Post by Sumi on Jan 5, 2014 10:34:07 GMT 5.5
Part 1 of 2
பூர்த்தம் காதாதி கர்ம யத் என்று ஸம்ஸ்க்ருத டிக்ஷனரியான 'அமர'த்தில் சொல்லியிருக்கிறது. 'காதம்'முதலான கர்மாக்கள் பூர்த்தம் ஆகும் என்று அர்த்தம்.
காதம் என்றால் வெட்டுவது;அதாவது குளமோ, கிணறோ, வாய்க்காலோ வெட்டி உபகாரம் பண்ணுவது. சாஸ்திரங்களில் விசேஷித்துச் சொல்லியிருக்கிற இந்தப் பூர்த்த தர்மத்தை மறந்தால்தான் ஜலக்கஷ்டம் (Water scarcity) என்று ஓயாமல் அவஸ்தைப் படுகிறோம். அந்தக் காலத்தில் இந்தக் கார்யம் ரொம்பவும் முக்யமாகக் கருதப்பட்டதால்தான் நாம் கூப்பிட்டு ஒருத்தன் வரவில்லை என்றால், ''அவன் அங்கே என்ன வெட்டிக் கொண்டிருக்கிறானோ?''என்று கேட்கிற வழக்கம் வந்திருக்கிறது. அதாவது அவன் வெட்டிக் கொண்டிருந்தால் மட்டும் நாம் எத்தனை அவஸரத்தில் கூப்பிட்டாலும் வராமலிருக்கலாம் என்று அர்த்தமாகிறது!
இப்போது வெட்டுகிற கார்யம் போய், தூர்ப்பது தான் முக்யமான கார்யமாக இருக்கிறது!குழாயில் தண்ணீர் நின்றுவிட்டாலோ அல்லது பூச்சியும் புழுவுமாகக் குழாய் ஜலம் வரும்போதோ, ''ஏண்டா குளத்தைத் தூர்த்தோம், கிணற்றை மூடினோம்?''என்று துக்கமாக வருகிறது.
முன்பெல்லாம் ஒரு குளம் என்றால் வாய்க்கால்கள், வடிகால்கள் என்றெல்லாம் போட்டு வெகு சுத்தமாக வைத்துக் கொள்வார்கள். கிணறு என்றால் இழுக்கத் தெரிந்த மநுஷ்யனுக்கு மட்டும்தான் அது ப்ரயோஜனமாகும். குளமானாலோ வாயில்லா ப்ராணிகளுக்கும்-காக்காய், குருவி முதற்கொண்டு ஸகல ஜீவராசிகளுக்கும்-அது பயன்படும். பாதை போடுவது ஒரு தர்மம். வ்ருக்ஷம் வைப்பது இன்னொரு தர்மம். புதிதாக வைப்பதோடு, இருக்கும் வ்ருக்ஷங்களை வெட்டாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். புதிதாக வைக்கிற செடிக்கு தினம் ஜலம் விட்டு, அது வ்ருக்ஷமாக வளரப் பண்ண வேண்டும். ''வனமஹோத்ஸவம்''என்று இன்றைக்குப் பெரிய மநுஷர்கள் வந்து செடி நட்டுவிட்டு நாளைக்கே அதற்கு ஜலம் விட ஆள் இல்லாமல் அது பட்டுப்போனால் என்ன ப்ரயோஜனம்? இதுமாதிரி டெமான்ஸ்ட்ரேஷன், வெளிவேஷம் நமக்கும் உதவாது, லோகத்துக்கும் உதவாது. இதற்குப் பதில் யாருக்கும் தெரியாமல் ஒருத்தன் ஏதோ ஒரு ஒற்றையடிப் பாதையில் உள்ள முள்ளை, கண்ணாடியை அப்புறப்படுத்தி வந்தால், அதுவே மற்றவர்களுக்கு வழியை சுத்தி பண்ணுவதோடு இவனுக்கும் சித்த சுத்தியைக் கொடுத்துவிடும்.
ஒவ்வோர் அவயவத்தாலும் ஏற்படக்கூடிய தோஷத்தைப் போக்கிக்கொள்ள அந்த அவயவத்தாலேயே செய்யக்கூடிய புண்ய கர்மாக்கள் இருக்கின்றன. குப்பைத் தொட்டியான மனஸை சுத்தம் பண்ண அந்த மனஸாலேயே த்யானம் செய்ய முடிகிறது. கண்டதைப் பேசுகிற நாக்கை சுத்தப்படுத்திக் கொள்ள அந்த நாக்காலேயே பகவந்நாமாவைச் சொல்ல முடிகிறது. குயுக்தி எல்லாம் பண்ணும் மூளையை சுத்தமாக்கிக் கொள்ள அந்த மூளையாலேயே தத்வ ஆராய்ச்சி பண்ண முடிகிறது. இப்படியே, இந்த சரீரத்தால் - கையாலும், காலாலும், உடம்பாலும் எத்தனையோ தப்பு தண்டா பண்ணுகிறோமல்லவா?அதை இந்த சரீரத்தாலேயே தான் சுத்தப்படுத்திக்கொள்ள வேண்டும்.
சரீரப் பிரயாஸையாலேயே பண்ணிக்கொள்ளும் இந்த சுத்திதான் பொதுக்கார்யங்களான பூர்த்த தர்மங்கள்-ஸோஷல் ஸர்வீஸ்-அத்தனையும், சரீரப் பிரயாஸையாலேயே இது சித்த சுத்தியையும் தரக்கூடியது. ஏனென்றால் சரீரத்தால் செய்கிற இந்தக் கார்யங்களுக்கு மூலமாகப் பரோபகாரம் என்ற எண்ணம் நம் சித்தத்தில் இருப்பதுதான்.
தயை என்பது ஒவ்வொருவர் மனஸிலும் இருக்க வேண்டிய உயர்ந்த குணம். அந்த தயைக்கு உருக்கொடுக்கும்படியான ஒரு கார்யத்தை சரீரத்தினாலும் அவசியம் செய்ய வேண்டும்.
(to be continued...)