|
Post by Kanchi Periva on Sept 3, 2013 8:31:02 GMT 5.5
பிரமிக்கவைக்கும் பெரியவாளின் தமிழ் Source: Email message forwarded by our respected member Sri G Vaidyanathan தமிழ் மொழியிலே பெரியவாளுக்கு இருந்த பேரறிவு முத்தமிழ்க் காவலர்களையெல்லாம் பிரமிக்க வைக்கிறது. ஒரு முறை கி.வா.ஜ-விடம், "தமிழ் என்றால் என்ன?" என்று கேட்டார். மேலும் "சமஸ்கிருதம் என்றால், செம்மை செய்யப்பட்ட மொழி என்று அர்த்தம்! அப்படி தமிழுக்கு ஏன் அந்தப் பெயர் வந்தது சொல்லுங்கள்!" என்கிறார். கி,வா.ஜ. அடக்கமாக,"பெரியவா சொன்னால் தெரிந்து கொள்கிறேன்!" என்றார் "எந்த மொழியிலும் இல்லாத சிறப்பான எழுத்து 'ழ' என்பது இந்த எழுத்து வரக் கூடிய எந்தச் சொல்லும், அழகு,இனிமை அவற்றைக் குறிப்பதகாவே இருக்கும். மழலை, குழல், அழகு, குழந்தை,கழல்,நிழல்,பழம்,யாழ் இப்படி 'ழ' வருகிற எல்லாமே நமக்குப் பிடித்தவை. ஆகவே இனிமையான 'ழ'வைத் தம்மிடத்தில் உடையது 'தமிழ்' (தமி+ழ்) என்று சொல்லலாமா" என்கிறார். உடனே கி.வா.ஜ., "இதைவிடப் பொருத்தமாக சொல்ல முடியுமா? இனி எல்லா மேடைகளிலும் நான் இதைச் சொல்லுவேன்!"என்றாராம். சீர்காழிப் பதிகத்தில் நற்றமிழ் வல்ல ஞானசம்பந்தர் பாடியிருக்கும் "யாமா மாநீ யாமா மா" என்ற மாற்றுமாலைப் பதிகம் மிகவும் கடினம். அவற்றுள் ஒன்றைப் பெரியவா எடுத்து, மிகவும் கடினமான அந்தப் பதிகத்தைப் பிரித்துப் பிரித்து மிக எளிமைப்படுத்திப் பொருள் சொன்னார். பெரிய வித்வான்கள் பிரமித்துப் போனார்கள். அதுபோல் காளமேகப் புலவர் பாடிய பாடலில் ஒன்று, முக்கால்,அரை,கால், அரைக்கால்,இருமா,மாகாணி,ஒருமா,கீழரை என்று குறைந்துகொண்டே வரும் அளவுகளை வைத்து எழுதுகிறார், தெரியுமா?" என்று கேட்டு, முக்காலுக்கு ஏகாமல் முன்னரையில் வீழாமுன் அக்கா வரைக்கால் கண்டு அஞ்சா முன் விக்கி இருமாமுன், மாகாணிக்கேகாமுன் கச்சி ஒருமாவின் கீழரை இன்றோது.... என்ற பாட்டை பெரியவா எடுத்துக் காட்டுகிறார். அதன் பொருளையும் தனக்கே உரிய முறையில், "முக்கால்னா மூன்று கால்கள். வயதான் பின் இரண்டு காலில் நடக்கத் தள்ளாடி ஒரு தடியை மூன்றாவது காலாகப் பயன்படுத்துகிறோமே.....அந்த நிலை வருவதற்குள், முன்னரையில் வீழாமுன்...நரை வருவதற்கு முன்னாலே விக்கலும் இருமலும் வருவதற்கு முன்.... யமனுடைய காலடி நம்மை அணுகுவதற்கு முன்.....ஊருக்கு வெளியிலுள்ள மாகாணி என்ற சுடுகாட்டுக்குப் போகும் முன்...காஞ்சியில் ஒரு மாமரத்தின் கீழ் உள்ள ஏகாம்பரேசுவரரை இன்றைக்கே துதிப்பாய்!" என்று மிக அழகாக விளக்குகிறார். மேலும் "என்ன அழகு பார்த்தேளா! ஏகாம்பரரை, அந்த ஒன்று என்ற எண்ணுக்குக் கீழேயே கொண்டுவந்து கீழரை வரை எட்டு அளவுகளையும் கோத்துத் துதித்திருக்கிறாரே!" என்று சொல்லிச் சொல்லி மகிழ்ந்தார். எதையுமே இப்படி விளக்கமாகப் பொழிந்து தள்ளியதைக் கேட்டவர்கள் பாக்யசாலிகள்!!
