Post by Sumi on Nov 25, 2013 8:49:39 GMT 5.5
ஜாதிமுறையினால் பிரிந்திருந்ததால் முன்னே தேசத்தில் ஒருத்தருக்கொருத்தர் விரோதமாக இருக்கவே இல்லை.
இப்போது தான் ஸ்டேட்டுக்கு ஸ்டேட் (மாநிலத்துக்கு மாநிலம்) குத்துப்பழி வெட்டுப் பழியாக எல்லைத் தகராறு, ஆற்று ஜலப் பங்கீட்டுத் தகராறு எல்லாம் ஏற்பட்டிருக்கின்றன. முன்னே காசி யாத்ரீகனுக்காக இங்கே செட்டிப் பிள்ளைகள் சத்திரம் கட்டி வைத்துச் சாப்பாடு போட்டார்கள். இங்கிருந்து காசிக்கும் பத்ரிநாத்துக்கும் போகிறவனுக்காக ஸேட்ஜி தரம்சாலா (தர்மசாலை) வைத்திருந்தான். அதாவது ஈச்வர பக்தியால் எல்லாரும் ஒன்று சேர்ந்து இருந்தார்கள். இப்போது அதுபோய் பாலிடிக்ஸ், புத்தி வாதம் ஆகியன அதிகமாகி விட்டதால்தான் எல்லாமே கோளாறாகி இருக்கிறது.
அதனால் கடைசியில் எல்லாவற்றுக்கும் மருந்தாக, ஸர்வரோக நிவாரணியாக, தேசத்தில் பக்தி வளரவேண்டும் என்றுதான் பிரார்த்தனை பண்ணவேண்டும். "ஜாதி ஒழியனும், ஜாதி ஒழியனும்" என்று ஒயாமல் சொல்லிக் கொண்டிருப்பதால், இன்னும் ஜாஸ்தி துவேஷம்தான் உண்டாகிக் கொண்டிருக்கிறது. முப்பது, நாற்பது வருஷமாக இந்தப் பிரசாரம் பண்ணி வந்தாலும் ஒரு எலக்ஷன் என்று வருகிறபோது இப்போது பார்த்தாலும் ஜாதிதான் முன்னால் நின்று, ஒரு கம்யூனிட்டிக்காரன் இன்னொருவனை அடிப்பது, கத்தியால் குத்துவது என்கிற அளவுக்குப் போய்க் கொண்டிருப்பதைப் பார்க்கிறோம். இது பிராம்மண- அப்பிராம்மண ஜாதித்வேஷம் இல்லை.
பிராம்மணனை நல்ல வேளையாக பாலிடிக்ஸிலிருந்து ரொம்ப தூரத்துக்கு வெளியே தள்ளியிருக்கிறது. இவனாக விலகாவிட்டாலும் மற்றவர்களாவது இப்படிக் கழுத்தைப் பிடித்துத் தள்ளியிருக்கிறார்களே என்று கொஞ்சம் ஆறுதலாயிருக்கிறது. அதனால் இப்போது நடக்கிற சண்டை மற்ற ஜாதிகளுக்குள்ளேயே தான்!தெலுங்கு தேசத்தில் கம்மாவுக்கும் ரெட்டிக்கும் சண்டை;கன்னட தேசத்தில் லிங்காயத்துக்கும் இன்னொரு ஜாதிக்கும் சண்டை என்கிற மாதிரி சாஸ்திரங்களில் கற்பனை கூடச் செய்து பார்க்க முடியாத விபரீத ஜாதிச் சண்டைகளையெல்லாம் 'ஆக்வாலிடி'முழக்கம் ரொம்ப ஜாஸ்தியாகவுள்ள இப்போதுதான் பார்க்கிறோம். இங்கே (தமிழ்நாட்டில்) ஒரு ஜில்லாவில் படையாட்சி, இன்னொன்றில் செங்குந்தர் என்று இப்படி ஒவ்வொரு ஜாதிக்காரர்களையே பார்த்து அபேட்சகராக நிறுத்துகிறார்கள். candidate (வேட்பாளர்) களுக்கிடையே அரசியல் கொள்கையையெல்லாம் விட்டுவிட்டு, இந்த ஜாதி அடிப்படையிலேயே போட்டோ போட்டி நடப்பதைப் பார்க்கிறோம்.
ஆகையால் 'ஒழியணும்'என்ற கோஷம் உள்ள மட்டும் ஒன்றும் வாஸ்தவத்தில் சரியாகாது.
