Post by uma2806 on Feb 14, 2014 14:47:19 GMT 5.5
அபிராமி அந்தாதி – மலேசிய மொழியில்
மஹான் பூஜை, புனஸ்காரங்களை முடித்துக் கொண்டு வந்த பிறகு பக்தர்களுக்கு தரிசனம் தந்து அவர்களது குறைகளைக் கேட்டறிந்து, பரிகாரம் சொல்வது செய்வது அன்றாட நிகழ்ச்சி.
அன்றைய தினம் பெரும் திரளான பக்தர்கள் தரிசனத்திற்காகக் குவிந்திருந்தனர். ஒவ்வொருவருக்கும் தாங்கள் முன்னதாக தரிசனம் பெற்றுவிடவேண்டும் என்கிற எண்ணம். ஆனால் நடைமுறையில் வரிசை மெதுவாக நகர்ந்து தானே ஆகவேண்டும்.
அன்று பாரதிகாவலர் ராமமூர்த்தி, தம்முடன் மலேசியக் கவிஞர் ஒருவரை மஹானின் தரிசனத்திற்காக அழைத்து வந்திருந்தார். அவர் பெயர் சூசை.
“இத்தனை பேருக்கும் தனித்தனியாக மஹானின் தரிசனம் கிடைக்குமா?” என்று சூசை தன் நண்பரிடம் மெதுவாகக் கேட்டார்.
ராமமூர்த்தி பதில் சொல்லும் முன் மஹானிடமிருந்து பதில் கிடைத்தது. ஒரு மடத்து ஊழியர் ராமமூர்த்தியிடம் வந்து, “உங்களையும் உங்களுடன் வந்த கவிஞரையும் உள்ளே அழைத்து வரச் சொல்கிறார்” என்றார். இதைக்கேட்ட கவிஞர் சூசைக்கு வியப்பு.
தாம் இங்கே கேள்வி கேட்க, பதில் மஹானிடமிருந்து அல்லவா வருகிறது?
உள்ளே நுழைந்ததும் பாரதி காவலரிடம் மஹான் கேட்கிறார்:
“இவர்தான் சூசையா?”
தன் பெயரை மஹான் சொன்னதும் சூசையின் மெய் சிலிர்த்தது. தாம் சொல்லாமலேயே மஹான் தம்மைப் பெயர் சொல்லிக் கேட்கிறார் என்றால்?
மஹானின் பார்வை இருவர் மீதும் ஒளிவெள்ளமாய் பாய்ந்தது. இருவருக்கும் பேச நா எழவில்லை. இந்த மலேசியக் கவிஞர் ஏற்கெனவே பாரதியின் ‘பாஞ்சாலி சபத’த்தையும் ‘அபிராமி அந்தாதி’யையும் மலேசிய மொழியில் மொழி பெயர்த்திருந்தார். இவை இரண்டும் ஏற்கனவே மஹானின் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டிருந்தன.
கவிஞரைப் பார்த்தவுடன்,
“அபிராமி அந்தாதியை முதலில் உங்கள் பாஷையிலும் பிறகு தமிழிலும் சொல்லலாமே” என்றார். மலேஷிய மொழியில் அந்தாதியைச் சொன்ன கவிஞர், தமிழில் அதைக் கூற வந்தபோது அவருக்கு முதலடி மறந்து போயிற்று.
பிறகு மஹானே அடியெடுத்துக் கொடுக்குமாறு பாரதிகாவலரைப் பணித்தார். மலேசிய மொழியில் செய்திருந்த மொழிபெயர்ப்பை மஹான் பாராட்டி, அதில் ஏழு சமஸ்கிருத வார்த்தைகள் வருவதைச் சொல்லி, அவை எந்தெந்த வார்த்தைகள் என்று வரிசையாக அடுக்கினார். மஹானின் இந்த மொழிப் புலமையைக் கண்ட சூசை மிகவும் வியப்படைந்தார்.
அடுத்து, மலேசிய நாட்டைப் பற்றி மஹான் கவிஞரிடம் பேசத் தொடங்கினார். அந்த நாட்டில் ஒரு இடத்தைக் குறிப்பிட்டு “அங்கே சிவன் கோவில் உண்டே?” என்று மஹான் சொல்ல, சூசை, “ஆமாம்” என்று மகிழ்ச்சி பொங்க ஆமோதித்தார். மலேசிய நாட்டின் பூகோள நிலவரம், அங்குள்ள பொருள் பொதிந்த மொழிகளிலேயே பவனி வந்தன. மலேசிய மொழியில் அபிராமி அந்தாதியை திருச்செவி மடுத்த மறுகணமே மொழிப் பாங்கை உணர்ந்து கொண்ட மஹானின் திருப்பாதங்களில் அவர்கள் இருவரும் பணிந்து வணங்கினார்கள்.
மஹான் அபிராமி அந்தாதி வரிகளிலேயே மலேசிய மொழியில் தாம் கேட்ட முதல் வரியை மொழிந்து இருவருக்கும் அருளாசி வழங்கினார்கள்.
ஜெய ஜெய சங்கர! ஹர ஹர சங்கர!!