Post by Sumi on Jan 10, 2014 9:22:01 GMT 5.5
Part 2 of 2
ஆசாரங்களையும், தர்ம சாஸ்த்ரக் கட்டுப்பாடுகளையும் விட்டு விலகி விலகிப் போகிறதுதான் ஸோஷல் ஸர்வீஸ் என்றில்லாமல், அவற்றில் இன்னம் கிட்டே கிட்டே போய் ஒட்டிக்கொள்கிற மாதிரி தெய்வ ஸம்பந்தத்துடன்தான் தேசப்பணி செய்ய வேண்டும்.
தங்களுக்கும் ஸமூஹத்துக்கும் ஒன்று செய்துகொள்வதற்கு முன்னால், பகவானுக்கு எல்லாரும் சேர்ந்து செய்ய வேண்டும். தீபாவளி என்றால் தாங்கள் எண்ணெய் தேய்த்துக் கொள்வது, புது வஸ்த்ரம் கட்டிக் கொள்வதோடு ஏழை பாழைகளுக்கும் எண்ணெய், சீயக்காய், துணி கொடுக்க வேண்டும். அது மட்டும் போதாது. எல்லாரும் சேர்ந்து முதலில் கோயிலில் உள்ள அறுபத்து மூவர் உள்பட எல்லா மூர்த்திகளுக்கும் தைலம் சாத்தி, புது வஸ்த்ரம் அணிவிப்பதில்தான் கொண்டாட்டத்தை ஆரம்பிக்க வேண்டும். இப்படியே பொங்கல் என்றால் அவரவர் வீட்டுக்குச் சுண்ணாம்பு அடித்து சுத்தப்படுத்துவதோடு, வசதியில்லாதவர்களுக்கும் இந்த உதவியைப் பண்ணுவதோடு, வசதியுள்ளவர், வசதியில்லாதவர் எல்லாருமே ஒன்று கூடிப் பக்கத்திலுள்ள ஆலயங்களில் களை பிடுங்கி, தேய்த்து மெழுகி அலம்பிவிட்டு, பொக்க பொறைகளை அடைக்க வேண்டும்.
இப்போது நமக்கு உள்ளே இருக்கிற அழுக்கும் முள்ளுந்தான் கோயிலில் அழுக்காகவும் முள்ளாகவும் ரூபம் எடுத்திருக்கிறது! கோயிலில் செதுக்கி, மெழுகி சுத்தப்படுத்துகிறபோது நம் மனஸின் முள்ளையும் அழுக்கையும் அகற்றித் துப்புரவாக்கிக் கொண்டு விடுவோம். அப்போது நம் மனஸே தங்கமாகிவிடும். அந்தக் கனகஸபையில் அன்பே உருவான சிவம் வந்து குடிகொண்டு நாமே ஆலயமாகி விடுவோம்.
நடமாடும் மனிதருக்குச் செய்வதே படமாடும் பரமனுக்குச் செய்ததாகும் என்று சொல்லும் அதே திருமூலர் முதலில் ஈஸ்வரனுக்கு பத்ர அர்ச்சனையைச் சொல்லிவிட்டு அப்புறம்தான் பசுவுக்குப் புல், பிற்பாடு (இப்போது நான் பிடியரிசித்*திட்டம் என்று சொல்லிக் கொண்டிருக்கிறேனே அம்மாதிரி) ஏழை ஜனங்களுக்கு ஒரு கவளம் அன்னம் இவற்றைச் சொல்லிவிட்டு முடிவாக, இப்படிக் கையால் பொருளாக உபகாரம் பண்ணாவிட்டாலும், வாயாலாவது ஸகலரிடமும் மதுரமாகப் பேசி உபகாரம் பண்ணவேண்டுமென்று சொல்கிறார்.
யாவர்க்குமாம் இறைவர்க்கொரு பச்சிலை
யாவர்க்குமாம் பசுவுக்கொரு வாயுறை
யாவர்க்குமாம் உண்ணும்போதொரு கைப்பிடி
யாவர்க்குமாம் பிறர்க் (கு) இன்னுரை தானே.
ஆக ஈஸ்வர ஸேவையில்லாமல் மநுஷ்ய ஸேவை என்பதில்லை.
ஸமூஹ ஸேவையும் தெய்வப்பணியும் கைகோர்த்து நடக்க வேண்டுமென்றுதான் ஸ்ரீமட தொண்டு ஸபை என்பதாக மத ஸம்பந்தமாகத் துண்டுப் பிரசுரம் போடுபவர்களையும் பொதுத்தொண்டு செய்யும் ஸ்ரீமட முத்ராதிகாரிகளோடு சேர்த்து விட்டது.
