Post by uma2806 on Oct 30, 2013 12:14:01 GMT 5.5
எங்கேயும் வியாபிக்கும் பேரருள்
1956ம் வருடம் ஒரு டாக்டருக்கு ஏற்பட்ட அபூர்வ அனுபவம். அவர் இந்திய ராணுவத்தில் மெடிக்கல் ஆபீஸராக பணியாற்றியவர். ஜப்பானை எதிர்த்து பர்மாவில் போர் நடந்தபோது அங்கே பாதிக்கப்பட்ட சிப்பாய்களுக்கு சிகிச்சை அளிக்கும் பணி புரிந்தார்.
அப்படி இவர் போர் களத்திலிருந்த சமயம் ஒரு குண்டு இவரையும் தாக்கியதில் மயக்கமுற்று விழுந்து விட்டார். நினைவின்றி விழுந்து கிடந்தவர் தான் ஒரு முதல் உதவி ஆஸ்பத்திரியில் படுத்துக் கொண்டிருப்பதை உணர்ந்தார். உடனே தன் கீழ் வேலை செய்த ஒரு சிப்பாயிடம் என்ன நடந்தது என்று கேட்டார்.
அவனோ படிப்பறிவில்லாதவன். டாக்டருக்கு உதவி செய்ய அனுப்பப்பட்டவன். ஆனால் டாக்டர் மயக்கமடைந்து விழுந்ததும் நிலை குலைந்து நின்றுவிட்டான்.
என்ன செய்வதென்று புரியாமல் நின்று கொண்டிருந்தவன் முன் ஒரு சந்யாசி, காவி உடையுடன் தோன்றினாராம். “ஏன் இப்படி ஒண்ணும் செய்யாம நிக்கறே… உடனே டாக்டரை உன் தோளில் தூக்கிக் கொண்டு பக்கத்தில் இருக்கும் ஆஸ்பத்திரிக்கு ஓடு” என்று சொல்லி மறைந்து விட்டாராம்.
உடனே ஒரு உத்வேகத்துடன் அந்த சிப்பாயும் டாக்டரை கொண்டுவந்து சேர்த்ததாகக் கூறினான். ஏதோ படிப்பறிவில்லாதவன் கூறுகிறான் என்று டாக்டர் அலட்சியமாக இருந்து விட்டார்.
சில மாதங்களில் இவர் பூர்ண குணமானார். போர் முடிந்ததும் ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாளை தரிசிக்க வந்தார்.
ஸ்ரீபெரியவாளிடம் அந்த சிப்பாய் சொன்ன அபூர்வ நிகழ்ச்சியை கூறலாமென்று தோன்ற டாக்டர் மெதுவாக ஆரம்பித்தார். “எனக்குப் போர்களத்திலே குண்டடி பட்டு மயக்கமா விழுந்துட்டேன்” என்று தொடங்கி மற்றவைகளை சொல்வதற்கு முன் சர்வ வ்யாபியான ஈஸ்வரர் முந்திக் கொண்டவராய், “எனக்குத் தெரியுமே…. நானே அங்கு வந்திருந்தேனே… நீ என்னைப் பார்க்கல்லே” என்றதும் டாக்டருக்குப் பெரும் திகைப்பு! அடடா! அந்த சிப்பாய் சொன்னது அத்தைனையும் உண்மை என்பது புரிந்தது. எங்கும் நிறை பிரம்மமாய் ஸ்ரீமஹாபெரியவா வியாபித்தருளி தன்னைக் காப்பாற்றியுள்ளதையும் அதை அந்த ஈஸ்வரரே சாட்சி சொல்லி மெய்ப்பித்து அருளியதையும் உணர்ந்து உருகினார்.
அந்த மிலிடரி டாக்டர் இந்த மெய்சிலிர்க்க வைக்கும் சம்பவத்தை கண்களில் நீர் வழிய விவரித்ததாக டாக்டர் கல்யாணராமன் கூறுகிறார்.
இப்பேற்பட்ட பெருங்கருணை தெய்வத்தின்மேல் நாம் கொள்ளும் பூர்ண சரணாகத பக்தி நம்மையெல்லாம் சகல தோஷங்களிலிருந்து விடுபடச் செய்து எல்லா நலன்களையும் ஈந்து சகல சௌபாக்யங்களுடனும், சர்வ மங்களங்களுடனும் காப்பாற்றி அருளும் என்பது சத்தியம்!
ஜெய ஜெய சங்கர! ஹர ஹர சங்கர!!