தமிழ்ப் பண்பாட்டையும், திருவள்ளுவர் முதலானவர்கள் அன்பையும் அருளையுமே போற்றிச் சொன்னதையும் ஒரு பக்கம் ஒயாமல் சொல்லிக் கொண்டே, இப்படி 'ஒழிக'கோஷம் போடுவதும், தெருவெல்லாம் எழுதி வைப்பதும் நம் தமிழ் தேசத்துக்குக் கொஞ்சம் கூட ஏற்றதல்லவே என்று என் மனஸுக்கு ரொம்பவும் கிலேசமாக இருக்கிறது.
'ஒழியணும்'என்பதை விட்டு 'வளரணும்'என்று ஆரம்பித்தோமானால் அத்தனை பேதமும், த்வேஷமும், சண்டையும் போய்விடும். 'ஜாதி ஒழியணும்'என்பதற்குப் பதில் இனிமேல் பழையபடி 'பக்தி வளரணும்'; 'கோயில் வளரணும்'என்று ஆரம்பித்து அதற்கானதை ஸகல ஜனங்களும் சேர்ந்து பண்ணினால் ஆதி காலத்திலிருந்து இந்த தேசத்தை ஒரு குடும்பமாகப் பின்னி வைத்து வந்திருக்கிற ஈச்வர பக்தி இப்போதும் நம்மை ஒன்றாக்கிக் காப்பாற்றும். பக்தி வந்து விட்டால், ஜாதி த்வேஷம் போயே போய்விடும். இத்தனை காலமாக இப்படித்தான் இருந்தது. ஜாதி இருந்தது. ஆனால் அதனால் த்வேஷம் இல்லாமலே இருந்தது. 'ஜாதியில் தப்பில்லை;அதனால் த்வேஷமிருப்பதுதான் தப்பு'என்பதைப் புரிந்து கொள்ளாமல், எலி இருக்கிறது என்பதற்காக வீட்டையே கொளுத்தினமாதிரி இப்போது ஜாதியையே எடுத்துவிட வேண்டும் என்று ஆரம்பித்ததில் பழைய நல்ல தொழில் பிரிவினையும், திருப்தியும், சாந்தமும், அடக்கமும், ஸமூஹ ஸெளஜன்யமும் பாழானது தவிர, த்வேஷம் நன்றாகக் கப்பும் கிளையுமாக வளர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இப்போதாவது விழித்துக் கொண்டு 'அழியணும்'என்கிற எண்ணத்தை விட்டுவிட்டு, 'பக்தி வளரணும்''சகலரும் ஒன்று சேர்ந்து பண்ணுகிற சமூகத் தொண்டுகள் வளரணும்'என்று முயற்சி செய்ய ஆரம்பித்தால், ஜாதி த்வேஷம் என்பதை ignore (அலக்ஷ்யம்) பண்ணினதாகிவிடும். அதை ரொம்பவும் லக்ஷ்யம் பண்ணி, எதிர்ப்புச் சண்டை போட்டால்தான் அதுவும் பதிலுக்குப் பதில் ஜாஸ்தி வீரியம் அடைகிறது!இப்படிச் செய்யாமல் மற்ற நல்ல விஷயங்களிலேயே கவனத்தைச் செலுத்தி அதை ignore செய்தோமானால், தானே இருந்த இடம் தெரியாமல் போய்விடும். 'மருந்து சாப்பிடுகிறபோது குரங்கை நினைத்துக் கொள்ளாதே' என்றால் தப்பாமல் அந்தக் குரங்கு நினைவுதான் ஒவ்வொரு தரமும் மருந்தை எடுக்கிற போது வரும் என்கிற மாதிரி, "ஜாதி ஜாதி என்று த்வேஷம் கூடாது"என்று சொல்கிற போதே ஜாதியினால் உயர்வு தாழ்வு உணர்ச்சியையும் ஞாபகப்படுத்திக் கொண்டேதான் போகிறோம்!