|
|
|
Post by saidevo on Sept 4, 2013 8:55:34 GMT 5.5
14. தமி நிற்கும் ழகரம் (அறுசீர் விருத்தம்: விளம் விளம் தேமா விளம் விளம் தேமா) முத்தமிழ்க் காவல ரெல்லாம் மூக்குமேல் அங்குலம் வைத்த வித்தகம் தமிழினில் காட்டி பெரியவர் வியப்புறச் செய்வார் இத்தமிழ் இப்பெயர் எங்ஙன் பெற்றது தெரியுமா என்றார் அத்தனைத் தமிழும் ஆய்ந்த கிவாஜகந் நாதனி டத்தே. அருமறை சமஸ்கிரு தம்பேர் அழகுறச் செய்வதா லன்றோ? பொருளெனத் தமிழ்மொழி பேரில் இருப்பதி யாதெனக் கேட்டார். பெரியவா சொல்வதென் றால்நான் தெரிந்துகொள் வேனென பக்தர் அருமையா யெளிமையாய்ச் சொன்னார் பணிவுடன் திருமுகம் நோக்கி. எம்மொழி யிலுமிலாச் சீர்மை யெழுத்தென ழகரமா யிங்கு நம்மொழி தமிழ்மொழிப் பேரில்! நலமெழில் இனிமையா மர்த்தம்! அம்மொழிச் சொற்களின் பாங்கு! குழந்தைம ழலைப்பழம் யாழே! தமியெனும் ழகரவெ ழுத்தால் தமிழ்-எனும் பெயர்வரக் காணீர்! [தமி = ஒப்பற்றது, தனித்து நிற்பது--unique] அதன்பினே பெரியவர் யாமா* மாலைமாற் றுப்பதி கத்தைப் பதம்பிரித் துப்பொருள் சொன்னார் பதங்களை எளிமையில் தோய்த்தே கதம்பமாய்ப் பாடிய காளி தாசனின் காலரைச்* செய்யுள் இதம்விரி விதங்களைச் சொல்லி அதனழ கினிமையி லாழ்ந்தார். பெரியவர் பொழிவினைக் கேட்ட பெருமொழிப் புலமையோ ரெல்லாம் அரியதோர் பேறினைப் பெற்ற அருமையில் களிப்புடன் சென்றார் பொருந்திடும் தமிழ்மொழிப் பேரின் பொருளினைக் கிவாஜகந் நாதன் பெருமையா யினிவரும் மேடைப் பேச்சிலே விளக்குவே னென்றார். --ரமணி, 03/09/2013, கலி.18/05/5114 குறிப்பு: 1. யாமா மாலைமாற்றுப் பதிகம்: யாமாமாநீ யாமாமா யாழீகாமா காணாகா காணாகாமா காழீயா மாமாயாநீ மாமாயா. --திருஞானசம்பந்தர், சீகாழிப் பதிகம், முதல் பாடல் [பொருள்: thevaaram.org/thirumurai_1/onepage.php?thiru=3&Song_idField=31170]2. காளிதாசனின் காலரைச் செய்யுள் முக்காலுக் கேகாமுன் முன்னரையில் வீழாமுன் அக்கா லரைக்கால்கண் டஞ்சாமுன் - விக்கி இருமாமுன் மாகாணிக் கேகாமுன் கச்சி ஒருமாவின் கீழரையின் றோது. [பொருள்: www.visvacomplex.com/BinnanggaLin_Pinnal_Paattu.html]3. உதவி: www.periva.proboards.com/thread/5056/groups.google.com/forum/#!topic/sathvishayam/v1O7mK62X2I *****
|
|
|
Post by uma2806 on Sept 4, 2013 12:24:41 GMT 5.5
யாமா மாலைமாற்றுப் பதிகத்தின் பொருள் விளக்கம் தந்தால் அறிந்து கொள்வோம்.. ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர!
|
|
|
Post by saidevo on Sept 5, 2013 9:07:03 GMT 5.5
முன்கொடுத்த சுட்டி 'கட்டுமானப் பணியில்' இருப்பதால் இன்னொரு சுட்டி, பொருளறிய: 365paa.wordpress.com/2011/07/30/025/யாமா மாலைமாற்றுப் பதிகத்தின் பொருள் விளக்கம் தந்தால் அறிந்து கொள்வோம்.. ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர!
|
|
|
Post by kahanam on Sept 5, 2013 18:57:24 GMT 5.5
நன்றி:thevaaram.org
யாமா மாலைமாற்றுப் பதிகம்: --திருஞானசம்பந்தர், சீகாழிப் பதிகம்
பாடல் எண் : 1 யாமாமாநீ யாமாமா யாழீகாமா காணாகா காணாகாமா காழீயா மாமாயாநீ மாமாயா.
பொழிப்புரை :
ஆன்மாக்களாகிய நாங்கள் கடவுளென்றால் அது பொருந்துமா? நீயே ஒப்பில்லாத கடவுளென்றால் அது முற்றிலும் தகும்.
