Post by Sumi on Jan 6, 2014 8:47:17 GMT 5.5
Part 2 of 2
விநோபா 'ச்ரம்தான்' (ச்ரம தானம்) என்று சொல்லி வருகிறாரே, இதைத்தான் பூர்த்த தர்மம் என்று நம் சாஸ்த்ரங்களில் சொல்லியிருக்கிறது.
வாரத்தில் ஒரு நாளாவது இந்த சரீர கைங்கர்யத்தை ஸகல ஜனங்களும் பண்ண வேண்டும் என்பது என் ஆசை. யாராயிருந்தாலும் வாரத்துக்கு ஒரு நாள் ஹாலிடே (விடுமுறை) இருக்கிறதல்லவா?அன்றைக்கு லோகோபகாரமாக சரீரத்தால் ஒரு பொதுப்பணி செய்ய வேண்டும். மனப்பூர்த்தியுடன், அல்லது மனப் பூர்த்திக்காக பூர்த்த தர்மம் பண்ண வேண்டும்.
அவரவருக்கும் எத்தனையோ குடும்பக் கார்யங்கள் இருக்கும் என்பது வாஸ்தவம்தான். இந்தக் கார்யங்களை லீவு நாளில் பார்த்துக் கொள்ளலாம் என்றுதான் வைத்திருப்பார்கள். ஆனாலும் இதோடுகூட பார்வதீ-பரமேஸ்வராளின் பெரிய லோக குடும்பத்துக்கும் தன்னாலானதை ஒரு 'ட்யூட்டி'யாக செய்யத்தான் வேண்டும். இதற்காக அதையும் விடக்கூடாது. அதற்காக இதையும் விடக்கூடாது. கொஞ்ச நேரமாவது இந்தப் பரோபகாரப் பணி புரிய வேண்டும்.
சரீர கைங்கர்யம் உடம்புக்கே ஒரு நல்ல exercise (அப்யாஸம்) . அதோடு பரோபகாரமாகப் பண்ணுகிற போது மனஸுக்கும் அலாதியான உத்ஸாஹம் இருக்கும். முடிவில் சித்த சுத்தியைத் தரும்.
ஸங்கமாகச் செய்ய வேண்டும். உதிரி உதிரியாக அவரவர்கள் செய்வதைவிட எல்லாரும் சேர்ந்து செய்தால் ஜாஸ்தி உபகாரம் பண்ண முடியும்.
அதுவும் இந்தக் கலிகாலத்தில் பலர் கூடிப் பண்ணுவதுதான் பலன் தரும்- கலௌ ஸங்கே சக்தி : என்றே வசனமிருக்கிறது. முன் யுகங்களில் individual -ஆக ஒவ்வொருத்தனுக்கும் தேஹ, மனோ சக்திகள் அதிகமிருந்தன. இப்போது அது போய்விட்டது. அதனால்தான் நாமும் பார்க்கிறோம், எல்லா mass movement -களாகவே (வெகுஜன இயக்கங்களாகவே) இருப்பதை அநேகமாக, 'கலி'என்றாலே சண்டை, சச்சரவு என்று அர்த்தமிருப்பதற்குப் பொருத்தமாக இந்த ஸங்க சக்தி மறியல் 'ஒழிக'ஊர்வலம் நடத்துவது, ரயிலைக் கொளுத்துவது முதலான காரியங்களுக்குத்தான் பிரயோஜனப்படுகிறது!
இந்த ஸங்க சக்தியை இனிமேலாவது நாம் நல்லதற்கு channelise பண்ணி ஸமூஹப் பணிகளை விருத்தி செய்ய வேண்டும்.
