Post by uma2806 on Apr 22, 2013 15:27:08 GMT 5.5
ருத்ராட்சம் எங்கே?
மூலம் “ மஹாபெரியவா தரிசன அனுபவங்கள் - ஐந்தாம் பாகம்
நினைவு கூர்ந்தவர் : - டி.நாராயணன், சென்னை - 33.
என்னுடைய தாத்தா ஸ்ரீ சின்னதுரை என்கிற கிருஷ்ணசாமி அய்யர் (எசையனூர் கிராமம்) மடத்தில் பணி செய்து வந்தார். பெரியவாள் வெளியே செல்லும் போது குடை பிடிப்பார்; பூஜைக்குச் சந்தனம் அரைத்துக் கொடுப்பார்.
எனக்கு ஆறு வயது நடந்து கொண்டிருந்தபோது, எசையனூரில் வியாஸ பூஜை நடத்தினார்கள். நான் என் அப்பாவுடன் மடத்துக்குப் போனேன். அப்போது, பெரியவா என்னைப் பார்த்துவிட்டு, ”எட்டு வயதில் இவனுக்கு ஒரு கண்டம் இருக்கிறது. நான் ஒரு ருத்ராட்சம் தருகிறேன். அதை இவன் கழுத்தில் கட்டு” என்றார்.
பெரியவா குடுத்த ருத்ராட்சத்தை, என்ன காரணத்தாலோ (என் போதாத வேளை) என் கழுத்தில் கட்டாமல், தினசரி பூஜையில் வைத்து விட்டார் என் தாத்தா.
இந்த விஷயம் குடும்பத்தில் எல்லோருக்கும் மறந்தே போய்விட்டது. ஆனால், விதி (பிரும்மா) மறக்கவில்லை. எட்டு வயதில், ஒரு மரத்தின் மேல் ஏறிக் கீழே விழுந்ததில், இடது காலில் கொஞ்சம் வீக்கம் ஏற்பட்டது. வீட்டு வைத்தியம், நாட்டு வைத்தியம் எல்லாம் பார்த்துவிட்டு, புத்தூர் வைத்தியத்துக்கு அழைத்துக்கொண்டு போனார்கள். “அப்போதே வந்திருக்கணும், இப்போ ஒன்றும் செய்யமுடியாது. விந்தி விந்தித்தான் நடக்கணும்”.
என் தகப்பனார், துரைசாமி அய்யர், காஞ்சிபுரம் சென்று, பெரியவாளிடம் சொல்லி, துக்கம் தாங்க முடியாமல் அழுதார்.
“நான் கொடுத்த ருத்ராட்சம் எங்கே?”
“அவன் கழுத்தில் கட்டும்படி உத்தரவாயிற்று. ஆனால், என் அப்பா, மிகவும் பூஜைக்குரிய பொருளாக வைத்துவிட்டார்.”
“அவனைப் பற்றிக் கவலைப்படாதே. நான் பார்த்துக் கொள்கிறேன்.”
எனக்குக் கல்யாணமாகி, குழந்தை குட்டிகளுடன் சௌக்கியமாக இருப்பதற்குக் காரணம் பெரியவா தான். என் தாத்தா, பெரியவாளுக்குச் செய்த கைங்கரியம் தக்க சமயத்தில், தக்க பலனைத் தந்தது. தெய்வப் பணி என்றைக்கும் வீண் போவதில்லை என்பதற்கு நானே சாட்சி.
ஜெய ஜெய சங்கர! ஹர ஹர சங்கர!!