பேரியாழ் என்னும் வீணையை வாசிப்பவனே! யாவரும் விரும்பத்தக்க கட்டழகனே! பகைப்பொருள்களும் சிவனைச் சாரின் பகை
தீர்ந்து நட்பாகும் என்ற உண்மையினை யாவரும் காணுமாறு பாம்புகளை உடையவனே. கை, கால் முதலிய அவயவங்கள்
காணா வண்ணம் காமனை அருவமாகச் செய்தவனே. சீகாழி என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுபவனே. இலக்குமியின்
கணவனான திருமாலாகவும் வருபவனே! மாயை முதலிய மலங்களிலிருந்து எம்மை விடுவிப்பாயாக!.
குறிப்புரை :
யாம் - ஆன்மாக்களாகிய நாங்கள் கடவுளென்றால். ஆமா - அதுபொருந்துமா? நீ - நீயே கடவுளென்றால். ஆம் ஆம் - முற்றிலும்
தகுவதாகும். (ஏகான்மாவாதிகளை மறுத்தது.) மாயாழீ - பேரியாழ் என்னும் வீணையை வாசிப்பவனே. (\"எம்மிறை நல்வீணை
வாசிக்குமே\" என்பது அப்பர் திருவிருத்தம்) காமா - யாவரும் விரும்பத்தக்க கட்டழகனே. காண் - (தீயவும் நல்லவாம் சிவனைச்
சேரின் என்பதை யாவரும்) காணுமாறு பூண்ட. நாகா - பாம்புகளை யுடையவனே. காணாகாமா - கை, கால் முதலிய
அவயவங்கள் காணாதனவாச் செய்தகாமனையுடையவனே. (காமனை யுருவழித்தவனே.) சினைவினை முதன்மேல் நின்றது.
காழீயா - சீகாழிப்பதியில் எழுந்தருளியிருப்பவனே. மாமாயா - இலக்குமிக்குக் கணவனான திருமாலாகவும் வருபவனே (நான்க
னுருபும்பயனும் தொக்க தொகை) \"நாரணன்காண் நான்முகன்காண்\" என்பது திருத்தாண்டகம். மா - கரியதாகிய. மாயா -
மாயைமுதலிய மலங்களினின்றும். நீ - எம்மை விடுவிப்பாயாக. மலம்கரியதென்பதை \"ஒருபொருளுங் காட்டாது இருளுருவம்
காட்டும், இரு பொருளும் காட்டாதிது\" என்னும் திருவருட்பயனாலறிக. (இருண்மலநிலை. 3) மாயா - வடசொல், உபலட்சணம்.
பாடல் எண் : 2
யாகாயாழீ காயாகா தாயாராரா தாயாயா யாயாதாரா ராயாதா காயாகாழீ யாகாயா.
பொழிப்புரை :
வேள்வி வடிவினனே. யாழ் வாசிப்பவனே. அடியார்கட்கு அருள வரும்பொழுது உருவத்திருமேனி கொள்பவனே. சங்கார
கருத்தாவே. அனைத்துயிர்க்கும் தாயானவனே. ஆத்திப்பூ மாலை அணிந்துள்ளவனே. தாருகாவனத்து முனிபத்தினிகளாகிய
மகளிர் கூட்டத்தை வேட்கையுறும்படி செய்தவனே. சீகாழி என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுபவனே. துன்பங்கள்
எவற்றினின்றும் எம்மைக் காப்பாயாக.
குறிப்புரை :
யாகா - யாகசொரூபியே. யாழீ - யாழ்வாசிப்பவனே. காயா - அடியாருக்கு அருள வருகையில் உருவத்திருமேனி கொள்பவனே.
காதா - சங்காரகருத்தாவே. காதுதல் - கொல்லுதல். வடசொல். யார் ஆர் - எவரெவருக்கும். ஆ - (பெற்றவள்) ஆகும். தாய்
ஆயாய் - தாயானவனே. (ஆ + தாய் = வினைத்தொகை) ஆயா - ஆராய முடியாத. தார் - மாலை. ஆர் ஆயா - ஆத்திப்பூவாகக்
கொண்டவனே. (சிவனுக்குரிய மாலைகளில் திருவாத்தியும் ஒன்று) தாக ஆயா - காதல் கொண்ட முனிபத்தினிகளாகிய
மகளிர்கூட்டத்தை யுடையவனே (தாக ஆயன் குளாம்பல், மராடி என்பது போற்கொள்க) காழீயா ! யா - துன்பங்கள்
எவற்றினின்றும் கா - எம்மைக் காப்பாயாக.
பாடல் எண் : 3
தாவாமூவா தாசாகா ழீநாதாநீ யாமாமா மாமாயாநீ தாநாழீ காசாதாவா மூவாதா.
பொழிப்புரை :
அழியாத மூப்பிலாத தசகாரியத்தால் அடையும் பொருளாக உள்ளவனே. சீகாழி என்னும் திருத்தலத்து முதல்வனே. எல்லோரும்
அஞ்சி நீங்குகின்ற சுடுகாட்டில் நள்ளிரவில் நடனமாடும் நாதனே. மாண்புமிக்கவனே. ஐராவணம் என்னும் யானையின் மேல் ஏறி
வருபவனே. கொடையில் கடல் போன்றவனே. சாவினின்றும் எங்களைக் காத்தருள்வாயாக. ஒளியுடைய மாணிக்கம்
போன்றவனே. வேண்டும் வரங்களைத் தந்தருள்வாயாக. எங்கள்முன் எழுந்தருள் வாயாக. முன்னைப் பழம்பொருளே. காற்று
முதலான ஐம்பூதங்களின் வடிவானவனே!