ஸங்கமாகச் சேர்ந்து தொண்டு செய்கிறவர்களுக்கு அத்யாவசியமாயிருக்க வேண்டிய யோக்யதாம்சங்கள்: அவர்களுக்குக் கட்டுப்பாடு (நியமம்) ரொம்பவும் தேவை. எடுத்துக்கொண்ட வேலையில் கொஞ்சம்கூடப் பொறுப்பு குறையக்கூடாது. ஸத்தியமும், அந்தரங்க சுத்தமும் இதுபோலத் தேவை. அன்போடு மதுரமாகப் பேசவும் பழகவும் வேண்டும். பணத்தைக் கையாளுவதில் அப்பழுக்கில்லாதவர்கள் என்ற நம்பிக்கையை உண்டு பண்ணக்கூடியவர்களாக இருக்கணும். நியாயமாக ஸந்தேஹப்படுபவர்களிடம் பொறுப்பில்லாமலோ, பொறுமையிழந்தோ பதில் சொல்லக்கூடாது.
அதே ஸமயத்தில் அநேக ஸந்தேஹப் பிராணிகள் ஏதாவது ரூமர் கிளப்பிக் கொண்டிருக்கிறார்களே என்பதற்காக ''நமக்கென்னத்துக்கு ஊரான் பாடு?''என்று பொதுத் தொண்டை விட்டு விடவும் கூடாது. அதாவது ஸ்வயமான அவமானங்களை பாராட்டிக் கொண்டிராத மனப்பான்மை வேண்டும். நகரமானால் ஒரு பேட்டையில் இருப்பவர்களெல்லாம் சேர்ந்து செய்யலாம். க்ராமமானால் நாலு க்ராமத்து ஜனங்கள் ஒன்றுகூடிப் பண்ணலாம்.
ந U ஜானபதம் து : கம் ஏக : சோசிதும் அர்ஹதி என்று ஒரு வசனம் இருக்கிறது. ''ஊர்க் கஷ்டத்தைப் பற்றி ஒருத்தன் விசாரப்பட்டுப் பிரயோஜனமில்லை''என்று இதற்கு அர்த்தம் பண்ணிக்கொண்டு, நம் மதத்தில் ஸமூஹ ஸேவா உணர்ச்சியை இல்லை என்று சொல்கிறார்கள். இது ஸரியில்லை. வாஸ்தவத்தில் இதன் அர்த்தம் இப்படியில்லை. '' ஏக : - ஒருத்தன்''என்ற வார்த்தைதான் இங்கே முக்யமானது. தனி ஒருத்தனாக இருந்துகொண்டு ஊர்க் கஷ்டத்தைப் பார்த்துவிட்டு இவனும் அவர்களோடு சேர்ந்து அழுவதில் ப்ரயோஜனம் இல்லை;பல பேராகச் சேர்ந்து அந்தக் கஷ்டத்தை நிவ்ருத்தி பண்ணக் கார்ய ரூபத்தில் முயற்சி செய்ய வேண்டும் என்பதே இதன் அர்த்தம். ஒன்று, வெறுமே விசாரம் மட்டும் படக்கூடாது;கார்யத்தில் இறங்க வேண்டும். இரண்டாவது, தனியாகப் பண்ணினால் எடுபடாது. பலர் ஸங்கமாகச் சேர வேண்டும்.
பிறத்தியானைக் கஷ்டப்படுத்தியாவது ஸ்வயகார்யத்தை ஸாதித்துக் கொள்வதென்பதே பொதுத் குணமாக உள்ள நாம் இப்படிப் பலருக்குமான கார்யத்தைப் பலரோடு சேர்ந்து ஸ்வய ச்ரமத்தைப் பாராமல் அன்பினால் ஒன்றுபட்டுச் செய்கிறபோது அடைகிற தூய ஆனந்தம் தனியானது. கார்யம் நிற்கிறதும் நிற்காததும் ஒரு பக்கம் இருக்கட்டும். அதைச் செய்யும் போது பலர் ப்ரேமையில் ஒன்று கூடும் இன்பம் இருக்கிறதே, அதுவே ஒரு பெரிய பயன்.