Post by uma2806 on Dec 11, 2013 13:39:42 GMT 5.5
தர்ம ஸ்தாபனம்
வடநாட்டைச் சேர்ந்த பெரிய தொழிலதிபர். பிரபலமானவர். அவர் தன் குடும்பத்தாருடன் ஆசாரிய ஸ்வாமிகளைத் தரிசிக்க வந்தார். முன்பு ஸ்வாமிகள் வடநாட்டு யாத்திரை சென்றபோது ஸ்வாமிகளின் குழுவினருக்கு மிகவும் உதவியாக இருந்தவர். புன்னகையுடன் அந்தத் தொழிலதிபரைப் பார்த்துக் கொண்டிருந்தார் ஆசாரிய ஸ்வாமிகள்.
என்ன சொல்லப் போகிறார் என்பதை முன்கூட்டியே ஸ்வாமிகள் புரிந்திருப்பார் போலும்.
“இப்ப பெரிய தொகையை தர்ம காரியங்களுக்கு உதவப் போகிறேன். இனி வருடா வருடம் எங்கள் கம்பெனிகளின் வருமானத்தில் கொஞ்சம் பணத்தை தர்ம காரியங்களுக்கு உதவ முடிவுசெய்து இருக்கிறோம். அந்தப் பணத்தைத் தங்கள் இஷ்டப்படி தர்ம காரியங்களுக்குக் கொடுத்து விடுங்கள் ஸ்வாமி!” என்று பெரிய தொகையை செக்கில் எழுதிக் கொடுத்தார் தொழிலதிபர். அவரது மகனும் மனைவியும் “ஆமாம் ஸ்வாமி, நாங்கள் சம்பாதிப்பதில் ஒரு பகுதி தர்மத்துக்குக் கொடுக்கணும்னு முடிவு செஞ்சு இருக்கோம். இதுக்கு ஸ்வாமிகளின் அநுக்கிரஹம் வேணும்” என்றார்கள்.
செக்கைப் பார்த்தார் ஸ்வாமிகள். மிகப் பெரிய தொகை குறிப்பிடப்பட்டு இருந்தது செக்கில். பிரமித்தார். சிலிர்த்தார். மகிழ்ந்தார். அந்தத் தொழிலதிபரின் மனம் ஜாதியைக் கடந்து மாநிலத்தைக் கடந்து விரிந்து இருப்பதைப் புரிந்து கொண்டு அந்தக் குடும்பத்தின் மீது அருள் பார்வை செலுத்தினார். மௌனமாக ஸ்வாமிகளைத் தரிசித்தவண்ணம் இருந்தது அந்தக் குடும்பம்.
“உங்க தயாள குணத்தைக் கண்டு ரொம்ப சந்தோஷம். உங்க கம்பெனிகள் நன்னா இருக்கும். வருடாவருடம் லாபத்தில் ஒரு சிறு பகுதியை தர்ம காரியத்துக்குக் கொடுக்கப் போறேள். உங்க கம்பெனிகளின் லாபத்தில் சிறுபகுதி என்பது பெரிய தொகையாக இருக்கும். நான் சந்நியாசி. என் பொறுப்பில் இவ்வளவு பணம் இருக்க வேண்டாம். நீங்களே உங்கள் முன்னோர் பெயரில் ஒரு தர்மஸ்தாபனம் அமைத்து இந்தப் பணத்தையும் வருடா வருடம் லாபத்தில் சிறு பகுதியையும் அந்த தர்ம ஸ்தாபனத்தில் செலுத்துங்கள். அந்த தர்மஸ்தாபனம் மனிதநேயத்துடன் மக்களுக்கு உதவட்டும். நீங்களே ஒரு குழு அமைத்து அந்த தர்ம ஸ்தாபனத்தை நடத்துங்கள். என் ஆசி உங்களுக்கு என்றும் உண்டு” என்று சொல்லிக்கொண்டே அந்த செக்கைத் திரும்பக் கொடுத்தார் ஸ்வாமிகள்.
ஸ்வாமிகளின் செயலைக் கண்டு சிலிர்த்தார் தொழிலதிபர். முற்றும் துறந்த முனிவர் என்றால் இவர்தான் என்று எண்ணிய தொழிலதிபர் “ஸ்வாமி! தாங்கள் சொல்வது போல் தர்மஸ்தாபனம் அமைத்துச் செயல்படுகிறேன். முதல் காரியமாக தாங்கள் சொல்லும் திருப்பணியைச் செய்கிறேன். உத்தரவு வேணும் ஸ்வாமி!” என்று கேட்டார் தொழிலதிபர்.
சற்று நேரம் யோசனை செய்தார். சிதிலம் அடைந்த புராதனமான ஒரு கோயிலைச் சீரமைத்துக் கும்பாபிஷேகம் செய்யச் சொன்னார். அதைச் செய்ய ஒப்புக் கொண்டார் தொழிலதிபர்.
ஜெய ஜெய சங்கர! ஹர ஹர சங்கர!!