16. புடவை கேட்ட புதிர்!(இன்னிசை வெண்பா)
ஆந்திராவில் காஞ்சிமுனி சஞ்சரித்த காலத்தில்
நேர்ந்தவோர் சம்பவம் நெஞ்சை நெகிழ்விக்கும்!
சின்னச் சிலையாகச் சிங்காரக் காமாட்சி
அன்னவர் பூசையில் அன்று. ... 1
அந்தச் சமயம் அணங்கொருத்தி யெங்கிருந்தோ
கந்தற் புடவையுடன் சத்தமிட்டு வந்தாள்
’எனக்குப் புடைவைகொடு!’ என்றவள் கூவ
அனைவரும் அஞ்சினர் பார்த்து. ... 2
புடவை பழையதாய் ஒன்று அவள்மீ(து)
இடது முழங்காலில் மேலே கிழிந்தே!
மடத்தார் அவளை அகற்றமுயன் றாரே
தடைப்படும் பூசையே என்று. ... 3
அமைதியுடன் கையமர்த்தி ஆரவாரம் ஓய
சுமையிலா ஞானி புதுப்புடவை கொண்டுவரப்
பெற்றவர் தட்டினில் சேலை பழம்தரப்
பெற்றவள் சென்றாள் விரைந்து. ... 4
சீடர் ஒருவருக்கு ஏதோவோர் சந்தேகம்
ஆடவள் பின்சென்று பார்க்க முயன்றார்
தயங்கியே சென்றவர் கன்னமறை வாங்கி
மயங்கித் தரைவிழுந் தார். ... 5
பின்னவர் வந்தபோது ஆசான் புதிரவிழ்த்தார்
’என்னவென்று சென்றாயோ? அம்பாள்டா!’ கைவிரல்
அந்தச் சிலையுடுத்த ஆடையைக் காட்டிட
கந்தலைக் கண்டனர் அங்கு! ... 6
--ரமணி, 05/11/2013, கலி.19/07/5114
உதவி:
periva.proboards.com/thread/5658/*****