Post by uma2806 on Nov 29, 2013 11:47:57 GMT 5.5
ஸ்வாமிகள் கேட்ட கேள்வி
ஒரு நாள் பெரிய பணக்காரர் வந்தார். ஸ்வாமிகளிடம் ஆசி பெறக்காத்திருந்தார். ஸ்வாமிகள் பக்தர்களுக்கு ஆசி வழங்கிக்கொண்டே இருந்தார். வந்தவர்கள் தங்கள் குறைகளை, பிரச்னைகளைச் சொன்னார்கள். வேதனைப்பட்டார்கள். அவர்கள் சொன்னதைப் பொறுமையாகக் கேட்டுக்கொண்டு இருந்தார் ஸ்வாமிகள். அவர்களுக்கு இரண்டொரு வார்த்தைகளில் பதில் சொன்னார். பார்வையால் கருணை காட்டி ஆசி கொடுத்தார்.
அந்தப் பணக்காரர் வந்தார் ஸ்வாமிகளுக்கு அருகே; கரம் குவித்தார். பணக்காரருடன் அவர் மனைவியும் இருந்தார். “ஸ்வாமி! எனக்கு ஆசீர்வாதம் கொடுங்கள்! எனக்கு எல்லா பாக்கியமும் இருக்கின்றன. ஆனால், ஏதோ ஒன்று மனஸை நெருடுகிறது!” என்று தன் வேதனையைச் சொன்னார்.
“ஆமாம் ஸ்வாமி!” என்று கரம் குவித்தாள் அவர் மனைவி. அவர்களைப் புன்னகையுடன் பார்த்தார் – பிரசாதம் கொடுத்தார்.
“பிறருக்கு உதவும் பாக்கியம் உங்களுக்கு இருக்கிறதோ!” என்று கேட்டார் ஸ்வாமிகள்.
இந்தக் கேள்வி அந்தத் தம்பதியைச் சிலிர்க்கச் செய்தது. சிந்திக்கச் செய்தது.
அவர்களுக்கு ஆசியளித்து அனுப்பினார் ஸ்வாமிகள். வீட்டுக்கு வந்தார்கள். அந்தப் பணக்காரருக்குப் புரிந்தது. அவருடன் பிறந்த தம்பியும் தங்கையும் கஷ்டப் பட்டுக் கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு உதவவிடாமல் அவர் மனைவி தடுத்துக் கொண்டே வந்தாள். ஸ்வாமிகள் கேட்டது அவர் மனைவியின் மனதில் தைத்தது. பல எண்ணங்கள் அவள் மனதில். அவர் தம்பிக்கும் தங்கைக்கும் உதவ முன்வந்தார். அவர்கள், “அண்ணா, நீங்கள் எங்களுக்கு உதவினால் உங்கள் குடும்பத்தில் குழப்பம் வரும். வேண்டாம் அண்ணா, நீங்களாவது நன்றாக இருங்கள்!” என்றார்கள்.
அவரது மனைவியே உதவச் சொன்னாள். மஹானின் ஆசிக்கு அத்தனை சக்தி இருந்திருக்கிறது. பிறகு மடத்துக்குப் போகும்போது அவர்கள் மனதில் நெருடல் இல்லை.
ஸ்வாமிகளின் ஒரு வாக்யம் (வேதவாக்யம்) பல குடும்பங்களுக்கு அருமருந்தாக அமைந்தது!
ஸ்வாமிகள் பாதயாத்திரை சென்றபோது அங்கங்கு பல பக்தர்கள் ஸ்வாமிகளிடம் ஆசி பெறுவது வழக்கமாக இருந்தது. அவரைத் தரிசிக்கவும் ஆயிரக்கணக்கில் பக்தர் காத்திருந்ததும் உண்டு. ஸ்வாமிகள் முகம் சுளிக்காமல் அனைவருக்கும் ஆசியளித்தார். அருள் பாலித்தார். பாத யாத்திரையின் போது இரவு தங்கும் முகாம்களிலும் ஸ்வாமிகளை மக்கள் தரிசித்து தங்கள் குறைகளைச் சொல்லிவிட்டு ஸ்வாமிகளின் அருளாணையை எதிர் பார்த்தார்கள். அப்படி ஒரு முகாமில் பெரிய அதிகாரி. தனியார் நிறுவன அதிகாரி மகானைத் தரிசிக்க வந்தார். தனக்கு இருக்கும் வேதனையை வார்த்தைகளில் வடித்தார்.
“ஸ்வாமி, எனக்குப் புத்திர பாக்கியம் இல்லை. நானும் மனைவியும் டாக்டர்களிடம் காட்டினோம். இரண்டு பேருக்குமே அந்த பாக்கியம் இல்லை என்று சொல்லி விட்டார்கள். குழந்தை இல்லாதது எங்கள் மனதை ரொம்ப வேதனைப்படுத்துகிறது ஸ்வாமி! தாங்கள் இதற்கு ஒரு மார்க்கம் சொல்லியருளணும் ஸ்வாமி!” என்று அதிகாரியும் மனைவியும் வணக்கத்துடன் சொன்னார்கள். ஸ்வாமிகள் இருவரையும் கருணையுடன் பார்த்தார்.