குறிப்புரை :
தாவா - அழியாத. மூவா - மூப்பில்லாத (என்றும் இளமையாய் உள்ள) தாசா - தசகாரியத்தால் அடையும் பொருளாக உள்ளவனே.
காழீநாதா - சீகாழிக்குத்தலைவனே! நீ - எவரும் சஞ்சரிப்பதற்கு அஞ்சி நீக்குகின்ற, யாமா - நள்ளிரவில் நட்டம் பயின்றாடும்
நாதனே. மா - பெருமை வாய்ந்தவனே! (பண்பாகு பெயர்) மா - ஐராவணமாகிய யானையின்மேல், யா நீ - ஏறி வருபவனே!
தானாழி - (தான + ஆழி) = கொடையில் கடல் போன்றவனே. சா - சாவதினின்றும். கா - காப்பாற்றுவாயாக. காசா - இரத்தினம்
போன்ற ஒளியை உடையனே! தா - கேட்டவரங்களை எல்லாம் தருவாயாக. வா - என் முன் எழுந்தருள்வாயாக. மூ -
எவற்றினும் முன்னே தோன்றிய. வாதா - காற்று முதலாக உள்ள ஐம்பூத வடிவாய் உள்ள. தாவா மூவா இத்தொடர்க் கருத்து.
\\\"சாவா மூவாச் சிங்கமே\\\" எனச் சிறிது மாறி அப்பர் வாக்கில் வருவது காண்க. தசகாரியமாவது:- தத்துவரூபம்; தத்துவதரிசனம்;
தத்துவ நீக்கம்; ஆன்மரூபம்; ஆன்மதரிசனம்; ஆன்மநீக்கம்; சிவரூபம்; சிவதரிசனம்; சிவயோகம்; சிவபோகம் என்பன. (சுத்திக்கு
நீக்கம் என்று கொண்டார் இக்குறிப்புரை எழுதினவர்.) யாநம் - வடசொல். மா - இங்கு இரண்டாயிரம் கொம்புகளை உடைய
ஐராவணத்தைக் குறித்தது. தான + ஆழி - தீர்க்கசந்தி. கருணைக்கடல் என்றது போல் கொடைக்கடல் என்றார். காசா:-
`மழபாடியுள் மாணிக்கமே\\\' என்ற சுந்தரமூர்த்திகள் வாக்கால் அறிக. வாதம் - காற்று. உப இலக்கணத்தால் ஏனைய
பூதங்களையும் தழுவிற்று. இலக்கணக்குறிப்பு : மூவாத்தாசா என்று மிக வேண்டியது இயல் பாயிற்று. காரணம் வருமொழித்
தகரம் வடமொழியின் மெல்லோசை உடைத்து ஆதலின். தாசன் - தத்திதாந்த பதம்.
பாடல் எண் : 4
நீவாவாயா காயாழீ காவாவானோ வாராமே மேராவானோ வாவாகா ழீயாகாயா வாவாநீ.
பொழிப்புரை :
என்றும் மாறுதலில்லாத மெய்ப்பொருளானவனே. தாங்கிய வீணையை உடையவனே. கொடிய பிறவித் துன்பம் எங்களை
அடையாவண்ணம் வந்து காத்தருள்வாயாக. விண்ணிலுள்ள தேவர்கள் துன்பம் அடையாதவாறு மேருமலையை வில்லாக ஏந்தி
முப்புரங்களை அழித்தவனே. சீகாழி என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருள்பவனே, ஆகாய சொரூபியே! நீ விரைந்து
வருவாயாக! அருள் புரிவாயாக.
குறிப்புரை :
நீவா - என்றும் மாறாத. வாயா - உண்மைப் பொருளானவனே. கா - தாங்கிய. யாழீ - வீணையினையுடையவனே.
வான்நோவாராமே - கொடிய பிறவித் துயரம் எம்மை எய்தாமல், காவா - (காகா) வந்து காத்தருள்வாயாக, வான் - தேவர்கள்.
நோவாவா - துன்பமடையாவாறு. மேரா - மேரு மலையை ஏந்தியவனே. காழீயா - சீகாழிப் பதியுள் எழுந்தருளியுள்ளவனே. காயா
- ஆகாய சொரூபியே. வாவா நீ - நீ விரைந்து வருவாயாக. வாய் - உண்மை. காயாழி - வினைத்தொகை. வான் நோ நல்ல பாம்பு
என்பதைப்போல. வான் - கொடுமையின் மிகுதி என்னும் பொருளில் வந்தது. காயா - முதற்குறை. வாவா - அடுக்கு; விரைவுப்
பொருட்டு.