அதனால் ஸகல ஜாதியாரும் சேர்ந்து கோயில் திருப்பணி, அல்லது தூர்ந்த ஏரியில் மண் வாருவது என்கிற மாதிரியான பெரிய காரியங்களை எடுத்துக் கொண்டு, ஒயாமல் பொதுத் தொண்டுகளில் ஈடுபட்டிருந்தால் தன்னால் அன்பும் ஸமூஹ ஸெளஜன்யமும் ஏற்பட்டுவிடும். இப்போது காரியம் இல்லாமிருப்பதால்தான் எதையாவது நினைத்துக் கொண்டிருக்கத் தோன்றுகிறது. இதிலிருந்துதான் விதண்டாவாதம், வம்பு, தும்பு, 'ஒழிக'சண்டை எல்லாம் உண்டாகின்றன. 'ஒரு சண்டை பூசல் என்று கிளப்பி விட்டால்தான் ஸ்வாரஸ்யமாயிருக்கிறது. கிளர்ச்சி ஆர்ப்பாட்டம், புரட்சி என்று கிளப்பிவிட்டால்தான் தங்களைச் சுற்றி 'ஜே'போடப் பத்துப் பேர் செல்கிறார்கள் என்பதால் இம்மாதிரி செய்கிறார்கள். இதற்கெல்லாம் பொழுதேயில்லாதபடி காரியங்களில் ஈடுபட்டிருந்தால் எல்லாம் சரியாகி சாந்தமாகிவிடும். தொண்டைத் தண்ணீர் வற்ற 'ஒழிக'கூச்சல் போட்டுக் கொண்டு, கால் வலிக்க ஊர்வலம் வருவதற்குப் பதில் இந்த man-power- ஐ (மனித சக்தியை) ஏதாவது ஆக்கரீதியான திசையில் திருப்பி விட்டால் எத்தனையோ வளர்ச்சி ஏற்படும். எல்லாவற்றையும் விடப் பெரிய வளர்ச்சி ஸமஸ்த ஜனங்களிடையும் உண்டாகிற அன்புதான்.
அநுஷ்டானங்கள் பண்ணுவது, கோவிலுக்குப் போவது, உபந்நியாஸத்துக்குப் போவது. லீவு நாளானால் ஸகல ஜாதியாரும் சேர்ந்து நாள் முழுக்க தெய்வப்பணி, ஸமூஹப் பணி செய்வது என்று 'டைட்'டாக டைம் டேபிள் போட்டுக் கொண்டு பண்ண ஆரம்பித்துவிட்டால் இந்த 'ஒழிக', 'வீழ்க' வுக்கெல்லாம் அவகாசமேயில்லாமல் எல்லாரும் வளர்ந்து வாழ்ந்து கொண்டிருப்பார்கள். ஜாதியில் உயர்வு-தாழ்வு நிச்சயமாக இல்லை. மகான்கள் - அப்பர், நம்மாழ்வார், சேக்கிழார், நந்தனார், கண்ணப்பர் மாதிரியானவர்கள் - எந்த ஜாதியிலும்தான் தோன்றியிருக்கிறார்கள். ஆசார்யாளே கண்ணப்பரை ('சிவானந்த லஹரி') யில் ஸ்தோத்திரம் பண்ணியிருக்கிறார். எவனொருவனும் தான் இன்னொருவனைக் காட்டிலும் உசந்தவன் என்று நினைக்கிறதே பாபம் என்று சாஸ்திரங்களில் சொல்லியிருக்கிறது. மஹான்களும் இப்படித்தான் நமக்கு வழிகாட்டியிருக்கிறார்கள். "நாயினும் கடையேன்", 'நாயடியேன்'என்றெல்லாந்தான் அவர்கள் தங்களைச் சொல்லிக் கொள்கிறார்கள். இந்த மனப்பான்மை சுதந்திர யுகத்தில் போய்விட்டதுதான் கோளாறு. பழைய அடக்க மனோபாவம் நமக்கு வரவேண்டும். வந்து விட்டால் காரியத்தில் ஜாதி இருக்குமே தவிர, மனஸில் எள்ளளவும் பேதம் இராது.
வாழ்க்கை முறையிலும் பொருளாதார ரீதியிலும் பேதம் இல்லாமல் எல்லாரும் எளிமையாக இருந்து விட்டால் கொஞ்சம் கூடப் பொறாமை, வயிற்றெரிச்சல் இருப்பதற்கு இடமில்லாமல் போகும். அந்த மாதிரி நிலையை உடனே ஏற்படுத்துவதற்கான தைரியமும், தியாக புத்தியும் நமக்கு இருந்தாலும் இல்லா விட்டாலும், அப்படிப்பட்ட ஒரு ideal- ஐயாவது (லக்ஷ்ய நிலையையாவது) நாம் புரிந்து கொண்டால், கொஞ்சம் கொஞ்சமாக வழி திறக்க இடமுண்டாகும். இதற்குப் பராசக்தி அநுக்ரஹம் செய்ய வேண்டும்.