“நான் சொல்றதைச் செய்வேளா?”
“செய்வோம் ஸ்வாமி!” அந்தத் தம்பதி ஒரே குரலில் சொன்னார்கள்.
“ஏழைக்குழந்தைகளைப் படிக்க வையுங்கள். உங்க இஷ்டப்படி எத்தனை பேரைப் படிக்கச் செய்ய முடியுமோ அத்தனை பேருக்குக் கல்வி கொடுங்கள். உங்கள் மனப்பாரம் குறையும்”.
ஸ்வாமிகளின் சொல்லை வேதவாக்காக எடுத்துக் கொண்டு அவருக்குப் பாதபூஜை செய்தார்கள். “உங்கள் கடமையைச் சிறப்பாகச் செய்யுங்கள். பலனை பகவான் பார்த்துப்பார்!” என்று பிரசாதம் கொடுத்து அனுப்பினார். தம்பதிக்கு மன அமைதி ஏற்பட்டது. இன்னும் பத்து வருடம் அந்த அதிகாரிக்கு சர்வீஸ் இருந்தது. அந்த நகரில் மூன்று கல்லூரிகள். ஆண்கள் கல்லூரி இரண்டு. ஒரு பெண்கள் கல்லூரி. அந்த வருடமே அந்த மூன்று கல்லூரி முதல்வர்களிடமும் அந்த அதிகாரி சொல்லி விட்டார்.
“உங்கள் கல்லூரியில் புதிதாகப் படிக்கச் சேரும் ஏழை மாணவன் – மாணவி ஒருவருக்கு நான் கல்விச் செலவு எல்லாதவற்றையும் ஏற்றுக் கொள்கிறேன். நீங்கள் ஏழை மாணவரை – மாணவியைத் தேர்வு செய்து தரவேண்டும்” என்று.
அப்போது கல்லூரிகளில் புகுமுக வகுப்பு இருந்தது. புகுமுக வகுப்பு (PUC) ஒரு வருடம், பட்டப்படிப்பு மூன்று வருடம், பட்ட மேற்படிப்பு இரண்டு வருடம். அதற்கு மேலும் படிப்புகள் அந்த நகரில் இல்லை. பட்டமேற்படிப்பு வரை அவர்கள் உதவத் தயார்.
சொந்தக்காரர்களுக்கும் இதுவரை உதவி செய்து இருக்கிறார்கள் என்றாலும் அவர்கள் மனதில் நெருடல் இருந்தது. ஜூன் மாதம் கல்லூரிகள் திறந்தன. புகுமுக வகுப்பில் அட்மிஷன் ஆரம்பமாயின. பெண்கள் கல்லூரியில் ஒரு ஏழை மாணவிக்குப் படிக்க உதவினார்கள். இரண்டு ஆண்கள் கல்லூரியில் தலா ஒரு ஏழை மாணவருக்குப் படிக்க உதவினார்கள். காலேஜ் ஃபீஸ், ஆஸ்டல் ஃபீஸ், புத்தகங்கள், துணிமணிகள் எல்லாச் செலவும் ஏற்றுக் கொண்டார்கள்.
ஆறுவருடங்கள் அந்த மூன்று பேருக்கும் அனைத்துச் செலவுகளையும் இந்த அதிகாரி ஏற்றுக் கொண்டார். ஏழை மாணவர்களைத் தேர்வு செய்த கல்லூரி முதல்வர்களும் நல்ல மாணவர்களைத் தேர்வு செய்து இருந்தனர். அந்த இரண்டு ஏழை மாணவர்களும் ஒரு ஏழை மாணவியும் கல்லூரியில் சிறப்பாகப் படித்தனர். தேவையான செலவுகளை மட்டும் செய்தனர். ஆசிரியர்களாக, வேறு துறை அதிகாரிகளாக ஆனார்கள்.
பட்ட மேற்படிப்பு படித்து முடித்துவிட்டு, அந்த மூன்று பேருக்கும் சொந்தப் பெற்றோர் இருந்தாலும் இந்தத் தம்பதியிடமே அதிகப் பாசம் காட்டினர். பண உதவிகூட செய்யத் தயாராக இருந்தனர். அவர்களது அன்பும் பாசமும் போதும் என்று சொல்லிவிட்டனர் தம்பதியினர்.
பிரச்னைகளுடன் வருபவருக்கு ஸ்வாமிகளின் அறிவுரை, உபதேசம், அவர்களுக்குத் தீர்வும், மற்றவருக்கு வாழ்வும், அனைவருக்கும் மகிழ்ச்சியும் அளிப்பவையாக இருந்ததற்கு இவை சிறு உதாரணங்கள்.
ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர!!