பாடல் எண் : 5
யாகாலாமே யாகாழீ யாமேதாவீ தாயாவீ வீயாதாவீ தாமேயா ழீகாயாமே லாகாயா.
பொழிப்புரை :
யாவற்றுக்கும் கால கர்த்தாவாக விளங்குபவனே. எப்பொருளிலும் எள்ளில் எண்ணெய் போன்று உள்ளும், புறம்பும் ஒத்து
நிறைந்திருப்பவனே! சீகாழி என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருள்பவனே! அறிவில் மேம்பாடு உடையவனே! அனைத்
துயிர்கட்கும் தாயாகவும், உயிராகவும் உள்ளவனே! என்றும் அழிவில்லாதவனே! இன்குரல் எழுப்பும் கின்னரம் முதலிய
பறவைகள் தன்னருகின் வந்து விழும்படி வீணைவாசிப்பவனே. யாங்கள் மேற்கொண்டு ஆவனவற்றிற்கு ஆராயாதவாறு
எங்களைக் காத்தருள் வாயாக!.
குறிப்புரை :
யா - எவையும் வணங்கத்தக்க. யா - எவற்றிற்கும். காலா - கால வடிவமாக உள்ளவனே. மேயா - எவற்றினுள்ளும் எள்ளில்
எண்ணெய் போல் வியாபித்து இருப்பவனே. மேதாவீ - அறிவில் மேம்பட்டவனே. தாய் ஆவி - எவ்வுயிருக்கும் தாயாகவும்
உயிராகவும் உள்ளவனே. வீயாதா - என்றும் அழிவில்லாதவனே. வீ - கின்னரம் முதலிய பறவைகள் (தாம் - அசை) மே -
தன்னருகில் வந்து விழும்படியாக. யாழீ - வீணைவாசிப்பவனே. யாம் - நாங்கள் மேல் - மேற்கொண்டு. ஆகு - ஆவனவற்றிற்கு.
ஆயா - ஆயாதவாறு. கா - எம்மைக் காப்பாயாக (இலக்கணக்குறிப்பு) காலதத்துவமாக உள்ளவன் சிவபெருமானே என்பது
\\\"காலமே உனை என்று கொல் காண்பதே\\\" (திருவாசகம்) ஆயா - ஈறு கெட்ட எதிர் மறைவினை எச்சம். ஈற்றுத் தொடரில்
ஆய்தலாவது. \\\"மண்மேல் யாக்கை விடுமாறும் வந்துன் கழற்கேபுகுமாறும் அண்ணா எண்ணக் கடவேனோ\\\" என்பது
(திருவாசகக்(தி.8) கருத்து) வீதாமேயாழி - யாழிசையிற் பறவைகள் வந்து வீழ்வதைக் காந்தருவதத்தையார் இலம்பகத்தாலும்
அறிக. யாழீ - என்பதற்கு \\\"குழலன்கோட்டன்\\\" என்ற திருமுருகாற்றுப் படை(தி.11)க்கு நச்சினார்க்கினியர் உரைத்தது உரைக்க.
பாடல் எண் : 6
மேலேபோகா மேதேழீ காலாலேகா லானாயே யேனாலாகா லேலாகா ழீதேமேகா போலேமே.
பொழிப்புரை :
மார்க்கண்டேயரின் உயிரைக் கவர வந்த காலனைக் கடுங்குரலால் கண்டித்தவரே. உம் திருவடியால் அவனை உதைத்து
அக்காலனுக்குக் காலன் ஆகியவரே. பொருந்திய சனகர் முதலிய நால்வர்க்கும் சிவகுருவாகிக் கல்லால மரத்தின் கீழ் உபதேசித்து
மெய்யுணர்வு பெறச் செய்தவரே. சீகாழி என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளும் பரம்பொருளே. மேகத்தை வாகனமாகக்
கொண்டருளியவரே. அடியேங்கள் உம் திருக்கூட்டத்தில் ஒருவர் போல் ஆவோம்.
குறிப்புரை :
மேலேபோகாமே - மார்க்கண்டேயர் மீது எமன் போகாமல். தேழீ - கடுங்குரலால் உரப்பினவனாய். காலாலே - காலினாலே. கால்
ஆனாயே - (அவ்வெமனுக்கு) காலன் ஆனவனே. ஏல் - பொருந்திய. நால் - சனகர் முதலிய நால்வருக்கும். ஆகி - குருவாகிய.
ஆல் - கல்லால மரத்தில். ஏலா - ஏற்றவனே. காழீதே - சீகாழியிலுள்ள தெய்வமே. மேகா - (திருமால் மேகவடிவங்கொண்டு
வாகனமாகி நிற்க) அந்த மேகத்தை வாகனமாகக் கொண்டருளியவனே. போலேமே - யாங்கள் உமது பல்கணத்தில் ஒருவராக
எண்ணப்படுதற்கு அத்திருமாலை ஒத்திலோமோ?
பாடல் எண் : 7
நீயாமாநீ யேயாமா தாவேழீகா நீதானே நேதாநீகா ழீவேதா மாயாயேநீ மாயாநீ.
