Next episode from R.Venkatasaamy's book on MahaPeriyavaa
Jan 25, 2014 14:12:52 GMT 5.5
radha likes this
Post by uma2806 on Jan 25, 2014 14:12:52 GMT 5.5
தஞ்சைக்கு வந்த கங்கை
காஞ்சி மஹானின் சிஷ்யகோடிகள் எல்லோருமே அவர் “எள்” என்பதற்கு முன் எண்ணையாக நிற்பவர்கள். முகத்தைப் பார்த்து அவரது மனதைத் தெரிந்து கொண்டவர்களும் இருந்தார்கள் என்றால் அது மிகையல்ல.
அவருடைய முக்கியமான சிஷ்யர்கள் இருவர். மஹான் தினந்தோறும் கங்கை நீரிலேயே ஸ்நானமும் அனுஷ்டானமும் செய்யவேண்டும் என்று விரும்பினார்கள். அதனால் அதற்கான சகல ஏற்பாடுகளையும் செய்து கொண்டு ஹரித்துவாரை நோக்கிப் புறப்பட்டனர். அங்கே மூடி போட்ட செம்புப் பாத்திரங்களில் கங்கை நீரை எடுத்துக்கொண்டு அவ்வளவு செம்புகளையும் பத்திரமாக லாரியில் ஏற்றிக்கொண்டு அதிலேயே இவர்களும் ஏறிக்கொண்டு சென்னையை வந்தடைந்தனர். காஞ்சிக்கு வந்த அவர்கள் அவ்வளவு செம்புகளையும் மஹானின் முன் வைத்து நமஸ்காரம் செய்தார்கள்.
“இவை எல்லாம் என்ன?” தெரிந்தே அவர்களிடம் இப்படி ஒரு கேள்வியைக் கேட்கிறார். சிஷ்யர்கள் தங்களின் விருப்பத்தையும் அதை நிறைவேற்ற கங்கை நீரைக் கொண்டு வந்துள்ளதைப் பற்றியும் பணிவோடு எடுத்துரைத்தார்கள்.
தனது சிஷ்யர்களின் பக்தி சிரத்தையைக் கேட்டறிந்த மஹான் லேசாகப் புன்னகை பூத்தார். அப்போது அவர் மனதில் தோன்றிய சரித்திர நிகழ்ச்சியை தன் சிஷ்யர்களிடம் சொன்னார்.
“முதலாம் ராஜேந்திர சோழன் என்னும் மன்னன் ஆயிரம் வருடங்களுக்கு முன்பு கங்கை கொண்ட சோழபுரத்தை உருவாக்கினார். அங்கே அற்புதமான கலையழகு மிகுந்த சிவாலயத்தை அவர் நிர்மாணித்தார். அங்கே பிரதிஷ்டை செய்த சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்ய கங்கையிலிருந்து நீரைக் கொண்டு வந்தார். அதுவும் எப்படி தெரியுமா? புனித நீர் நிரப்பிய குடங்களை மக்கள் தங்கள் தலையில் சுமந்து வரச் செய்தார். அப்படிக் கொண்டு வரப்பட்ட கங்கை நீரைக் கொண்டு சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்வித்தார். நீங்களும் அதே போல் கங்கை நீரைக் கொண்டு வந்திருக்கிறீர்கள். அந்த மன்னரைப் போல நீங்கள் முதலில் தஞ்சை நகரில் உள்ள பிரகதீஸ்வரருக்கு அபிஷேகம் செய்துவிட்டு வாருங்கள், அதற்குப் பிறகு நான் உபயோகப்படுத்திக் கொள்கிறேன்” என்றார்.
அதே போல் சிஷ்யர்களும் மஹானின் ஆணையை ஏற்று கங்கை நீர் நிறைந்த சில செப்புப் பாத்திரங்களை எடுத்துக் கொண்டு தஞ்சைக்குச் சென்று, அங்கே இருந்த சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்தபின், திரும்பி வந்து மஹானிடம் சொல்ல, அதற்குப் பின் மஹான் கங்கை நீரைப் பயன்படுத்தினார்கள்.
ஜெய ஜெய சங்கர! ஹர ஹர சங்கர!!