Post by uma2806 on Jan 24, 2014 16:21:29 GMT 5.5
நான்கு மாதங்கள் பொறுத்துக்கொள்
தாம் ஏதாவது நேராகச் சொன்னால் பக்தரின் மனம் புண்படுமே என்று மஹான் நினைத்து, அதை மூன்றாவது நபர் மூலம் எச்சரிக்கையாகச் சொல்வது வழக்கம்.
ஒரு பிரபல இன்சூரன்ஸ் கம்பெனியில் நிர்வாகி அவர். செல்வாக்கு மிகுந்த அவர், தொழிலை தெய்வமாக மதித்து நடத்தி வந்தவர். நான்கு பெண்கள், இரண்டு பிள்ளைகள் என்று பெரிய குடும்பம். இன்சூரன்ஸ் துறையில் நுழைந்த பிறகு தான், அவருக்கு இந்த வசதி வாய்ப்பு எல்லாம்.
மூன்று பெண்களுக்கும் மூத்த மகனுக்கும் திருமணம் செய்வித்த அவருக்குப் புதிதாக ஒரு கவலை தலை தூக்கியது. அவரது நான்காவது பெண்ணுக்கு வந்த வரன்கள் எல்லாம் தட்டிப் போயின. தொடர்ச்சியாக இது போல நடந்தால் எந்தத் தந்தைக்குத் தான் கவலை வராது?
அவர் பெயர் சிவபிரகாசம். காஞ்சி மஹானின் பக்தர் அவர். தனது இந்த மனக்குறையை அந்த நடமாடும் தெய்வத்திடம் ஏன் நேரில் போய்ச் சொல்லி முறையிடக்கூடாது என்று அவரது மனதில் தோன்றியது தான் தாமதம். அவர் காஞ்சிக்குப் புறப்பட்டுவிட்டார். காலை தரிசனம் மிகவும் நல்லது என்று யாரோ அவருக்குச் சொல்லி இருந்தார்கள். விடியற்காலையில் மனதில் நிறைந்த பக்தியோடு அவர் தன் குடும்பத்தாருடன் மடத்திற்குப் போய்விட்டார். அந்த சமயத்தில் தான் குளித்துவிட்டு மடியோடு மஹான் மடத்தினுள் நுழைந்தார். ஒரு ஒரமாக நின்று கொண்டிருந்த பக்தர் சிவபிரகாசத்தைப் பார்த்தவுடன், “என்ன?” என்று சைகையில் விளக்கினார். அவர் அப்படிக் கேட்டதுதான் தாமதம் சிவபிரகாசம் மஹானிடம் தனது குறையை தழுதழுத்த குரலில் சொல்லி முடித்தார்.
அவருக்குத் தமது கையைத் தூக்கி ஆசீர்வதித்த பின்னர், “சின்னவரைப் போய்ப் பாருங்கோ” என்று கூறிவிட்டு உள்ளே போய்விட்டார். தனது குறைக்கு எப்போது முடிவு என்று சொல்லாமல் இப்படிச் சொல்லிவிட்டுப் போய் விட்டாரே என்கிற குறையோடு ஊர் திரும்பினார் சிவபிரகாசம். அங்கேயே அவர் விசாரித்தபோது சின்னவர் எங்கோ வட இந்தியாவில் பிரயாணம் செய்து கொண்டு இருப்பதாகத் தெரிந்தது.
தான் இருக்கும் நிலையில் வட இந்தியாவுக்குப் போய் வருவது என்பது சாத்தியமல்ல என்பது அவருக்குப் புரிந்தது.
மஹான் விட்ட வழி என்று அவர், தன் பெண் திருமண விஷயமாக முயற்சித்துக் கொண்டு இருந்தார். சுமார் நான்கு மாதங்களுக்குள் அவர் காதுக்கு ஒரு நல்ல செய்தி எட்டியது. சின்ன பெரியவா கோவையில் ஒரு கும்பாபிஷேகத்திற்கு வருகிறார் என்ற செய்திதான் அது. கோவில் கும்பாபிஷேகம் கூட்டம் இருக்கும். இருந்தாலும் எப்படியும் மஹானின் உத்தரவுப்படி சின்னவரைப் பார்த்துவிடவேண்டும் என்கிற வைராக்கியத்தோடு சிவபிரகாசம் கோவைக்குப் புறப்பட்டார்.
கோவில் கும்பாபிஷேகம் முடிந்து, சின்னவர் சாவகாசமாக இருக்கும்போது சிவபிரகாசம் அவர் எதிரில் பக்தர்களோடு பக்தராக நின்றார். இவர் முறை வந்தபோது இரண்டே வாக்கியங்களில் தன் குறையையும் மஹானின் கட்டளையும் சொன்னபோது பதில் ஏதும்பேசாமல் சின்னவர் கையைத் தூக்கி சிவபிரகாசத்தை ஆசீர்வதித்தார். சின்னவர் வாயைத் திறந்து ஏதும் சொல்லவில்லையே என்கிற கவலை சிவபிராகசத்திற்கு ஏற்பட்டது.
ஆனால் நடந்தது என்ன? கோவை சென்று வந்த இரு தினங்களிலேயே அவரது மகளின் நிச்சயதார்த்தம் முடிந்து அதே மாதத்தில் திருமணம் நடந்தது என்பது தான் வியப்புக்குரிய செய்தி. “இன்னும் நான்கு மாதங்களில் உன் பெண் திருமணம் நடக்கும்” என்று மஹான் அப்போதே சொல்லியிருக்கலாம். “நான்கு மாதமா?” என்று சிவபிரகாசம் தினம் தினம் மனதில் ஏற்படும் நெருடலோடு இருந்திருப்பார். நான்கு மாதம் கழித்து வரப்போகும் சின்னவரைப் போய் பாருங்கள் என்பதால் நாட்கள் போவது அவருக்குத் தெரியாது.
சின்னவரைப் பார்த்தவுடன் திருமணம் நடக்கும் என்று ஏற்கனவே மஹான் ஆசீர்வதித்தார். அதனால்…… நான்கு மாதங்கள் பொறுத்துக் கொள்ளுங்கள் என்பதை இப்படிக் கட்டளையிட்டார் என்று சிவபிரகாசம் அறிந்து, மஹானின் இருப்பிடம் நோக்கி மானசீகமாக வழிபட்டார். சிவபிரகாசம் இன்று உயிரோடு இல்லை என்றாலும் அவர் மனதில் ஓடிய எண்ணங்களை அவரது இளைய மகன் செல்வகுமாரிடம் அவர் அப்போதே சொல்ல, அவர் இந்த சம்பவத்தை என்னிடம் விளக்கினார்.
ஜெய ஜெய சங்கர! ஹர ஹர சங்கர!!