பொழிப்புரை :
உன்னைவிட்டு நீங்குதலில்லாத உமாதேவியை உடையவனே! ஒப்பற்ற தாயானவனே! ஏழிசை வடிவானவனே! நீயே வலிய
எழுந்தருளி எங்களைக் காத்தருள்வாயாக! பேரன்பு வாய்ந்த நெஞ்சத்தை இடமாக உடையவனே. சீகாழி என்னும் திருத்தலத்தில்
வீற்றிருந்தருளும், வேதங்களை அருளிச்செய்து வேதங்களின் உட் பொருளாக விளங்குபவனே. எங்களைக் கொல்லவரும்
துன்பங்களை நீ கொன்று அருள்செய்யாயோ?
குறிப்புரை :
நீயா - (உம்மை) நீங்குதல் அறியாத மாநீ (மானீ) - உமா தேவியை உடையவனே. ஏயா - ஒப்பற்ற. மாதா - தாயே. ஏழீ - ஏழிசை
வடிவாய் உள்ளவனே. காநீதானே - நீயே வலியவந்து என்னைக் காப்பாயாக. நே - அன்பார்ந்த இடத்தை. தாநீ - இடமாக
உடையவனே. காழிவேதா - சீகாழியில் எழுந்தருளியுள்ள வேத சொரூபியே. மாய் - எம்மைக்கொல்லும். ஆநீ - துன்பங்களை. நீ
மாயாயே - நீ கொல்ல மாட்டாயா? மான் - மானைப்போன்றவர். மாநீ - மானை உடையவன். ஏழீ - ஏழ்தொகைக் குறிப்பாக
இசையை உணர்த்தியது. \\\"ஏழிசையாய் இசைப்பயனாய்\\\" சுந்தரமூர்த்திகளின் வாக்கினாலும் அறிக. காநீதானே - `அழையாமே
அருள் நல்குமே\\\' என்னும் திருவோத்தூர்த் திருப்பதிகத்தில் நம் அடிகளார் கூறினமை காண்க. தாநீ - தானத்தை (இடத்தை
உடையவனே) எங்களைக் கொல்லும் துன்பத்தை நீ கொல்லமாட்டாயா? என்பது ஓர் நயம்.
பாடல் எண் : 8
நேணவராவிழ யாசைழியே வேகதளேரிய ளாயுழிகா காழியுளாயரி ளேதகவே யேழிசையாழவி ராவணனே.
பொழிப்புரை :
இறைவரின் திருவடிகளில் பேரன்பு செலுத்தும் அடியவராம் பசுக்கள் தன்வயமற்றுக் கிடக்க, கட்டிய ஆசை என்று சொல்லப்படும்
பெருங்கயிற்றைத் தண்ணளியால் அவிழ்த்தருள்பவரே. மிக வேகமாக ஓடும் மானின் தோலை அணிந்துள்ள பேரழகு
வாய்ந்தவரே. பொறுக்கலாகாத் தீவினைத் துன்பங்கள் தாக்க வரும்போது காத்தருள்வீராக! மன்னித்தற்கரிய குற்றங்கள் எங்களின்
சிறுமைத் தன்மையால் செய்தனவாகலின் அவற்றைப் பெரியவாகக் கொள்ளாது சிறியவாகக் கொண்டு பொறுத்தருள்வீராக!
ஏழிசைவல்ல இராவணன் செருக்கினால் செய்த பெரும்பிழையைத் தேவரீர் மன்னித்து அருளினீர் அல்லவா? (அடியேம்
சிறுமையால் செய்த பிழையையும் மன்னித்தருளும் என்பது குறிப்பு).
குறிப்புரை :
நேணவராவிழயாசைழியே, நே, அணவர், ஆ, விழ, யா, ஆசை, இழியே. நே அணவர் - (உமது திருவடியில்) நேயம் பொருந்தும்
அடியவராம், ஆ - பசுக்கள். விழ - தன் வயமற்றுக் கிடக்க. யா - (யாத்த) கட்டிய, ஆசை - ஆசையாகிய கயிற்றை. இழியே -
அவிழ்த்து விடுபவனே. அடியவரைப் பசுவென்று, ஆசையைக் கயிறென்னாமையால் ஏகதேச உருவகம். நேணவர் - நே + அணவர்
எனவும், யாசைழியே - யா, அசை, இழியே எனவும் பதம் பிரித்துக் கொள்க. யா + ஆசை = வினைத்தொகை; நேணவர் -
யாசைழியே இல்விரு தொடரும் மரூஉ முடிபின. வேகதளேரியளாயுழிகா - வேக(ம்) அதரி ஏரி, அளாய உழி, கா. வேகம் -
விலங்குகளில் வேகமாய் ஓடவல்ல மானின், அதள் தோலையணிந்த, ஏரி - அழகனே. (ஏர் - அழகு, இகர விகுதி.) அளாய உழி -
துன்பங்கள் எம்மைச் சூழ்ந்தவிடத்து. கா - காப்பாற்றுவாயாக. அளாய என்பற்கு வினை முதல் வருவித்து உரைக்கப்பட்டது.
