Kanchi Mahan - Experiences - authored by R. Venkatasamy
Jan 11, 2014 16:12:41 GMT 5.5
radha and ramkumarnr like this
Post by uma2806 on Jan 11, 2014 16:12:41 GMT 5.5
பிரம்மாவின் பத்னிக்கு நமஸ்காரம்
பூஜை செய்யும்போது சொல்லும் மந்திரங்களை மிகவும் ஸ்பஷ்டமாகவும் தவறு இல்லாமலும் சொல்லவேண்டும் என்கிற நடைமுறையை மஹான் எவ்வளவு கண்டிப்பாகக் கடைப்பிடித்தார் என்பதற்கு இது ஒரு முக்கியமான உதாரணம். நியமநிஷ்டைகளை ஒவ்வொருவரும் தவறாமல் கடைபிடிக்கவேண்டும் என்பதால் இந்த சம்பவத்தை இங்கே சொல்ல வேண்டியதாகிறது.
முப்பது ஆண்டுகளுக்கு முன்பு ஒரு நவராத்திரியின் போது, நிறைவான நாளில் சரஸ்வதி பூஜை தினம் அனுஷ்டிக்கப்பட்டது. அன்று மஹான் தனது வழக்கமான சந்திரமௌலீஸ்வரர் பூஜையை முடித்த பின், தனியாக சரஸ்வதி பூஜையைச் செய்ய ஆரம்பித்தார். அவருக்கு உதவியாக ஒரு வைதீக அன்பர் பூஜா கல்ப புத்தகத்தை கையில் வைத்துக்கொண்டு படித்துக்கொண்டே வந்தார்.
வைதீகர் வரியாக சங்கல்பம் ஆவாஹனம், பிராணப் பிரதிஷ்டை, அங்கபூஜை முடிந்து சரஸ்வதி அஷ்டோத்திரம் சொல்ல ஆரம்பித்தார்.
மஹான் ஒவ்வொரு நாமாவுக்கும் ஒவ்வொரு புஷ்பத்தை எடுத்து சரஸ்வதியை அர்ச்சித்துக் கொண்டு இருந்தார். இந்த சமயம் அந்த வைதிக அன்பர் “ஓம் பிரஹ்ம ஜயாயை நம:” என்று படிக்க, சரஸ்வதியின் சரணங்களை அடைய மஹானின் கையில் இருந்த புஷ்பம் புறப்படவே இல்லை. வைதீகர் திரும்பத் திரும்ப இந்த நாமாவளியை அவ்வாறே சொல்லச் சொல்ல பெரியவா புஷ்பத்துடன் உயரத்தூக்கிய கையுடன் சித்திரம் போல் அசையாமல் நிற்க, சுற்றியிருந்த பக்தர்களுக்கு கவலை உண்டாயிற்று. ‘என்ன தவறு நடந்துவிட்டது?’ என்று புரியாமல் தத்தளித்தார்கள். இந்த விஷயம் மடத்து மானேஜர் விஸ்வநாத அய்யர் வரை போய்விட்டது. அவர் அவசர அவசரமாக பூஜை மண்டபத்திற்கு வந்தார். “மறுபடியும் படியுங்கோ” என்றார்.
வைதீகர் மறுபடியும் “ஓம் ப்ரஹ்ம ஜயாயை நம:” என்று சொல்ல, புஷ்பம் பெரியவா விரல் நுனியை விட்டு நகரவே இல்லை. இதைக் கவனித்த பக்கத்தில் அமர்ந்திருந்த வேறொரு வித்வான் “ஓம் ப்ரஹ்ம ஜாயாயை நம:” என்று திருத்திச் சொன்னவுடன், மஹானின் கையில் இருந்த புஷ்பம் சரஸ்வதியின் திருவடியை அடைந்தது. இந்த இரண்டு நாமங்களில் அப்படி என்ன பெரிய வித்தியாசம் என்று தோன்றலாம். “ப்ரஹ்ம ஜயாயை நம:’ என்றால் பிரஹ்மாவை ஜயித்தவளுக்கு நமஸ்காரம் என்று அர்த்தம்.
“ப்ரஹ்ம ஜாயாயை நம:” என்று ஒரு கால் போட்டுச் சொன்னால் பிரஹ்மாவின் பத்தினிக்கு நமஸ்காரம் என்று பொருள்.
பெரியவா இயந்திர கதியில் பூஜை செய்வதில்லை என்பதற்கு இது ஒரு நிதர்சமான உதாரணம். முழு மனத்தையும் பூஜையில் செலுத்திப் பொருள் ஊர்ந்து பூஜை செய்கிறார்கள் என்பதற்கு சான்று இது.
மஹானை “ஓம் சரஸ்வத்யை நம:” என்று நாம் சரணாகதி அடைந்து விட்டால் வித்தைகள் எல்லாம் தாமாக நமக்கு வரும்.
ஜெய ஜெய சங்கர! ஹர ஹர சங்கர!!