருக்குக் கொடுத்துப் பார்த்தார். நோயாளியும் பிடிவாதமாக இந்த டாக்டரைத் தவிர வேறு டாக்டரிடம் போகக் கூடாது என்று சபதம் எடுத்துக் கொண்டது போல் இவரிடமே வந்தார். இவர் கொடுத்த மருந்தை மட்டும் விடாமல் சாப்பிட்டார். பலன் தான் இல்லை.
மனம் வெறுத்துப் போன டாக்டர், தமது தெய்வம் என்று உபாசித்த காஞ்சி மஹானை வேண்டினார். இந்த டாக்டர், மஹானின் நெருங்கிய பக்தர்களில் மிகவும் முக்கியமானவர். சமயம் கிடைக்கும் போதெல்லாம் டாக்டர் மஹானை நேரில் வந்து தரிசிக்கத் தவறுவதே இல்லை.
“சர்வேஸ்வரா என்ன சோதனை இது? என்னிடம் வந்தவர்களில் உங்கள் அருளால் குணமாகிப் போனவர்கள் தான் அதிகம். இந்த ஒரு நோயாளி மட்டும் என் வைத்தியத்திற்கே சோதனை வைத்துக்கொண்டு இருக்கிறாரே? இதிலிருந்து மீள்வதற்கு எனக்குத் தாங்கள் தான் வழிகாட்ட வேண்டும்” என்று மனமுருகி மஹானை வேண்டினார். டாக்டரும் மஹானிடம் நேரில் வரவில்லை. அதனால் என்ன? தனது பக்தனுக்கு அருள் பாலிக்க அன்று இரவே மஹான் டாக்டரின் கனவில் வந்தார்.
“நீ அந்த நோயாளியின் சாப்பாட்டு நேரத்தைப் பற்றிக் கேள். பிறகு அதை மாற்றி அமைத்தால் எல்லாமே சரியாகிவிடும்” என்று சொல்லிவிட்டு மறைந்தார். டாக்டர் தமக்கு மஹான் உத்தரவிட்ட விஷயமாக யோசித்தார். ‘சாப்பாட்டை மாற்றி அமை’ என்றால் எப்படி?
அந்தத் தொழிலாளி ஒரு மில்லில் வேலை செய்பவர். மறுநாள் அவர் வந்தபோது அவரிடம் சாப்பாட்டு நேரத்தைக் கேட்டார்.
“மில்லில் வேலை எல்லாம் முடிந்த பிறகு மாலை ஐந்து மணியிலிருந்து ஆறுமணிக்குள் எனது ஆகாரத்தை முடித்துக் கொள்வேன்” என்று தொழிலாளி சொன்னார். சரியான பிரதோஷ காலமல்லவா அது?
டாக்டர் அவரிடம் “நீ சாப்பிடும் நேரம் சரியாக இல்லை. காலை, மதியம், இரவு என்று மூன்று வேளை ஒழுங்காகச் சாப்பிட்ட பின் என்னிடம் வா” என்றார்.
“டாக்டர் சொல்லிவிட்டாரே” என்று தொழிலாளியும் தனது ஆகார நேரத்தை மாற்றி அமைத்தார். மஹானின் உத்தரவல்லவா அது?
தொடர்ந்து ஒரு வாரம் ஆகாரத்தைக் குறித்த நேரத்தில் சாப்பிட்ட தொழிலாளி டாக்டரிடம் வந்தார்.
“இப்போதெல்லாம் எனக்கு வயிற்றுவலி வருவதே இல்லை டாக்டர். நான் மருந்து கூட சாப்பிடுவதில்லை” என்றார். தெய்வ வைத்தியர் கொடுத்த யோசனை அல்லவா இது! டாக்டர், மஹானின் திக்கு நோக்கி வழிபட்டார்.
டாக்டருக்கு மேல் டாக்டராக விளங்கும் அந்த மஹானின் பாதார விந்தங்களை நாம் பற்றிக் கொண்டால் நமக்கு நோய் எங்கேயிருந்து வரும்? வைத்தியர் நேரில் சொன்ன அனுபவம் இது.
ஜெய ஜெய சங்கர! ஹர ஹர சங்கர!!