காழியு(ள்)ளாய்! அரிளேதகவே. அரு, இளவு, ஏது, அகவே. ஏதம் - குற்றம். அது கடைக் குறைந்து ஏது என நின்றது. இளவு -
சிறுமைத் தன்மை. இளப்பம், இளந்தலை, இளக்காரம், எனவும் வழங்கும். உகரம் - பண்புப்பெயர் விகுதி. அஃகவே என்பது அகவே
என நின்றது. அருஏதம் - மன்னித்தற்கரிய குற்றங்கள். இளவு - (எமது) சிறுமைத் தன்மையால் செய்தனவாதலின், அஃகவே -
அவை மன்னிக்கத்தக்கன ஆகுக. (அஃகுதல் - சுருங்குதல் இங்குக் குறைந்து மன்னிக்கற்பாலது என்னும் பொருளில் வந்தது).
ஏழிசை இராவணனே - ஏழிசை பாடிய இராவணனுமல்லவா பெரும் பிழையும் மன்னிக்கப் பெற்றுத் திருவருளுக்குப்
பாத்திரமாயினான். யா - முன்னிலையசை. செருக்கினால் செய்த பெரும் பிழையை மன்னித்த கருணை, சிறுமையாற் செய்த
பிழைகளை மன்னிக்கவும் தகும் என மன்றாடியவாறு.
பாடல் எண் : 9
காலேமேலே காணீகா ழீகாலேமா லேமேபூ பூமேலேமா லேகாழீ காணீகாலே மேலேகா.
பொழிப்புரை :
காற்றாகி எங்கும் கலந்தருள்பவனே. மறைப் பாற்றலின் வழி எவ்வுயிர்க்கும் மயக்கம் செய்து பின் அருள் புரிபவனே. பூக்களில்
சிறந்த தாமரைப்பூவில் வீற்றிருக்கும் பிரமனும், திருமாலும், முறையே திருமுடியையும், திருவடியையும் காணுதலை ஒழித்த
வைரத் தன்மையுடையவனே! சீகாழி என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுபவனே. எங்களைக் கடைக்கணித்தருள்வாயாக.
உன் திருவடியைத் தந்தருளுவாயாக!.
குறிப்புரை :
காலே - காற்றாகி யெங்கும் கலந்தவனே. மாலே - எவற்றிற்கும் மாயம் செய்பவனே. மால் - மயக்கம். மாயம் - மாயனென்னும்
திருமாலுக்கும் மாயம்செய்பவனாகையினால் சிவ பெருமானுக்கு மாயனென்றொருபெயர் \\\"மறவனை யன்று பன்றிப் பின்சென்ற
மாயனை\\\' என்னும் சுந்தர மூர்த்தி நாயனார் திரு நள்ளாற்றுப் பதிகத்தாலும் \\\"மாயனே மறிகடல் விடமுண்ட வானவா\\\"
என்னும் திருவாசகம் செத்திலாப் பத்தானும் அறிக. மே - சிறந்த. பூ - மலர்ந்த. பூ மேல் ஏ(ய்) - பிரமனும். மாலே - மாலும்.
காலே - திருவடியையும். மேலே - திருமுடியையும். காண் - காணலை. நீ - ஒழித்த. காழீ - வைரத்தன்மையனே. காழீ! காண் -
கடைக்கணி. கால் ஈ - திருவடியைத் தருக. கா:-
பாடல் எண் : 10
வேரியுமேணவ காழியொயே யேனைநிணேமட ளோகரதே தேரகளோடம ணேநினையே யேயொழிகாவண மேயுரிவே.
பொழிப்புரை :
நறுமணமும், தெய்விக மணமும், பெருமையும், புதுமையும் கலந்து விளங்கும் சீகாழி என்னும் திருத்தலத்தில்
வீற்றிருந்தருள்பவனே! துன்பங்களை நீக்கி அருள்பவனே. பேரருள் உடையவனே. அதனை அள்ளிக்கொள்ளல் அகத்தவத்தாராகிய
சிவயோகிகளின் செய்கையே . புத்தர், சமணர்களின் மொழிகளை எண்ணுதலையும், நண்ணுதலையும் ஒழித்தருள்வாயாக!
இப்புறச் சமயத்தார் பன்னெறிகளில் புகாமல் காத்தருளும் திறம் நின் திருவடிக்கே உரியதாகும்.
குறிப்புரை :
வேரி - மணம். ஏண் - பெருமை. நவம் - புதுமை. காழியாயே:- ஏனை - துன்பத்தையும். நீள்நேம் - மிக்க அன்பையும். அடு -
முறையே ஒழி(த்தலும்) அள் - அள்ளிக்கொள்ளுதலுமாகிய செய்கை. ஓகரது ஏ - யோகிகளுடைய செய்கையே. தேரகளோடு -
தேரர்களின் உபதேசங்களோடு. அமணே - அமணர்களின் உபதேசங்களையும். நினை - நினைத்தலையும். ஏய் - அவரோடு
பொருந்துதலையும். ஒழி - ஒழிப்பீராக. காவணமே - அந்நெறிகளிற் சேராமற்காக்கும் திறம். உரிவே - உமக்கு உரியவேயாகும்.