''பகவான் நம்மைக் கண் திறந்து பார்க்க வேண்டும்''என்று எல்லாரும் குறைபட்டுக் கொள்கிறோம். கருணைக்கடலான ஈஸ்வரன் கண்ணைத் திறந்து பார்த்துக்கொண்டேதான் இருக்கிறான். ஏன் அவன் நாம் இஷ்டப்படுகிற மாதிரி நமக்கு ஸெனபாக்யங்களைத் தரவில்லை என்றால், நாம் கண்ணைத் திறந்து லோகத்தின் கஷ்டங்களைப் பார்த்து அது நிவ்ருத்தியாவதற்கு நம்மாலான உபகாரத்தைப் பண்ணாமலிருப்பதால்தான். நம் மனஸ் மற்றவர்களிடம் தயையால் நிரம்பினால், உடனே கருணையே உருவமான ஈஸ்வரனும் நமக்குத் தயை புரிவான். ஆனதால், கண்ணைத் திறந்து பார்க்க வேண்டியது நாம்தான்; பகவானல்ல.
கண்ணைத் திறந்து பல தினுஸாகக் கஷ்டப்படுபவர்களையும் பார்த்து நம்மாலானவரையில் அதை நிவ்ருத்தி பண்ண வேண்டும். அது மட்டும் போதாது. அவர்களும் தங்கள் கண்ணைத் திறந்துகொண்டு, இத்தனை கஷ்ட நிவ்ருத்திக்கும் எவன்தான் மூலகாரணமோ, எவனுடைய கருவி மாத்திரமாகவேதான் நாம் தொண்டு செய்வதல்லாமோ - அவனைப் பார்த்து, இந்தக் கஷ்டம் ஸுகம் எல்லாவற்றையும்விடப் பெரிசு அவனை அடைவதுதான் எனறு உணரும்படியாகப் பண்ண வேண்டியதே நம்முடைய தலையாய பணி.
நம் மதத்தில் பொதுத்தொண்டு உண்டா என்று கேட்பவர்கள் கேட்டுவிட்டுப் போகட்டும். நான் சொல்கிறேன் இப்போது நம் மதத்துக்கே தொண்டால்தான் பார்த்துக்கொள்ள வேண்டும். ஹிந்துமதம் வேலி இல்லாத தர்காஸ்து நிலம் மாதிரிக் கிடக்கிறது. இந்த நிலைமை மாறி இந்த மதத்தைக் கவனிக்க மநுஷ்யர்கள் இருக்கிறார்கள் என்ற நம்பிக்கையை உண்டு பண்ண வேண்டும். ஸ்வய மரியாதையுடன் நம் மதத்தில் இருக்கலாம் என்று ஸகல வகுப்பினருக்கும் நம்பிக்கையை உண்டுபண்ணுவது எல்லோரும் ஸங்கமாகக் கூடிச் செய்கிற பொதுத்தொண்டு தான். இந்தத் தொண்டுகளை அப்புறம் சொல்கிறேன். இப்படி ஸகல ஹிந்துக்களும் சேர்ந்து கொண்டு, செய்வதே நம் மதத்துக்கு வேலியாகி, இது 'தர்காஸ்து'நிலமில்லை என்று ஆக்கும். 'நம்முடைய சொந்த மதம்'என்ற அபிமானம் எல்லா வகுப்பாருக்கும் உண்டாகி விடுமாதலால் வேறு யார் வேண்டுமானாலும் இதிலிருக்கிறவர்களை ஸ்வாதீனம் பண்ணிக்கொள்ளலாம் என்ற நிலைமை போகும். மதமாற்றம் ஏற்படாமல் ஹிந்துக்களின் நிலைமையை மாற்ற நாம் எதிர் பிரசாரம் பண்ணிச் சண்டை உண்டாக்க வேண்டியதில்லை. நம்முடைய அசட்டையும், கடினமும் போய் நாம் மனமாற்றம் அடைந்து நம் ஜனங்களையெல்லாம் பரோபகாரத்தில் அணைத்துக் கொண்டாலே மதமாற்றம் நின்று போய்விடும். இதுதான் ஹிந்து ஸமூஹத்தை ஹிந்து ஸமூஹமாகவே வைத்துக் காப்பாற்றுவதற்கு சாந்தமான வழி. மதத்துக்காக ulterior motive -ஓடு (உள் நோக்கத்தோடு) நாம் பரோபகாரம் பண்ணாமல் அன்பின் நிறைவுக்காகவே பண்ணி, side by side மதத்தையும் ரக்ஷிக்க வேண்டும். எனக்கு உபசாரம் பண்ணிப் பூர்ணகும்பம் கொடுத்து மாலை போடுவதைவிட இப்படி ஹிந்துக்கள் அனைவரும் தொண்டினால் ஒன்று சேர்ந்து மதத்தை ரக்ஷித்துத் தருவதுதான் எனக்கு நீங்கள் பண்ணுகிற பெரிய உபசாரம், உபகாரம் எல்லாமும்.