உரிவே - உரியவே என்பதன் மரூஉ.
பாடல் எண் : 11
நேரகழாமித யாசழிதா யேனனியேனனி ளாயுழிகா காழியுளானின யேனினயே தாழிசயாதமி ழாகரனே.
பொழிப்புரை :
நேர்மையை அகழ்ந்து எறிவதாகிய, நெஞ்சத்தில் நிலைத்து எவரையும் துன்புறுத்தும் காமம், வெகுளி, மயக்கம் என்னும்
முக்குற்றங்களையும் அழித்தருள வல்லவனே. உலகுக்கெல்லாம் தாயாம் தன்மையை ஏற்றருளத் தக்கவன், ஒப்பில்லாத நீ
ஒருவனே. நன்மை புரிந்தருளுவதில் உயர்ந்தவனே! நாங்கள் தளர்ந்த இடத்து எங்களைக் காத்தருள்வாயாக! என்று நற்றமிழுக்கு
உறைவிடமாகவுள்ள திருஞானசம்பந்தப் பெருமான் சிவபெருமானைப் போற்றி அருளிய, பாடுவோர்களையும், கேட்போர்களையும்
உள்ளம் குழையச் செய்யும் இத்திருப்பதிகத்தை ஓதவல்லவர்கட்கு எந்தக் குறைவும் உண்டாகாது.
குறிப்புரை :
நேர் - நேர்மையை. அகழ் ஆம் - கல்லியெறிவதாகிய. இதய ஆசு - மனத்துக் கண் எழும் (காம வெகுளி மயக்கம் என்னும்) முக்
குற்றங்களையும். அழி - அழிக்கவல்லவனே. அழீ என்பதன் குறுக்கல்விகாரம். தாய் ஏல் நன் நீயே - உலகுக்கெல்லாம் தாயாந்
தன்மையை யேற்கத்தக்கவன் நீ ஒருவனே. \\\"மூவேழுலகுக்கும் தாயே\\\" என்ற திருவாசகத்தும் அறிக. (தி.8 புணர்ச்சிப்பத்து) வாழ்
+ ந் + அன் = வாணன் என்றாகியதுபோல ஏல் + ந + அன் = ஏனன் என்றாகியது. நல் - நன்மை புரிவதில். நீள் - மிக்கோனே. நீள்
முதனிலைத் தொழிற்பெயராய் ஆகுபெயர்ப் பொருளில் நின்று குறுக்கல் விகார முற்ற விளிவேற்றுமை. ஆய் உழிகா - தளர்ந்த
இடத்துக் காப்பாயாக. தமிழாகரன் - தமிழே உடம்பாக உடைய திருஞானசம்பந்தனே. காழியுளானின் - சீகாழிப் பதியானைப்பற்றிய.
நையே - கேட்டோர் மனம் குழைப்பதாகிய இப்பாடல்களை. நினையே - நினைத்துப் பாடவே. தாழ்(வு). குறைவும் - இசையா -
உண்டாகா.
|
|
|
Post by uma2806 on Sept 7, 2013 15:34:50 GMT 5.5
மிக்க நன்றி Kahanam! தமிழுக்கு அமுதென்று பேர்!! என்ன அழகு! தேவாரம் எத்தனை அழகு! தேவனின் ஆரம் அழகாகத் தான் இருக்க வேண்டும்!!
|
|
|
Post by Kanchi Periva on Sept 7, 2013 20:18:22 GMT 5.5
பிரமாதம், இத்தனை அருமையான கவிதைகளை அள்ளிப் பொழியும் திரு ரமணி ( saidevo) அவர்களுக்கும், இவற்றின் மூல காரணமாக என்றும் நின்று அருளை அள்ளி வழங்கும் ஸ்ரீ பெரியவாளுக்கும் நம் அனைவரின் வந்தனங்கள்.. மேலும் அருமையான விளக்கங்களையும் சேர்த்துக் கொடுத்த திரு kahanam அவர்களுக்கும் திருமதி uma2806 அவர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி...
|
|
|
Post by ramkumarnr on Sept 8, 2013 12:23:06 GMT 5.5
@ Ramani.... Arpudham enbathu siriyathey neengal koodutha kavithaiku ingu... @ Kahanam... Em Tamizh vazhga... Arumai!
|
|
|
Post by saidevo on Sept 9, 2013 8:23:25 GMT 5.5
என் கவிதைகளை மனமுவந்து பாராட்டும் எல்லோர்க்கும் நன்றி.
|
|
|
Post by arasar on Sept 19, 2013 14:27:21 GMT 5.5
மாலைமாற்றுப் பதிகத்தின் பொருள் அறிந்து உய்ந்தோம்..
|
|